பா. ச. க.வும் காங்கிரசும் பதறுவது ஏன்?

பெரியவர்கள் சிலர், தாங்கள் வலிமையானவர்கள் எனக் காட்டவதற்காகக் கட்டிய காகித மாளிகையை அவ்வழியாக ஓடிவந்த சிறுவர்கள் ஒரே தட்டில் தடதடவெனச் சரியச் செய்வதைப் போல பாரதிய சனதா கட்சியினர் கடந்த சில ஆண்டுகளாக ஊதிப் பெருக்கச் செய்துகொண்டிருந்த “மோடி அலை” என்னும் காகித மாளிகையை தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தம்மை அறியாமலேயே தட்டிச் சரித்துவிட்டனர்.



2013 திசம்பரில் மத்தியபிரதேசம், சட்டீசுகர், இராசசுதான், மிசோசரம், தில்லி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றுள் பா.ச.க. தான் ஏற்கனவே ஆண்டுகொண்டிருந்த மத்தியபிரதேசம், சட்டீசுகர் ஆகிய மாநிலங்களைத் தக்க வைத்துக்கொண்டது. கடந்த சில தேர்தல்களில் பா.ச.க., காங்கிரசு என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி ஆட்சியை ஒப்படைத்த இராசசுதான் மக்கள் இம்முறை ஆட்சியை காங்கிரசிடமிருந்து பறித்து பா.ச.க.விடம் கொடுத்துவிட்டனர். மிசோரத்தில் பா.ச.க.விற்கு வேர்களே இல்லாததால் அம்மாநிலத்தை ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த காங்கிரசு தக்க வைத்துக்கொண்டது.



காங்கிரசும் பா.ச.க.வும் தமது வலிமையை நாட்டிற்குக் காட்டுவதற்கான களமாக தில்லி சட்டமன்றத் தேர்தலை நம்பின. அத்தேர்தலில் காங்கிரசு, பா.ச.கட்சி ஆகியவற்றோடு கடந்த 2012 அக்டோபர் 2ஆம் நாள் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சியால் பா.ச.க.வின் வாக்குகள் பிரிந்து தாம் வென்றுவிடலாம் என காங்கிரசும், காங்கிரசின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையால் அதன் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்து தாம் ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என பா.ச.க.வும் தேர்தலின் பொழுது நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேர்தல் முடிவோ வேறுவிதமாக அமைந்துவிட்டது. தில்லி சட்டமன்றத்திற்கு உரிய 70 தொகுதிகளில் பா.ச.க. 32 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளையும் காங்கிரசு 8 தொகுதிகளையும் ஐக்கிய சனதாதளம் 1 தொகுதியையும் தனிவேட்பாளர் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன. ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை தில்லியில் பா.ச.க.வை கரை சேர்க்கவில்லை. பலரும் எதிர்பார்த்ததைப் போல காங்கிரசு ஆட்சியை இழந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது.



ஆட்சியமைக்க குறைந்தது 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் அதிக தொகுதியை வென்ற பா.ச.க. விற்கு ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குதிரைபேரம் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் அக்கட்சிக்கு இல்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை வேண்டிப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பா.ச.க.விற்கு இருந்தது. ஆனால், “மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்; அது எங்களது நோக்கமன்று” என ஆம் ஆத்மி கட்சியினர் அப்பொழுது கூறிவந்தனர். எனவே, தாம் ஆட்சி அமைக்க மறுத்தால் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு இச்சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். அதுவரை மோடி அலை என்னும் மாயவலையைத் தொடர்ந்து பின்னி, நாடாளுமன்றத்தையும் தில்லி சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் பிடித்துவிடலாம் என பா.ச.க. கருதியது. எனவே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்தது. பா.ச.க. எதிர்பார்த்தபடியே தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை செயலாக்கம் செய்யும் நடைமுறைகள் தொடங்கின.



இதற்கிடையில் அரசியல் நோக்கர்கள், ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதன் மூலம் மறுதேர்தல் என்னும் செலவைத் தவிர்க்கலாம் எனக் கருத்துக் கூறத் தொடங்கினர். வீசுவதாகக் கூறப்படும் மோடி அலையை துடைத்து எறிய விரும்பிய காங்கிரசு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகக் கூறியது. இச்சூழ்நிலை மாற்றம் ஆம் ஆத்மி கட்சியினர் மனதில் மாற்றத்தை மெல்ல மெல்ல உருவாக்கியது. தாம் ஆட்சி அமைக்க உதவும் கட்சி, தாம் விதிக்கும் 18 கட்டளைக்கு உட்பட வேண்டும் எனக் கூறி அவற்றை காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தது. பா.ச.க. அக்கட்டளைகளை ஏற்க மறுத்தது. காங்கிரசு அவற்றுள் 16 கட்டளைகள் நிர்வாகம் தொடர்பானவை; அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சி தானே நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் 2 கட்டளைகள் மட்டுமே சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியவை; அவற்றிற்கு தம் ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியினர், ஆட்சிக்காக தம் எதிரியோடும் கைகோர்த்துக்கொண்டவர்கள் என்னும் முத்திரை தம் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களிடம் கருத்துக் கேட்டல் என்னும் முறையை அறிமுகம் செய்து தில்லி வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டனர். சில நாள்களுக்குப் பின்னர் காங்கிரசு கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தமக்கு மக்கள் ஆணையிட்டுவிட்டார்கள் எனக் கூறி அமைச்சர்களின் பட்டியலை அறிவித்து அரவிந்த் கெசுரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



பா.ச.க. தான் எதிர்பாராத இந்தத் திருப்பத்தைக் கண்டு திகைத்துப்போய் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கவனமாகக் கட்டமைக்கப்பட்ட “மோடி அலை”, ஆம் ஆத்மியால் துடைத்து எறியப்பட்டதாலும் அந்நிலை அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் பாதிக்குமோ என்னும் அச்சத்தாலும் பதறித் துடிக்கிறது. அண்ணா கசாரே உண்ணாவிரத்தை அடுத்து நடந்த நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஒன்றில் அரவிந்த் கேசிரிவாலின் தூண்டுதலில் அண்ணா கசாரே காங்கிரசை எதிர்த்து பரப்புரை ஆற்றியதை நட்போடு வரவேற்ற பா.ச.க. இப்பொழுது அதே அரவிந்த் கெசிரிவாலை நம்பிக்கைத் துரோகியாகப் பார்க்கிறது. ஆம் ஆத்மிக் கட்சியினர் தில்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் எனப் பிதற்றத் தொடங்கி இருக்கிறது. அதன் பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிரொலிக்க இருக்கிறது.

அதேவேளையில் பூனை மடியில் கட்டிக்கொண்டு திருடப் போனதைப் போல, மோடி அலையை துடைக்க ஆம் ஆத்மிக் கட்சியினரை ஆதரிக்கிறமோ என்னும் அச்சம் காங்கிரசிற்கு இருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டி எடுப்போம்; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியினர் பேசத் தொடங்கி இருப்பது காங்கிரசு கட்சியினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி இருக்கிறது. எனவேதான் காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சனார்த்தனன் திவேதி, ஆம் ஆத்மி கட்சியினர் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என சில நாள்களுக்கு முன்னர் கூறி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினர் அவ்வாறு ஈடுபட்டால் சரண்சிங், சந்திரசேகர் போன்ற பெரும்புள்ளிகளையே, பஞ்ச தந்திரங்களில் ஒன்றான அடுத்துக்கெடுத்தலைப் பயன்படுத்திக், கவிழ்த்த தங்களால் அரசியல் அனுபவம் அற்ற அரவிந்த் கெசிரிவாலையும் கவிழ்த்துவிட முடியும் என காங்கிரசு நம்பிக்கொண்டு இருக்கிறது.

எனவே பா.ச.கட்சியை பதற வைத்திருக்கிற, காங்கிரசு கட்சிக்கு உதறலைக் கொடுத்திருக்கிற ஆம் ஆட்சியின் ஆட்சிக் காலம் ஒரே ஒரு நாளாகவும் இருக்கலாம் ஐந்தாண்டுகளாகவும் இருக்கலாம்; அது அவர்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையைப் பொறுத்து இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

நிலமற்ற ஏழைகளுக்கு நிலவுரிமை

வே. வேங்கடாசலபதி சிவகங்கையில் வாழும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தலித்கள், குழந்தைகள், மீனவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து வினையாற்றுபவர். அவை பற்றி கட்டுகரைகளும் பாடல்களும் இயற்றும் இவர், கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு பெயரன் முறையினர். 2010 செப்டம்பர் 19 ஆம் நாள் நிலவுரிமை பற்றி எழுதிய கட்டுரை இங்கே பதியப்படுகிறது.


