மீளும் கருவூலம்



அள்ளித் தரும் நிலம்

வள்ளலார் என அழைக்கப்பட்ட சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைக்குப் பின்னர் தமிழ் மக்கள் தம்முடைய வேர்களைத் தேடும் பணிகளில் பல்வேறு வகைகளில் ஈடுபடத் தொடங்கினர். மொழிப்புலத்தில் மறைமலையடிகள், திரு.வி.., தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி எனத் தொடரும் ஒரு படையும் மெய்யியற் புலத்தில் . நெடுஞ்செழியன் போன்றோரும் இசையியற் புலத்தில் தமிழிசை மூவர்கள் தொடங்கி வீ.பா.. சுந்தரம், மம்மது எனத் தொடரும் ஒரு பெரும் படையும் நூலகவியற் புலத்தில் வே. தில்லைநாயகனாரும் பொறியியலற் புலத்தில் கொடுமுடி சண்முகம் போன்றோரும் இலக்கண இலக்கியக் கோட்பாட்டுப் புலத்தில் தண்டபாணி சுவாமிகள் தொடங்கி .வே.சு. வி.அய்.சு வழியாக எண்ணற்றோரும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மொழிந்தவை தவிர வெவ்வேறு துறைகளிலும் விதவிதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே வேளாண்மையிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகு முயற்சிகளில் ஒன்றுதான் பாமயன் என்னும் மு. பால்சுப்பிரமணியன் எழுதியஅள்ளித் தரும் நிலம்என்னும் நூலும் ஆகும். அந்நூலுக்கு நான் எழுதிய பதிப்புரை கீழே தருகிறேன். படித்த பின்னர் உருபாய் 120 விலையுள்ள அவ்வரிய நூலை வாங்க விரும்பினால்பனுவற்சோலை, 15/பி பயோனியர் குடியிருப்பு, திருமங்கலம் 625 706, மதுரை மாவட்டம்என்னும் முகவரிக்கு பணவிடையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதோ அப்பதிப்புரை:

மீளும் கருவூலம்

தம் பண்டங்களுக்குச் சந்தை தேடிய, தேடுகிற பேரரசியத்தின் (Imperialism) அகோரப் பசிக்கு உணவாக அதன் கொள்ளிவாய்க்குள் பன்னெடுங் காலமாக நம் முன்னோர் பட்டறிவில் உருவான நம் மண் சார்ந்த பல்வேறு தொழில் நுட்பச் செல்வங்களை வீசி எறிந்தோம். அவற்றுள் நம் வேளாண்மையும் ஒன்றாக இருந்தது. தொழில் நுட்பத்தின் பெயரால் அவை உமிழ்ந்த நச்சுகளை எல்லாம் வாரியெடுத்து அணைத்துக்கொண்டோம். நாகரிகம் அடைந்து விட்டதாக நம்பத் தொடங்கினோம். புதிதக் கோலம் (Modernity) புனைந்துள்ளோம் என்று புளகிதம் அடைந்தோம். நம் வயல்வெளி எங்கும் விதைகள் என்று நம்பி மரபீனி மாற்றக் கண்ணி வெடிகளை நடத் துடிக்கிறோம், உரங்களுக்கு மாற்றாய் வெடிப் பொருள்களை நிறைக்கிறோம், அதிக விளைச்சல் மாயையில் சிக்கி நோய்களை அறுவடை செய்கிறோம்.

காலம் செல்லச் செல்ல, இயற்கையின் கோலம் மாற மாற, நிலவெளி எங்கும் நேர்ந்த இழப்புகள், சங்க காலத் தமிழரைப் போல, மாந்தன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் தேவையை உணர வைத்துள்ளன. உலகு முழுவதும் வேர்களைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுநாள் வரை நாகரிகம் அற்றவர்களெனப் புனைந்து உரைக்கப்பட்ட பழங்குடியினரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும் தம் நினைவுக் கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த அறிவுச் செல்வங்களை திரட்டும் வேலைகள் ஆய்வாளர்களால் செயலுருப் பெறுகின்றன. வேளாண்மையின் வேர்களை மீட்கும் வேலையும் வெகுவேகமாய் நடக்கிறது.

இவ்வேர் மீட்புப் பணியின் விளைபொருள்களாய் வெளிவரும் எம்மக்கள் தம் பட்டறிவால் கண்டறிந்து குமுகாய உடமையாய் வைத்திருக்கும் அறிவுச் செல்வங்களுக்கு தன்பெயரில் முற்றுரிமை பெற பேரரசியம் முனைகின்றது. இந்நிலையில் குமுகாய அறிவுத்தொகுதியை குமுகாயத்திற்கு உடமையாக்குவதற்கும் பரவலாக்குவதற்கும் அதனை ஆவணப்படுத்தி பரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பணியின் ஒரு கூறாய், நம் மண் சார்ந்த வேளாண்மை முறைகளைத் திரட்டி, அறிவியல் நோக்கில் ஆய்ந்து, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி, இணைக்கத் தக்கன இணைத்து, களத்தில் ஆய்ந்து, விளைவுகளைக் கண்டறிந்த பின்னர் தேர்ந்த கோட்பாடுகளையும் தொழில் நுட்பங்களையும் தொகுத்து நூலாக்கி தங்கள் கைகளில் தந்திருக்கிறோம். படியுங்கள். பயன்படுத்துங்கள். பரப்புங்கள்.

இந்நூலாக்கப் பணியை அறிஞர் பாமயன் அரும்பாடுபட்டு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி.

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...