உயிரினங்களுக்கு இயற்கை அளித்துள்ள உன்னதமான பரிசுகளில் நிலம் ஒன்றாகும். உயிர் வாழ்க்கை இப்பூவுலகில் தொடருவதற்கு நிலமும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இன்னும் கண்ணுக்குப் புலப்படதா எண்ணற்ற உயிரனங்கள் நிலமகளுக்கு உறுதுணையாக உள்ளன. இயற்கையை அண்டி வாழ்ந்தாலும் இவ்வுயிரினங்கள் இயற்கையின் எதிரிகளாக இருப்பதில்லை. மனித இனம் மட்டுமே இயற்கையை வரம்பற்று சுரண்டி வாழ்கின்றது. மனித இனம் இயற்கை வளங்கைள தன் சுயதேவைகளுக்கு மிதமிஞ்சிய போக்கில் சுரண்டி அழிக்கிறது. இயற்கையின் விதிமுறைகளையும், தன்மைகளையும் அறிந்து அதற்கு தக்கவாறு மனித இனம் இயற்கையை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறிந்தோ அறியாமலோ நடக்கும் இந்தச் சுரண்டல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் போகின்றது. இந்தச் சுரண்டலைத் தாங்காமல் இயற்கையும் தனது வலுவை அவ்வப்பொழுது காட்டத் தவறுவதில்லை. ஆனால், மனித இனம் இயற்கையின் அச்சுறுத்தலையெல்லாம் சிறிதும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இவ்வாறாகிய தவறான இயல்பு வளர்ந்துருப்பெற்ற மனித இனம் தனக்குள்ளேயும் சுரண்டல் விளையாட்டுகளை ஆடுகின்றது. தன்னைவிடப் பன்மடங்கு வலுவாய்ந்த இயற்கையையே தனக்கு அடிமையாக்க எண்ணும் மனிதர்கள், தங்களுக்குள்ளேயும் அடிமைப்படுத்தி வைக்கவும், சுரண்டலுக்குள்ளாக்கவும் ஒரு தரப்பினரை உருவாக்கி வைத்துள்ளனர். வளங்களும் வாய்ப்புகளும் வளர்ச்சியும் சமமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பது நெறியாகும். இந்நெறிக்கு மாறாக சமூகத்தின் போக்கு இருக்குமேயாயின், அதைச் சீர்படுத்தி செம்மை செய்வது மனித நேயம், சமூக நீதி, சம மேம்பாடு, இயற்கைசார வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டோருக்கு முதல் பணியாகும். இயற்கைப் பொதுவளமான நிலம் சமனற்ற வகையில் உடைமையாக்கப்பெற்றும் எதிர்மறைப் பயன்பாட்டிற்கு மிகுதியாக உட்படுத்தப்பெற்றும் பல்வேறு வகையான சமூக-பொருளாதார ஏற்றதாழ்வுகள் உண்டாகி நிலைக்க அடிப்படையானதாகவும் மாற்றப்பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் நிலவுடைமையானது சமூகப் பொருளாதார தரவரிசையைத் தீர்மானிப்பதாகவும், ஓட்டு அரசியலை நிர்ணயிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த நிலவுடைமை ஒரு சாராரிடம் மிகுதியாக இருக்கும் பொழுது நிலவுரிமை மறுக்கப்பெற்று வஞ்சிக்கப்பெற்ற வர்க்கம் ஒன்று உருவாகின்றது. தங்கள் உடலுழைப்பைத் தவிர பொருளீட்ட உதவும் பெரிய அளவிலான வேறெந்தப் பொருள் வளங்களோ, சொத்துகளோ இல்லாத உழைக்கும் ஏழை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதே இவ்வர்க்கம். இவ்வாறாகிய ஏற்றதாழ்வு மிக்க சமூக-பொருளாதாரச் சூழலில் சமமான மேம்பாடு, நீடித்த மேம்மாடு என்பதெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, நிலம், நிலவுடைமை தொடர்புடைய அநீதிகளையும், சர்ச்சைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தீர ஆராய்ந்து திட்டம் வகுத்துச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. நிலமற்ற ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்காத இன்றைய சமூக அமைப்பு, பொருளாதாரத் திட்டங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே! ஓட்டு அரசியலைத் தாண்டியதொரு சாமான்ய மக்களின் அரசியல் உள்ளது. அதை வலுப்படுத்தி நடைமுறையில் செயல்படச் செய்தல் நிகழ்காலத்தின் நிர்ப்பந்தம். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை எட்டிப்பிடிக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய உத்தியாகும். இதை நோக்கி மக்களை ஈடுபடுத்தும் செயல்பாடுகளைத் தொடங்கும் தருணம் இது. வஞ்சிக்கப்பெற்ற நிலமற்ற ஏழை மக்களின் எழுச்சியும் கூட்டுச் செயல்பாடும் வன்முறையற்ற வழிகளில் ஒருமுகப்படுத்தப்பெற வேண்டும். எட்டுத் திக்கிலும் இதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட வேண்டும். விடுதலைப் போராட்டம் காலம் தொடங்கி நமது நாட்டில் நடைபெற்ற எல்லா வகையான அறப்போராட்டங்களிலும் சாமான்ய மக்களின் பங்கேற்புதான் வெற்றி இலக்கை அடைய வித்தாக அமைந்தது. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வஞ்சிக்கப்பெற்ற ஏழைகளின் எழுச்சியில் புதிய வரலாற்றின் தொடக்கம் நிகழும். சமத்துவமும், மனித நேயமும் தழைக்க வகை செய்யும் முன்னேற்றமான சமூக மாற்றமே உன்னதமான இலட்சியம். இந்த இலட்சியத்தை நோக்கிய நமது பயணம் தடைகளும் சவால்களும் மிக்கதாக இருக்கும். எனினும் பயணத்தைத் தொடங்கியே தீருவோம். இந்த இலட்சியப் பயணத்தை ஓட்டு அரசியல் சாராத பொதுநல இயக்கங்கள், தன்னார்வ சமூக செயல்பாட்டு அமைப்புகள், குடிமைச் சமுதாய அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து வழிநடத்த வேண்டும். சமூக அக்கரையுள்ள நாட்டுப்பற்றாளர்கள் இந்தப் பயணத்தில் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு போராட்ட உத்திகளை வடிவமைத்து உறுதி குறையாது போராட வேண்டும். மகாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய விநோபா பாவே, ஜயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியோர்கள் கையாண்ட வன்முறையற்ற போராட்ட உத்திகளை அங்கீகரித்து ஏற்று நமது இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்;. நிலமற்ற உழைக்கும் ஏழைமக்களின் பெருவாரியான ஆதரவும், எழுச்சியும் இந்த இலட்சியத்தை அடைய நமக்கு வலுவான ஆதாரமாக அமையும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக்கப்பட வேண்டும். உண்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அறவழியில் போராட களம் அமைக்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அழைப்பு



நேற்று காலை 8.30 மணிக்கு அலுவலகத்திற்கு பேருந்திற்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி "பீப்" என ஒலித்தது. வலது கையிலிருந்த பையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, சட்டைப்பையில் இருந்து கைபேசியை எடுத்துப்பார்த்தேன். +61 எனத் தொடங்கும் எண் திரையில் மின்னியது. வெளிநாட்டு அழைப்பு எனத் தெரிந்தது. பேருந்தின் குலுக்கலில் யார்மீதும் மோதிவிடவோ, விழுந்துவிடவோ வகையில் நின்றுகொண்டு அழைப்பை ஏற்று கைபேசியைக் காதிற்குக் கொண்டுபோனேன்.

"வணக்கம்! அரி" “வணக்கம்! நீங்கள் அரிஅரிவேலன் தானே?” “ஆமாம்” “சில நிமிடங்கள் பேசலாமா?” “ம்ம்ம்…” அப்பொழுது பேருந்திற்குள் அலறிக்கொண்டிருந்த குத்துப்பாட்டின் ஒலியையும் மீறி ஓட்டுநர் ஒலிப்பானை அழுத்த, எதிர்முனையில் இருப்பவர் என்ன சொன்னார் என்பதே காதில் விழவில்லை. "பேருந்தில் இருக்கிறேன். பத்து நிமிடம் கழித்து கூப்பிடுகிறீர்களா?" என்றேன். "சரி ஐயா, அழைக்கிறேன்" என்றார் எதிர்முனையில் இருந்தவர்.

பத்து நிமிடம் கழித்து கைபேசி அழைத்தது. நான் அலுவலகத்தின் வாசலில் இருந்தேன். எடுத்து பார்த்தால் அதே எண்.

“வணக்கம். அரி பேசுகிறேன்.” “வணக்கம். நான் செல்வராஜ். ஆஸ்திரேலியா வானொலியில் இருந்து பேசுகிறேன். இது இந்திய நாட்டில் அகில இந்திய வானொலியைப் போல ஆஸ்திரேலிய வானொலி. இதன் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நான். இந்த வானொலியில் தமிழகத்தின் அரசியல் நிலையைப் பற்றிய கருத்தை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்களிடம் பேட்டிகண்டு ஒலிபரப்புவோம். ஞாநி, சிகாமணி போன்றவர்கள் அவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார்கள். இம்முறை நீங்கள் கருத்துக் கூற முடியுமா?”

'பார்ரா, உன்னோட புகழ் ஆஸ்திரேலியா வரைக்கும் பரவி இருக்கிறது' என்று கிண்டல் செய்தது மனம் ஒரு பக்கம். மறுபக்கம் 'வேறு யாரே என நினைத்துக்கொண்டு நம்மிடம் பேசுகிறார்' என எண்ணியவாறே, “என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எனது எண் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?” என வினவினேன்.

“நண்பர் கொடுத்தார். அவர் உங்களுடைய எழுத்துகளைப் படித்திருக்கிறார். அதனால்தான் அழைத்தேன்” “அப்படியா?” “ஆமாம். முகநூலில் படித்திருப்பார்போல” “சரி. இப்பொழுது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ “இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பற்றி இரண்டு அல்லது மூன்று கேள்விகளை நான் கேட்கிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். அதிலிருந்து சில துணைக்கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கும் பதில் சொல்லுங்கள். அவற்றை நான் பதிவுசெய்துகொள்கிறேன்.” “நான் இப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறேன். அதனால் உடனடியாகப் பதிவு செய்ய இயலாதே!” “இப்பொழுது கேள்விகளை முடிவுசெய்துகொள்வோம். உங்களது அலுவலக நேரம் முடிந்ததும் பதிவுசெய்துகொள்வோம்” “சரி. உங்களின் வினாகளைக் கூறுங்கள்”

அவர் மூன்று வினாகளைக் கூறினார். மூன்று மணிநேரம் கழித்து அழைத்து எனது துலங்கள்களை பதிவு செய்துகொள்வதாகக் கூறினார். இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன்.

சரியாக பிற்பகல் ஒரு மணி. கைபேசி தும்மியது. “நண்பரே! பதிவுசெய்துகொள்ளலாமா?” “பதிவு செய்துகொள்ளலாம்”

அவர் வினாகளையும் துணை வினாகளையும் வினவினார். நான் எனது கருத்துகளைக் கூறினேன். ஏழு மணிகளுக்குள் அச்செவ்வி முடிந்தது. அது ஒலிபரப்பானதும் அதன் இணைய உரலியை அனுப்பவாதக் கூறினார். கூறியதைப் போலவே அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத்தான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்; கேட்டு உங்களின் கருத்துகளைக் கூறுங்கள்.

அந்த நண்பர் ஆஸ்திரேலியாவில் இருந்து பேசியதும் மொழிக்கலப்பின்றி தமிழைப் பேசியதும் “ழ”கரத்தை பிழையின்றி ஒலித்ததும் அவர் ஈழத்தமிழராக இருப்பாரே என எண்ண வைத்தது. வினவினேன். “இல்லை. ஈழத்திற்கு அருகில் இருக்கிற இந்திய நாட்டின் கன்னியாகுமரிப் பகுதியில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவன்’ என்றார். கடல்கடந்து சென்று அயலகத்தில் தமிழ்ப் பணியாற்றுகிற, தாயகத் தமிழகத்தின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கிற அந்நண்பர் திருமிகு செல்வராஜ் வாழ்க!

அவரிடம், என்னை யாரென்றே தெரியாமல் அரசியல் கருத்துக்குரைக்கும் இதழாளர் என அறிமுகம் செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அவருக்கு “நன்றி” கூற வேண்டும் 

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/307650/t/Would-Jeyalalitha-be-next-PM-of-India/in/language

குன்றும் நீர்வளமும் பெருகும் நீர்த்தேவையும்

ஆழ்குழாய்க் கிணற்றுக் குழிக்குள் தவறிவிழுந்து மாண்டுபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அண்மைக்காலத்தில் அதிகரித்து இருக்கிறது. இச்சமூகம் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமையை மதிக்கவில்லை; அந்நிலத்தின் உரிமையாளருக்கும் ஆழ்குழாயைத் தோண்டும் ஒப்பந்ததாரருக்கும் பொறுப்பில்லை; குழிக்குள் விழுந்துவிட்ட குழந்தையை உடனடியாக மீட்கத் தேவையான கருவிகள் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை ஆகியன போன்றவை இந்நிகழ்விற்கான காரணிகள் என்னும் பட்டியலில் ஓரளவு உண்மை இருக்கிறது; ஆனால் இப்பட்டியலே முழு உண்மை அன்று. அந்த நிலத்தின் உரிமையாளர் ஆழ்குழாய் கிணற்றை அமைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்னும் வினாவிற்குள்தான் இந்நிகழ்வின் முழுக்காரணமும் மறைந்து இருக்கிறது.



ஒரு தலைமுறைக் காலத்திற்கு முன்னர் பருவ மழை பொய்க்கிற பொழுதில் மட்டுமே தமிழகம் வறட்சியால் வாடியிருக்கிறது; ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் நீர்ப்பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே போகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் 40 அடி ஆழம் உள்ள கிணற்றிலிருந்து கமலையைக்கொண்டு நீரை இறைந்த உழவர், இன்று 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறைத் தோண்டி மின்னேக்கியைப் (Electric pump) பயன்படுத்தி நீரை இறைக்கிறார். எனினும் அவரால் வேளாண்மைக்குத் தேவையான அளவிற்கு நீரைப் பெற முடியவில்லை. எனவே, வேறோர் இடத்தில் ஆழ்க்குழாயைத் தோண்டுகிறார்; அங்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. அவர் அந்த ஆழ்குழாயை அப்படியே கைவிட்டுவிடுகிறார். அவ்வாறு கைவிடப்பட்ட குழிக்கு அருகில், தன் மூதாதைகள் ஓடி விளையாடிய ஊர்ப்பொது இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதால் தனக்கான விளையாட்டிடத்தை இழந்த, குழந்தை விளையாட வந்து தவறி அக்குழாய்க்குள் விழுந்துவிடுகிறது. அதாவது கடந்த 40ஆண்டுகளில் படிப்படியாக குன்றிவரும் நீர்வளமும் பெருகிவரும் நீர்த்தேவையும் உழவரின் பிழைப்புப்பாட்டிற்கான வளத்தைப்பெறும் உரிமையையும் (Right to access livelihood resources) தட்டிப்பறிக்கப்பட்டதன் விளைவாக அவர்தம் குழந்தைகளின் பாதுகாக்கப்படும் உரிமையையும் (Right to Protection) காவுவாங்குகின்றன.

நீர்வளம் குன்றியது ஏன்?

சோவியத்து நாடு உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மேம்பாட்டு வாய்பாட்டை பிசிறுதட்டாமல் விடுதலை பெற்ற இந்தியா 1990 ஆம் ஆண்டு வரை பின்பற்றியது. அவ்வகையில் ஏறத்தாழ இந்திய நதிகளின் அனைத்தின் குறுக்கே பேரணைகள் கட்டப்பட்டன. அணைக்கு மேலே மலையின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள் குளம்பி, தேயிலை ஆகியன போன்ற பணப்பயிர்களுக்காக அழிக்கப்பட்டன. கானகங்கள் மரங்களுக்காக அழிக்கப்பட்டன. அதன் விளைவாக மலையில் இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு குறைந்தது. இதனால் மழைப்பொழிவின் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. குறைந்தளவாக வழிந்தோடும் நீரும் பேரணையில் தேங்கி நின்றுவிட்டது. ஆறுகளில் நீரோட்டம் குன்றியது; அணையில் இருந்து தொடங்கி நதியானது கடலுக்குற் சென்று முடிவடையும் இடம் வரை உள்ள பகுதியின் சூழலமைவு சிதைந்தது. ஆற்றில் வழிந்தோடும் நீரைச் சேமித்து வைப்பதற்காக வெட்டப்பட்ட குளம், குட்டை, ஊருணி, கண்மாய், ஏரி ஆகியன போன்ற நீர்நிலைகள் வறண்டன. பின்னாளில் அந்நீர்நிலைகள் மூடப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு படிப்படியாகக் குன்றத் தொடங்கியது. எனவே வேளாண்மையைச் சார்ந்திருந்த மக்கள் வாழ்க்கைப்பாட்டை இழந்து ஊரகப் பகுதியில் இருந்து நகரத்தை நோக்கி நகர்ந்தனர். மறுபுறம் மேம்பாடு என்ற பெயரால் நகரங்கள் வீங்கத் தொடங்கின. அந்நகரங்களுக்குத் தேவையான நீர், கிராமத்து நீர்நிலைகளில் இருந்து சுரண்டப்படுகின்றது. இதனால் எங்கெங்கும் நீர் வளம் குன்றியது.



நீர்த்தேவை பெருகியது ஏன்?

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொய்த்துப்போன “பசுமைப்புரட்சி” 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வேதி உப்புகளும் பூச்சிக்கொல்லிகளும் வயல்வெளிகளில் கொட்டப்பட்டன. இதனால் இயற்கை உரங்களும் உயிரிகளும் மறைந்தன. நிலத்தின் ஈரத்தன்மை உலர்ந்து வறண்டது. வேளாண்மைக்குப் பெருமளவு நீர்த் தேவைப்பட்டது. ஆனால் மறுபக்கம் நீர்நிலைகள் கட்டிடங்களால் நிரப்பப்பட்டன. நீர்த் தேவையும் பற்றாக்குறையும் பேருருக்கொண்டு எழுந்துநின்கின்றன. இந்நிலையில் 1990 ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைக்கப்பட்ட உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றில் நீர் வணிகப் பொருளாக மாறிவிட்டது. இதன்விளைவாக பன்னாட்டுக் கும்பணிகள் நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சுகின்றன. இதனால் சிறு நிலவுடைமையாளர்கள், பொதுமக்கள் தம்முடைய குறைந்தளவு நீர்த்தேவைக்காக நவீனத் தொழில்நுட்பம் என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளை கணக்கு வழக்கு இன்றி அமைத்து பல நூறு அடிகள் வரை போட்டிபோட்டுக்கொண்டு நிலத்தைத் துளைக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் நாள்தோறும் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டே இருக்கிறது. நீரற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் தமது வாயைத் திறந்து குழந்தைகளைக் காவுவாங்கக் காத்துக்கொண்டு இருக்கின்றன.

என்னதான் தீர்வு?

எனவே, அழிந்துகொண்டிருக்கும் நீர்நிலைகளை மறுசீரமைப்பதும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் பொதுநிலங்களை மீட்டெடுப்பதும் இந்த அவலநிலையை மாற்றுவதற்கான முதல் தேவையாக இருக்கின்றன. அழிக்கப்பட்ட கானகங்களை மீண்டும் உருவாக்குவதும் பணப்பயிர் தோட்டங்களின் அளவு விரிவாக்காது இருப்பதும் மலைகள் மீது நிகழும் குடியேற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதும் இரண்டாவது தேவையாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறையாகச் செயற்படுத்த மக்களின் பிழைப்புப்பாட்டு வளங்களான நீர், நிலம், காடு, காற்று ஆகியவற்றின் மீது மக்களின் கட்டுப்பாட்டு உரிமையை உறுதிசெய்வதும் உடனடித் தேவையாக இருக்கிறது. இவற்றை அரசு செய்யும் எனக் காத்திராமல், மக்களே தம்முடையை கூட்டியக்கத்தின் வழியாக அறவழியில் முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி நேர்ந்திருக்கிறது. அந்நெருக்கடியை எதிர்கொள்வோமா?

வலைக்காட்டில் இந்த வலைப்பூ

வலைக்காடு – இது எழுத்தாளரும் ஆசிரியருமான இரா.எட்வின் புதிய தரிசனம் இதழில் எழுதிவரும் தொடரின் பெயர். இத்தொடரில் கடந்து எட்டு இதழ்களில், இதழுக்கு ஒன்றாக எட்டு வலைப்பூகளை அறிமுகம் செய்திருக்கிறார். அவ்வரிசையில் 2013 அக்டோபர் 01-15 நாளிட்ட இதழில் ஒன்பதாவது வலைப்பூவாக “களம்” என்னும் இவ்வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கிறார் தனக்கே உரிய அழகிய நடையில். அக்கட்டுரையின் ஒளிப்படங்கள் இதோ:



கட்டுரையை முழுமையாகப் படிக்க:
* http://www.eraaedwin.com/2013/10/9_8.html
* http://puthiyadarisanam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/

மாற்று அணி மலருமா?

அவன் ஓர் அடிமை. இளவரசியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். செய்தியை அரசன் அறிந்தான். வட்டரங்கின் நடுவில் அடிமை நிறுத்தப்பட்டான். அரசன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அரங்கின் அடுக்கு இருக்கையில் மக்கள் அமர்ந்து இருந்தார்கள். முழுவதும் மூடப்பட்ட இரண்டு பெரிய கூண்டுகள் வட்டரங்கிற்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றினுள் அவன் காதலியும் மற்றொன்றில் பலநாள்களாகப் பட்டினிகிடக்கும் சிங்கமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கூண்டுகளில் ஒன்றை அடிமை திறக்க வேண்டும் என்றும் திறக்கப்படும் பெட்டிக்குள் காதலி இருந்தால், அவளை அவன் மணந்துகொள்ளலாம் என்றும் சிங்கம் இருந்தால் அதற்கு அவன் இரையாக வேண்டும் என்றும் அரசன் அறிவித்தான். அடிமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தான். நல்லவேளையாக அதற்குள் சிங்கம் இல்லை; ஆனால் உள்ளே இருந்த கொடிய நஞ்சினையுடைய கருநாகம் ஒன்று அந்த அடிமைக் கொத்துவதற்காக சீறிக்கொண்டு வந்தது. உயிர்பிழைக்க வேண்டும் என்னும் தவித்த அடிமை மற்றொரு பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்த சிங்கம் வெளியே வந்து அவனைத் துரத்தத் தொடங்கியது.

இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே திங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்து இந்திய நாட்டைக் காப்பது என்னும் குழப்பம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்து இருக்கிறது.


ஒருபக்கம் ஊழல் சாக்கடையில் ஊறி சொரணையே அற்றுப்போன, இந்திய தேசிய காங்கிரசின் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; மறுபக்கம் இந்தியாவின் இனப்படுகொலை நாயகனான நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கும் இராசுடிரிய சுயம் சேவக்கு (ஆர்.எசு.எசு.) அமைப்பின் அரசியல் அமைப்பான பாரதிய சனதா கட்சியின் தலைமையிலான வலதுசாரிகளின் கூட்டணி. எனவே இந்திய வாக்காளர்கள், தம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள வேண்டியவர்கள் ஊழல்வாணர்களா, மதவெறியர்களான காவிபயங்கரவாணர்களா என்பதனை முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற ஊழல்களையும் அவை தொடர்பான கோப்புகள் களவு போவதையும் கண்டு மனம்நொந்து இருக்கும் சிலரோ, “நரேந்திர மோடி திறமையான ஆட்சியாளர்; கதிரொளி மின்னாற்றலால் அம்மாநிலத்தின் மின்சாரத் தேவையை நிறைவுசெய்த செயல்வீரர்; இந்தியாவிலேயே மதுவிலக்கை கடைபிடிக்கும் ஒரே மாநிலத்தின் முதல்வர்; வளர்ச்சியின் நாயகன்; எனவே அவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனக் கதைக்கிறார்கள். இவர்கள் நரேந்திர மோடியைப் பற்றி அவரது பொதுமக்கள் தொடர்பு நிறுமம் (Public Relation Company) கட்டமைக்கும் பிம்பத்தைப் பார்த்து மயங்கி இருப்பவர்கள்; கடந்த ஆண்டில் அவர் நடித்த உண்ணாநோன்பு நாடகத்தால் கிறுகிறுத்துப்போய் அவரது, குருதிக்கறை படிந்த, கைகளைப் பற்றிக் குலுக்கத் துடிப்பவர்கள். இந்த மயக்கமடைந்தவர்கள் அணியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வைத்தியநாதபுரம் இராமையர் மகன் கிருட்டிணய்யர் என்னும் வி. ஆர். கிருட்டிணய்யர் செப்டம்பர் 25ஆம் நாள் சேர்ந்திருப்பதுதான் நகைமுரணாக இருக்கிறது. அவர், “பிரதமர் தேர்தலில் மோடியை ஆதரிப்பதற்கான தேசியத் தேர்தலறிக்கையில் இணைக்கப்பட வேண்டிய எனது ஏழு கருத்துகள்” என்னும் பின்வரும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்:



1. நான் மதுவிலக்கையும் கதிரொளி மின்னாற்றல் திட்டங்களையும் ஆதரிக்கிறேன்.

2. நான் சமுதாயவுடைமையை (Socialism) உறுதிப்பாட்டால் ஆதரிக்கிறேன். சமுதாயவுடைமைப் பொருளாதாரத்தை மோடி ஆதரிக்கவில்லை என்றால், அவரை நான் எதிர்ப்பேன்.

3. நான் மதச்சார்பின்மையை ஆதரிக்கிறேன். அவர் இசுலாமியருக்கு எதிரானவராகவும் இந்திய ஒருமைப்பாடு, மதஒற்றுமை ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருந்தால் நான் அவரை ஆதரிக்க மாட்டேன்.

4. நான் நீதி, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை ஆதரிக்கிறேன். நமது சட்ட மெய்யியலானது சமுதாயவுடைமையானதாக இருக்க வேண்டும். நாம் பின்பற்றிக்கொண்டு இருக்கும் சட்ட மெய்யியலானது பிரிட்டிசினுடைய சட்டமெய்யியலில் இருந்து நிலைமாற்றம் செய்யப்பட்டது ஆகும்.

5. நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதியளிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் சமுதாய அமைப்பை ஆதரிக்கிறேன். முழுமையாகவும் செயற்றிறத்தோடும் போர்க்குணத்தோடும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மோடி ஏற்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

6. நான் இலவச சட்ட உதவியையும் நீதியையும் ஆதரிக்கிறேன். ஏழைகளுக்கான இலவசமாக சட்ட உதவிக்குரிய முழுமையான கொள்கை இருந்தால் மட்டுமே உண்மையான மக்கள்நாயகம் அமைய முடியும்.

7. இந்த தேசத்தின் மோசமான எதிரி ஊழலே ஆகும். அது இன்றைக்கு எங்கெங்கும் காணப்படுகிறது. எனவே ஊழல் ஒழிப்பிற்கான போர்க்குணமுள்ள பரப்புரை இயக்கமே மோடியின் செயற்றிறம் உடைய கொள்கையாக இருக்க வேண்டும். ஊழலின் சுவடே இல்லாமல் சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துவதே எந்தவோர் அரசாங்கத்தின் மிகவும் செயற்றிறமுடைய கொள்கையாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிட்ட கிருட்டிணய்யர், 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் இனப்படுகொலைகளை நடத்தி இந்தியாவின் இட்லராக மோடி மாறிய வரலாற்றை அறியாதவர் அல்லர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நேர்மையாளர் வேடமிட்ட மன்மோகன்சிங்கின் ஊழல் முகம் வெளிப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பு கிருட்டிணய்யரை 180 பாகை எதிர்திசையில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது. எப்பொழுதும் மதில் மேல் பூனையாக இருக்கும் “நடுநிலையாளர்கள்” பலரும் இப்பொழுது இவரது மனநிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான மதபயங்கரவாதத்தைவிட ஊழல் மிகவும் மோசமாகத் தெரிகிறது. எனவே இவர்கள் தம் கையில் இருப்பது நஞ்சு என்று தெரிந்தே அதனைக் குடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

மதபயங்கரவாதத்தின் ஆபத்தை நன்கு அறிந்த சிலரோ, மன்மோகன் நிதியமைச்சராக இருந்த நாள்களில் அவர் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதற்காக ஆடிய “பதவி விலகல்” நாடகங்களை நினைவுகூர்ந்து, “அவர் நல்லவர்தான்; அவர் சார்ந்திருக்கும் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தவர்கள்தான் மோசமானவர்கள்” எனக்கூறி, “அடுத்தமுறை இந்திய தேசிய காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றோ, ‘நல்லவர்’களோடு கூட்டுச் சேர்ந்தோ ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பா.ச.க. என்னும் நாசிசக் கட்சி (Nazism) எக்காரணத்தைக்கொண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது” என விரும்புகிறார்கள்.


இவர்களுக்கு ஊழலைவிட மதபயங்கரவாதம் ஆபத்தானதாகத் தெரிகிறது. எனவே மதச்சார்பின்மையின் மீதும் சமுதாயவுடைமையின் மீதும் நம்பிக்கை வந்திருந்த சவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிரதமர் பதவிக்கு வந்து இந்த நாட்டை ஈடேற்றம் செய்ய மாட்டார்களா என்னும் ஏக்கம் இவர்கள் பேச்சிலும் முகத்திலும் தெரிகிறது. ஆனால் பா.ச.க.வின் நாசிசத்திற்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கும் வல்லமை இத்தாலிய மகளின் தலைமையில் இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு என்னும் ஃபாசிசக் கட்சிக்கு (Fascism) உண்டு என்பதையும் ஃபாசிசத்தின் தாய்வீடு இத்தாலி என்பதையும் இவர்கள் மறக்கத் துடிக்கிறார்கள்.

மதச்சார்பின்மையற்ற, ஊழலுக்கு எதிரான கட்சிகள் எனப் பொதுவாகக் கருதப்படும் இடதுசாரிக் கட்சிகளோ ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்குப் பலம் பொருந்திய மாற்று அணியாக உருவாகவில்லை.

இந்த இக்கட்டான சூழலில், மதப்பயங்காரவாதத்தின் கொடூரமுகத்தையும் ஊழலின் கோரமுகத்தையும் அறிந்து, அவற்றைத் தவிர்க்க விழையும் பொறுப்புடைய மக்களின் நிலைமையோ, கண்கள் இரண்டையும் இழந்த கறுப்புப்பூனையை அம்மாவாசை நாளில் இருட்டு அறைக்குள் விளக்கை ஏற்றாமல் பிடிக்க முனைபவரின் நிலைமையைப் போல சிக்கலானதாக இருக்கிறது.

எனவே வரும்காலத்தில் இந்திய நாடு பயணிக்க வேண்டிய பாதை அமெரிக்கச் சார்புப் பாதையோ இந்துத்துவப் பாதையோ அல்ல; சமுதாயவுடைமை மக்கள்நாயகப் பாதையே என்னும் முடிவைத் தெளிவுபடுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக 2014 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அமைய இருக்கிறது. எனவே, இடதுசாரிகளும் தம் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுகிற விளிம்புநிலை மக்களின் கட்சிகளும் இணைந்த மாற்று அணி ஒன்று மலர வேண்டிய கட்டாயம் தோன்றி இருக்கிறது. ஒருவேளை இந்த அணி ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெறமுடியாது போகலாம். ஆனால், ஆட்சியை அமைக்கும் அணியினர் இவ்வணியினரின் ஆதரவைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தையேனும் உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும். அந்நோக்கில் மாற்று அணி ஒன்று மலருமா?...... பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆசிரியர்

வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்தில் ஆசிரியரை மதித்துப் பழகுக என்பது ஒரு பாடம். அதில் ஆசிரியரை மாணவர்கள் ஏன் மதிக்க வேண்டும் எனக் கூறும் பனுவலில் மாணவர்கள் மதிக்கத்தக்க ஆசிரியராக எப்படித் திகழ்வது என்பதனை உட்பனுவலாக அமைத்து எழுதினேன். அப்பனுவலுக்காக பின்வரும் பாடலையும் இயற்றினேன். இதில் ஓர் இலட்சிய ஆசிரியரின் தகுதிகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். அத்தகு ஆசிரியர்களாக தமிழக ஆசிரியர்கள் திகழ வாழ்த்துகள்:


பாறையை உடைத்து
சிலைகளைச் செதுக்கும் சிற்பியைப் போல
பாடங்கள் நடத்திப்
பாதைகள் காட்டி பண்படச் செய்பவர்
யார்? அவர் யார்? (2)

உள்ளம் சோர்ந்து
ஒடுங்கி விடாமல் ஊக்கம் நல்கி
உலகம் போற்றும்
உயர்வை நோக்கி உயர்த்தி விடுபவர்
யார்? அவர் யார்? (2)

நன்னெறி புகட்டி
நல்வழி காட்டி நன்மொழி பேசி
பண்பினைப் பழக்கி
பலரும் வியக்க பக்குவம் செய்பவர்
யார் அவர் யார்? (2)

அறத்தின் வடிவாய்
அகத்தைச் செதுக்கி அறிவை ஊட்டி
ஆற்றல் கூட்டி
அகிலம் புகழ ஆளுமை வளர்ப்பவர்
யார்? அவர் யார்? (2)

மாணவர்க் குள்ளே
மறைந்து கிடக்கும் திறன்களை எல்லாம்
திறம்பட வளர்த்து
திசைகள் எட்டும் தெரியச் செய்பவர்
யார்? அவர் யார்? (2) (பாறையை உடைத்து)

அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்

பின்னாடிப் போகுதா உலகம்?



பின்னாடிப் போகுதா உலகம்? - சாதிப்
பேரால பண்ணுறானே கலகம்! – நமக்கு
முன்னாடிப் பலபேர்கள் உழைத்து - வெட்டிய
முள்ளுமரம் நிற்கலாமா தழைத்து?

“பிறப்பால எல்லோரும் ஒண்ணு! - வேலைப்
பிரிவுதான் வெவ்வேறு கண்ணு” - என
அறத்தாலே எழுந்து நின்னு – வள்ளுவர்
அறைந்ததிலே போடுறானே மண்ணு! (பின்னாடி)

சாதிமதக் கேடெல்லாம் களைந்து -அருட்
சோதியில எல்லோரும் கலந்து - நந்
நீதிவழி வாழவேணும் இணைந்து – என்னும்
நெறியையெலாம் கொல்லுறானே தொலைந்து!

“நால்வர்ணப் பிரிவினைகள் புரட்டு – அதை
ஞாயம்செயும் சாத்திரங்கள் திருட்டு” – என
நாள்தோறும் சொன்னாரே பெரியார் – அந்த
ஞாயத்தை மிதிக்கிறானே சிறியன் (பின்னாடி)

“உழைக்கின்ற எல்லோரும் ஒன்று – நம்முள்
உயர்வில்லை தாழ்வில்லை” என்று – ஒன்றாய்
இணைத்தனரே தோழர்கள் நன்று – அதனை
எரியூட்டப் பார்க்குறானே இன்று

“தீண்டாமை ஒழிப்பெங்கள் உரிமை – நமக்குள்
தேவையடா என்றென்றும் ஒருமை” – என்றாரே
நீண்டாய்ந்த பீமாராவ்! அருமை!! – அதை
நெருப்பிலட முனைகிறானே எருமை (பின்னாடி)

எல்லாரும் வாருங்கள் எழுந்து – ‘சாதி
எமக்கில்லை என்றுரைப்போம்’ இணைந்து – ஞாய
நல்லேரால் மனங்களைநாம் உழுது – அன்பு
நற்பயிரை வளர்த்திடுவோம் மலர்ந்து


காக்கைச் சிறகினிலே, செப்டம்பர் 2013 பக்.31

காணமற்போகும் பொதுநிலங்கள்

பகுதி 1: பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

வெளியூரில் வேலை பார்க்கும் ஒருவர் ஓராண்டு கழித்து தனது ஊருக்குத் திரும்பினால் அங்குள்ள பொதுநிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்பார். அனைவருக்கும் பொதுவான அந்நிலங்கள் முழுமையகவோ, பகுதியாகவோ பணம், அரசியல், ஆள் ஆகிய பலங்களை உடையவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். களம், மேய்ச்சல் நிலம், காடு எனத் தொடங்கி ஓடை, குளம், மந்தை வரை பல்வேறு வடிவங்களில் இருக்கும் அப்பொதுநிலங்கள் அவ்வூரின் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கக் கூடியவை. அவற்றை மீட்பதற்காக அவர் முயன்றால் கிராமசபையோ, வருவாய்த்துறையோ அந்த ஆக்கிரமிப்பை சட்டப்படி அங்கீகரித்துவிட்டதாகக் கூறி சில ஆவணங்கள் காட்டப்படும். இத்தகு ஆக்கிரமிப்புகளையும் அதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களையும் சட்டத்திற்குப் புறம்பானவை, செல்லாதவை என்கிறது 2011 சனவரி 28 ஆம் நாள் செயபால் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்சூவும் கியான் சுதா மிசுராவும் வழங்கிய தீர்ப்பு.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டம் சாகீர் ரோகர் என்னும் சிற்றூரில் உள்ள பொதுநிலமான குளத்தை மூடி 6. 8 கெக்டேர் பரப்பளவில் செயபால் சிங் என்பவர் 2003ஆம் ஆண்டில் வீடொன்றைக் கட்டி இருக்கிறார். அந்த குளமானது கால்நடைகள் குடிப்பதற்காக மழைநீரைச் சேமிப்பதற்காகப் பயன்பட்டு வந்திருக்கிறது. செயபால் சிங், அந்நிலத்தை தன் முன்னோர்களும் அனுபவித்து வந்ததால் அந்நிலம் தனக்கே உரியது என உரிமைகொண்டாடி இருக்கிறார். அவரது ஆள் பலத்திற்கும் பணபலத்திற்கும் பணிந்த கிராமசபை அந்த அத்துமீறலைக் கண்டுகொள்ளவில்லை. சட்டத்திற்குப் புறம்பான அந்த அத்துமீறலை மறைத்து அந்நிலம் செயபாலுக்கே உரியது என உறுதிப்படுத்தும் ஆவணங்களை அரசுத் துறையில் உள்ள கீழ்மட்ட அலுவலர்கள் வழங்கி இருக்கிறார்கள். செயபால் சிங்கிற்கு எதிரியான தேவ் சிங் என்பவர் இந்த மோசடியைப் பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொணர்ந்தார். மாவட்ட ஆட்சியர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாறாக, அப்பொதுநிலத்திற்கு உரிய நிலமதிப்பை அரசுக்குச் செலுத்திவிட்டு செயபால் சிங்கே நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என ஆணை இட்டார். 2007ஆம் ஆண்டில் தேவ் சிங் ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார். ஆணையர் பொதுநில ஆக்கிரமிப்பை உறுதிசெய்து மாவட்ட ஆட்சியரின் ஆணையை நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து, செயபால் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2010 ஆம் ஆண்டில் அந்நீதிமன்றம் அம்மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. பின்னர் செயபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அம்மேல்முறையீட்டை உசாவிய உச்சமன்ற நீதியரசர்கள் வழங்கிய தமது தீர்ப்பில், அரசு அலுவலர்களும் கிராமசபையும் செயபால் சிங்கோடு சேர்ந்து சதிசெய்து ஊர்ப் பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினர். மேலும் அந்நிலத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்துத் தள்ளும்படி முந்தைய இரண்டு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி ஆணையிட்டனர். நிலமற்ற தொழிலாளர்களுக்கோ அல்லது பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கோ பழங்குடியினருக்கோ குத்தகைக்கு விடப்பட்ட பொதுநிலத்தில் அல்லது சிற்றூரினருக்காக பள்ளி அல்லது மருத்துவமனை என்பன போன்றவை உள்ள பொதுநிலத்தில் மட்டுமே சுற்றுச்சுவர் கட்ட அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். அதேபோல தனியாருக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கிராமசபைகள் தமது நிலத்தை விற்க மாநில அரசால் வழங்கப்பட்ட அரசு ஆணைகள் அனைத்தும் செல்லாதவை என அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளாக, நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான குளங்கள் பேராசைக்காரகளால் மண்ணால் மூடப்பட்டு உள்ளன; அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சிற்றூர் குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையும் சில வணிகர்களுக்கு கிராம சபையாலோ அரசு அலுவலர்களாலோ மிக்குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டு வருகின்றன என்றெல்லாம் நீதியரசர்கள் அத்தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைச் செயலாளர்களும் தம் மாநிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுநிலங்களைப் பற்றிய அறிக்கையை அவ்வாண்டின் மே திங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர். தலைமைச் செயலாளர்கள் திரட்டப்பட்ட தகவல்களை வழக்கம்போல குறிப்பிட்ட நாளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பர். ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுநிலங்கள் அனைத்தும் இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மீட்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் பொதுநிலங்கள் களவு போய்க்கொண்டே இருக்கின்றன. தேசிய மாதிரி அளவெடுப்பு அமைப்பின் (National Sample Survey Organisation) கணக்கின்படி இந்தியா நாட்டின் மொத்தப் பரப்பளவில் 15 விழுக்காடாக உள்ள பொதுநிலம் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் 1.9 விழுக்காடு என்னும் விகிதத்தில் குறைந்துகொண்டே வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 2010 ஆம் ஆண்டுவரை 834,000 கெக்டேர் பரப்பளவு பொதுநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவிக்கிறது.

இந்நிலங்களில் மிகக்குறைந்த அளவு இடங்களையே இடம்பெயர்ந்து வாழும் ஏழைகள், வீடற்றோர் உள்ளிட்ட விளிம்புநிலையினர் தமது இருத்தலுக்காக ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற ஆணை இடும்பொழுதும் பொதுநிலங்களை அரசு முறையாகக் காக்கிறது என்னும் தோற்றத்தை உருவாக்க அரசு விழையும்பொழுதும் இந்த விளிம்புநிலையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களே அரசு இயந்திரத்தால் கைப்பற்றப்படுகின்றன. மற்ற ஆக்கிரமிப்பாளர்களின் கையில் இருக்கும் பொதுநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்நிலையில் அந்தந்த ஊரின் பொறுப்புடைய மக்கள்தான் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகு முயற்சியில் ஈடுபடும்பொழுது ஆள்பலம், அரசியல்பலம், பணபலம் ஆகியவற்றின துணையை உடைய ஆக்கிரமிப்பாளர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்தான். ஆனால், யாரேனும் பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

திருப்புமுனை. செப்டம்பர் 2013

பெருகும் இடப்பெயர்வும் சுருங்கும் வேளாண்மையும்


விளிம்புநிலையில் வாழும் மக்களை கொத்தடிமைகளாக மாறவிடாமல் தடுக்கும் வழிவகைகளைக் கண்டறியும் ஆய்வு ஒன்றினை பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) 2005 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொண்டது. அதற்கான கள ஆய்வில் ஊரக வணிக மேலாண்மை வல்லுநர் வெ. சு. நடராசன் (V.C.Nadarajan), வேளாண்மையியலாளர் புவனேசுவரி கண்ணன் ஆகியோருடன் நானும் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது அம்மாவட்டத்தில் உள்ள சிற்றூர்கள் பலவற்றிற்கும் சென்று பல்வேறு தொழில்புரியும் மக்களைச் சந்தித்து அவர்களது தொழில் தேர்வினைப் பற்றி அறிய முடிந்தது.

அவர்களில் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் தாம் பிறந்து வளர்ந்த இடத்திலேயே கிடைக்கும் தொழிலைச் செய்து, அங்கேயே வாழ்ந்து மடியவே விரும்பினர். கீழ்நடுத்தட்டு மக்களில் பெரும்பான்மையோர் தாம் செய்துவரும் வேளாண்மையிலிருந்து நழுவிச் சென்று உள்ளூரிலேயே சிறுவணிகத்தில் ஈடுபட்டுப் பிழைக்க விழைந்தனர். பசுமைப் புரட்சி என்னும் பேராசை முயற்சியின் காரணமாக வளமற்றுப் போன நிலவளமும் நாளும் உயர்ந்துகொண்டிருக்கும் வேளாண் இடுபொருள்களின் விலையும் அந்த குறு, சிறு வேளாண்மையர்களை நிலங்களில் இருந்து நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதே அவர்களின் தொழில்மாற்றச் சிந்தனைக்குக் காரணமாக இருந்தது. சிறுதொழில் புரியும் கைவினைஞர்களுக்கோ தம்முடைய ஆக்கங்களைத் தாமே சந்தைப்படுத்த இயலாது, சென்னை செளகார்பேட்டை வணிகர்களின் கருணையால் பிழைக்கிற நிலையில் இருப்பினும், தம்முடைய பிறந்த ஊரைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயரும் ஆசை இல்லை. ஆனால் அவர்களின் விருப்பம், விழைவு, ஆசை அனைத்தும் இந்திய, தமிழக அரசுகள் பின்பற்றுகிற, ஆனால் இம்மண்ணிற்குப் பொருத்தமற்ற, மேலைநாட்டுச் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமய, தாரளாமய, தனியார்மயப் பொருளாதார நெருக்கடியால் நொறுங்கிக்கொண்டு இருக்கின்றன.

தாம் பெற்றிருக்கும் கல்வியை முதலாகக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டேனும் வெயிலில் வாடத்தேவையற்ற வெள்ளுடை வேலையை இலக்காகக்கொண்டு பெருநகருக்கு இடம்பெயரும் வேட்கையை உடைய இடைநடுத்தட்டு மக்களோடு இணைந்து, விளிம்புநிலை மக்களும் கீழ்நடுத்தட்டு மக்களும் ஊரகக் கைவினைஞர்களும் தம் நிலத்தை, மரபார்ந்த தொழில்களைக் கைவிட்டு உதிரிவேலைகளைச் செய்து பிழைப்பதற்காக நகரங்களை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறார்கள். இதனால் ஊரகச் சிற்றூர்கள் தமது மனிதவளத்தை இழந்துகொண்டு இருக்கின்றன; நகரங்கள் இடநெருக்கடியால் ஊதிப்பெருத்து தனது காலடியில் இருக்கும் சிற்றூர்களின் வளங்களை மிதித்து நசுக்கி அழித்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த உண்மையை, 2011ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்ட மக்கட்டொகைக் கணிப்பின் அறிக்கையின் சுருக்கம் பூடகமாக எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டில் 73.3% ஆக இருந்த ஊரக மக்கள் தொகை 1991ஆம் ஆண்டில் 65.8% ஆகத் தேய்ந்து 2011ஆம் ஆண்டில் 51.6% ஆக நலிந்திருக்கிறது. அதாவது 1971ஆம் ஆண்டிற்கும் 1991ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் 7.5% இருந்த ஊரகத்தில் இருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு, 1991ஆம் ஆண்டிற்கும் 2011ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்து 14.2% என்னும் அளவைத் தொட்டு இருக்கிறது. இந்த இடப்பெயர்வின் வளர்ச்சிவிகிதமானது, உலகமயமாக்கத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு செயற்படத் தொடங்கிய பின்னர், உழைக்கும் மக்கள் தமது பிழைப்புப்பாட்டிற்கான வாய்ப்ப்பினை இழந்து தம்முடைய நிலத்திலிருந்தும் தொழிலிலிருந்தும் விரைந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதனை தெளிவுபடுத்துகிறது. இதன் வேகம் எதிர்வரும் ஆண்டுகளில் பன்மடங்காகப் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இடம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் மக்கள் அங்கிருக்கும் புறம்போக்கு நிலங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் தமது வாழ்விடங்களை அமைத்து வாழத் தொடங்குகிறார்கள். அவர்கள் மெல்ல மெல்ல நகரக் காற்றிற்குப் பழகி சற்று சீராக மூச்சுவிடத் தொடங்கும் பொழுது நகரை அழகுபடுத்தல் என்னும் பெயராலும் சீரமைத்தல் என்னும் பெயராலும் ஆட்சிக்கட்டில் அவர்களை மீண்டும் நகரத்திற்கு வெளியே, அதன் துர்நாற்றம் குறையாத, சிற்றூர் ஒன்றில் குடியமர்த்துகிறது. இதனால் அவர்கள் மீண்டும் தமது பிழைப்புப்பாட்டிற்கான வாய்ப்பினை இழந்து தவிக்கிறார்கள். இவ்வாறு எவ்விடத்திலும் அவர்களை வேர்கொள்ளவிடாது வெட்டியெறிவதன் வழியாக அவர்களை என்றென்றும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக மாறவிடாமல் அதிகார நடுவங்கள் பார்த்துக்கொள்கின்றன. இதனைக் கூர்ந்து கவனித்து குரல்கொடுக்கும் சற்று படித்த நடுத்தட்டு மக்களுக்கு “வல்லரசுக் கனவு” மயக்க மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்ட மக்களின் பண்பாட்டுக் கூறாகவும் பிழைப்புப்பாட்டின் ஊற்றாகவும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் இருக்கின்றன. அதனால் பெருமளவு மக்கள் அதில் ஈடுபட்டுப் பிழைத்து வருகின்றனர். இந்திய அரசோ வேளாண்மையை வணிகமாக மாற்ற முனைகிறது. அவ்வணிகத்தில் 8% மக்கள் ஈடுபட்டாலே இந்திய மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தி இலக்கை எட்டிவிட முடியும் என்கிறார் இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சர். அதாவது பெரும்பான்மையான இந்திய மக்கள் அதை நம்பிப் பிழைக்கக் கூடாது; அது பெருவணிகர்களின் வணிகமாக மாறிவிட வேண்டும் என்பது அவரது வேணவா. அந்த வேணவாவை நனவாக்கும் போக்கில்தான் இந்நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்படுகிறது. இதனால் விளிம்புநிலை மக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மக்களின் இடப்பெயர்வுதான் இப்பூமண்டலத்தின் பல்வேறு சிக்கல்களுக்கும் கரணியமாக இருக்கிறது என்பது கடந்த நூற்றாண்டிலேயே அறிவு உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவேதான் தெருவெங்கும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக புனைந்துரைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இடம்பெயர்வுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியாவில் இடப்பெயர்வை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையே ஊக்குவிக்கிறது.

இடப்பெயர்வால் அல்லலுக்கு உள்ளாகும் மக்களின் பிழைப்புப்பாட்டைப் பாதுகாக்க நிலச்சீர்திருத்தமும் நிலப்பகிர்வுமே சிறந்த வழியென சமூகச் செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலமற்ற ஏழை உழவர் ஒருவருக்கு உரிமையாக்கப்படும் ஒரு குறுக்கம் அளவுள்ள நிலம் ஒரு தலைமுறைக் காலத்திற்குள் அவரது குடும்பத்தின் வாழ்வைத்தரத்தை பன்மடங்கு உயர்த்தும் என்பதனை நிலவுரிமைப் போராளியான தாமரைத்திரு கிருட்டிணம்மாள் செகநாதன் கீழவெண்மணிப் பகுதியில் 1969ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து மெய்பித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மாநிலங்களின் பழங்குடியினருக்கு நிலங்களைப் பெற்றுத் தந்து ஏக்தா பரிசத்தின் தேசியத் தலைவரான புத்தன்வீடு இராசகோபால் மெய்பித்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சோதனை முயற்சிகளின் வழியாக கற்ற பாடங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே நேரத்தில் நிலச்சீர்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி தொடர்போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் விளைவாக 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரைத் தலைவராகக் கொண்டு தேசிய நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ஆணையம் கூடவே இல்லை. அண்ணா கசாரே தில்லியில் போராட்டம் நடத்திய பொழுது அவருடன் இருந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த ஆணையம் சிலநாள்களில் கூடும் அறிவிக்கப்பட்டது; ஆனால் இன்றுவரை கூடவே இல்லை.

இந்நிலையில் வேளாண்மையைப் பிழைப்புப்பாடாகக் கொண்டுள்ள விளிம்புநிலை மக்களின் இடப்பெயர்வைத் தடுத்து, அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தளவு வருவாயையேனும் உறுதிசெய்யும் வகையில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக வேளாண் நிலங்களை கட்டிட மனைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டு நிலங்களாக மாற்றுவதை குற்றவியல் நடவடிக்கையென அறிவித்துச் சட்டம் இயற்றி வேளாண் தொழிலைக் காக்க வேண்டும். இரண்டாவதாக கோயில் போன்ற பொதுநிலங்கள் வெகுசிலரிடமே குத்தகைக்கு விடப்பட்டிருப்பதை நீக்கும்வகையில் குத்தகை உச்சவரம்புச் சட்டத்தை இயற்றி, கையப்படுத்தப்படும் மிகைநிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விடவேண்டும். மூன்றாவதாக நன்செய் நிலவரம்பின் அளவை ஐந்து குறுக்கம் எனக் குறைத்து மீதமுள்ள நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். புன்செய் நிலங்களுக்கும் அறக்கட்டளை நிலங்களுக்கும் உச்சவரம்பு விதித்துச் சட்டம் இயற்றி நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். நான்காவதாக பஞ்சமி நிலங்களையும் பூதான நிலங்களையும் மீட்டு பொருத்தமான நிலமற்ற ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இச்சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இணையாக இந்நிலங்களில் அம்மக்கள் வேளாண்மை செய்வதற்குத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளையும் அரசு செய்தல் வேண்டும்.

இவற்றை அரசு பொறுப்பேற்றுச் செய்வதற்குத் தேவையான அழுத்தங்களை விளிம்புநிலை மக்களும் அவர்களுக்குத் துணையாக அவர்களது மேம்பாட்டிற்காக உழைக்கும் அல்லரசு அமைப்புகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து கூட்டொருமையோடு பணியாற்ற வேண்டும். பணியாற்றினால் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படக்கூடும்.

திருப்புமுனை இதழ் - ஆகத்து 2013

குழந்தைகளை குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்



குழந்தைகள் பிரச்சனைக்கு உரியவர்கள் அல்லர்
குழந்தைகளுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன
குழந்தைகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள
குழந்தைகளின் உலகத்திற்குள் புகவேண்டும் நாம்
குழந்தைகள் உலகத்திற்கான திறவுகோல்
உங்களது கையிலிருத்து நீண்டு மிரட்டும் பிரம்பு அன்று
குழந்தையாய் நீங்களும் மாறும் திறனில் இருக்கிறது
மாறும் திறனற்றவர்கள்
பெற்றோர் ஆசிரியர் என்னும்
அடையாளம் துறந்து வெளியேறுங்கள் தயவுசெய்து
குழந்தைகளை
குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்
தமது ஊரை
தாமே காத்துக்கொள்ளப் போராடும்
எம் எளிய மக்களைப் போல

ஆண்மைத் திமிர்!


கடந்த ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் 23 வயதுடைய சோதி சிங் பாண்டே என்னும் மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில் ஓடும் பேருந்தில், அறுவர் கும்பலால் வல்லுறவிற்கு ஆளானார். அதனையொட்டி தில்லிவாழ் மாணவர்களும் நடுத்தரவர்க்கத்து அறிவாளிகளும் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்பொழுது பொதுமக்கள் உணர்வைத்தூண்டி பரபரப்பு ஏற்படுத்தும் வேறு செய்திகள் எதுவும் கிடைக்காததால், ஊடகங்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை உணர்வைத் தூண்டும் செய்திகளாக மாற்றின. பெரும் ஊழல்கள், பொருளாதாரக் கடும் நெருக்கடி ஆகியவற்றால் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சினத்தை, அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான வாக்குகளாக மாற்ற இன்றைய எதிர்கட்சிகள், குறிப்பாக பாரதிய சனதா, இவ்வல்லுறவுக் கொடுமையை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. இவர்கள் அனைவரையும்விட தங்களுக்கு அப்பெண்ணின் மீது அதிக அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய இக்கட்டில் இருந்த ஆட்சியாளர்கள் அப்பெண்ணை உயர்சிகிச்சைக்காக (?) திசம்பர் 26ஆம் நாள் சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். திசம்பர் 29ஆம் நாள் அப்பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோனார்.

இதற்கிடையில், 'இத்தகு வன்கொடுமையைத் தவிர்க்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்' என்றும் ‘வல்லுறவில் ஈடுபட்டவர்கள் என காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்’ என்றும் ‘அவர்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மைநீக்கம் செய்ய வேண்டும்’ என்றும் ஆளாளுக்கு நீதியரசர்களாக மாறி தீர்ப்புகளை வழங்கினார்கள்.

"பண்பாட்டு"க் காவலர்கள் சிலர், 'பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவதுதான் இத்தகு வல்லுறவுக் கொடுமைக்குக் காரணம்' என குற்றூரின் தேனீர்க்கடையில் தொடங்கி இணையவெளி வரை எங்கெங்கும் பிதற்றித் திரிந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூச்சலில், "பெண்கள், விளிம்புநிலை மக்கள், குழந்தைகள் ஆகியோரின் பிரச்சனை, அவர்களுடைய பிரிச்சனை மட்டுமன்று; அது சமூத்தின் பொதுப்பிரச்சனை" என்னும் தெளிவான புரிதலோடும் உண்மையான அக்கறையோடும் ஆக்கப்பூர்வான செயல்களில் ஈடுபட்டவர்களின் கடுமையான உழைப்பு யாருடைய கவனத்தையும் கவராமல் கரைந்துபோய்விட்டது.

அதே புதுதில்லியில் மீண்டும் ஒரு வல்லுறவு வன்கொடுமை. இந்த முறை ஐந்து வயதுக் குழந்தை ஒருத்தி பலியாகி இருக்கிறாள். காந்தி நகரில் ஏப்ரல் 15 ஆம் நாள் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடப் போன சிறுமி இரவாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. சிறுமியின் தந்தை அருகிலிருந்த காவல் நிலையத்தில் முறையிட்டு இருக்கிறார். அவர்கள் அம்முறையீட்டை பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் கழித்து அச்சிறுமியின் வீடு இருக்கும் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் அவளது அழுகுரல் கேட்டு, அங்கிருந்த அறையைத் திறந்தபொழுது, அச்சிறுமி குற்றுயிராகக் கிடந்திருக்கிறாள். அவளது உடலுக்குள் மெழுகுதிரியும் எண்ணெய்ப்புட்டி ஒன்றும் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளோடு வல்லுறவுகொண்டவர்கள் என மனோஜ்குமார், பிரதீப் குமார் என்னும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிகழ்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மகளிர், மாணவர், இளைஞர் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர் எதிரே வைக்கப்படும் இரு காந்தத் துண்டுகளின் வடக்குமுனைகளைப்போல் ஒட்ட மறுத்து எப்பொழுதும் விலகியே நிற்கும் பாரதிய சனதா கட்சியும் இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் "இத்தகு குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்" என ஒரே குரலில் கூறியிருக்கின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளை ஒட்டி இந்தியாவெங்கும் ஏற்பட்டிருக்கும் எதிர்வினைகளை நோக்கும்பொழுது நம் முன் பின்வரும் வினாகள் பேருருக்கொண்டு எழுந்து நிற்கின்றன:

1. சோதிசிங் பாண்டே வல்லுறவுக்கு உட்பட்டபொழுது தில்லியை உலுக்கிய பெரும் கூட்டத்தில் மிகப்பெரும் பகுதியினர் இப்பொழுது ஏன் காணமற் போனார்கள் ?

2. இந்தியாவின் பிறபகுதிகளில் பெண்களின் மீது வன்முறை நிகழும்பொழுது சிறு முனகலைக் கூட வெளியிடாதவர்கள் தில்லியில் அவை நிகழும்பொழுது மட்டும் இந்தியாவின் அனைத்துப் பகுதியினரின் கவனத்தையும் ஈர்க்க முனைவது ஏன்?

3. மரணதண்டனை, வேதியியல் முறையில் ஆண்மைநீக்கம் ஆகிய தண்டனைகளின் வழியாக மட்டுமே ஆண்களின் மனத்திற்குள் தோன்றும் வக்கிரத்தை அழித்து வல்லுறவைத் தடுத்துவிட முடியுமா-?

4. பெண்கள் அணியும் ஆடைகள்தான் ஆண்களை வல்லுறவுகொள்ளத் தூண்டுகின்றனவா ?

5. பெண்கள் மீதான வன்முறைக்கும் அதன் உச்சமான வல்லுறவுக் குற்றத்திற்கும் உண்மையான காரணம் எது?

சோதிசிங் பாண்டே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி வெளிவந்த பொழுது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 228 (அ)வின்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது குற்றம் என்னும் சட்ட விழிப்புணர்வு இவ்வழக்கைக் கையாண்டவர்களுக்கு இருந்ததால் அப்பெண்ணின் பெயரையோ, அவரது அடையாளத்தையோ ஊடகங்கள் வெளியிடவில்லை. அவர் மருத்துவக் கல்லூரி மாணவர் என்னும் செய்தி மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் இவர் நடுத்தர அல்லது உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்னும் படிமம் உருவாகிற்று. அக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அறுவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்னும் செய்தி வெளியிடப்பட்டது. அதனால்தான் "தன்பெண்டு, தன்பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டென" அதுவரை வாழ்ந்த உயர்நடுத்தர வர்க்கத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உதிரிகளால் தங்களது பாதுகாப்பிற்கு குந்தகம் வந்துவிட்டதோ என்னும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் போர்க்கோலம் பூண்டார்கள். ஆனால் 2013 சனவரி 5ஆம் நாள் "சண்டே மிரர்" இதழுக்கு பேட்டி அளித்த பத்ரி பாண்டே, உத்தரபிரதேசத்தின் குற்றூர் ஒன்றில் வாழ்ந்த, மகளின் படிப்பிற்காக தனது குறுநிலத்தை விற்றுவிட்ட, குறுவிவசாயியான தன் மகள்தான் தில்லியில் வல்லுறவு வன்கொடுமைக்கு உள்ளான சோதிசிங் பாண்டே எனத் தெரிவித்தார். அப்பேட்டியின் வழியாக, "தன்பெண்டுக்கும் தன்பிள்ளைக்கும்" தில்லியில் பாதுகாப்புக் குந்தகம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என அறிந்துகொண்ட உயர்நடுத்தர வர்க்கத்துத் திடீர்ப் போராளிகள் தத்தம் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். அண்மையில் நடந்த ஐந்து வயதுச் சிறுமியும் அவளோடு வல்லுறவுகொண்ட இருவரும் ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பது தொடங்கத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டதால்தான் தில்லி நகரத்து நடுத்தரவர்க்கத்துப் புரட்சிக்காரர்கள் அமைதியாகக் காணமற் போய்விட்டார்கள்.

கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை, மணிப்பூரில் இருந்து குசராத் வரை பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட எண்ணற்ற பெண்கள் நிலவுடைமையாளர்களாலும் அதிகாரப்புள்ளிகளாலும் வல்லுறவிற்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் நாள்தோறும் ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இவ்வன்கொடுமைகள் எவையும், இந்தியாவெங்கும் பரந்து வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்-குமாறு செய்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அலையை எதிர்க்கட்சிகள் உருவாக்க உதவும் வகையில், தில்லியில் நடைபெறவில்லை. அதனால்தான் தில்லியில் நடைபெறும் வன்கொடுமைக்கு எதிராக ஆர்த்தெழும் பலரும் இந்தியாவின் பிறபகுதிகளில் பெண்கள் மீது வன்முறை நிகழும்பொழுது சிறு முனகலைக் கூட வெளியிடுவது இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கோடிக் கையெழுத்து இயக்கத்தைத் தமிழகத்தில் தொடக்கிவைத்துப் பேசிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர், தன்னுடைய மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் வல்லுறவுக்கு உள்ளாகி அதனால் உருவான குழந்தையோடு, ஆதாரவற்றுத் தவிக்கும் தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவரோடு வல்லுறவுகொண்டவன் மீது முதற் குற்ற அறிக்கை மட்டும் பதியப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதால், அவன் அதே ஊரில் தன் குடும்பத்தினரோடு கவலையற்று வாழ்வதாகவும் அப்பெண்ணிற்கு உதவ நினைத்த அந்த மாவட்ட கண்காணிப்பாளர் அந்தப் பெண்ணின் தாயாருக்கும் முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் பெருமிதம் பொங்க கூறினார். வல்லுறவுகொண்டவன் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து அவனுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டிய பணியில் தான் மும்முரம் காட்டவில்லை என்பதனை, எவ்வித வெட்கமும் இன்றி, பெருமிதத்தோடு கூறினார். ஐந்து வயதுச் சிறுமியின் வல்லுறவுக்கு ஆளான வழக்கில்கூட, சிறுமியைக் காணவில்லை என அப்பெண்ணின் தந்தை கொடுத்த முறையீட்டை காந்திநகர் காவல்துறையினர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனவும் சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், "சிறுமி உயிரோடு இருப்பதற்காக மகிழ்ச்சி அடையுங்கள்" என அறிவுரைகூறியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈராயிரம் ரூபாய் கையூட்டுக் கொடுத்தும் சிறுமி நலம்பெற வழிபாடு நடத்துகிறோம் எனக் கூறியும் அந்நகர் காவல்துறை தன்னுடைய பணியை முறையாகச் செய்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் மேலாக, அப்பெண்குழந்தையின் மீதான வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணின் கன்னத்தில் காவல்துறை உதவி ஆணையர் பலமுறை அறைந்து பெண்கள் மீது தன்னால் இயன்ற வன்முறையைச் செலுத்தியிருக்கிறார். அரசு இயந்திரத்தின் இந்தப் பொறுப்பின்மையும் கூருணர்வின்மையும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடங்கி நடைமுறையில் இருக்கும் பல்வேறு சட்டங்களை முறையாகப் செயற்படுத்தாமைதான் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணங்களாக இருக்கின்றன. எனவே, அரசு இயந்திரத்தை பொறுப்புடையவர்கள் நிறைந்த அமைப்பாக மாற்றினால்தான் குற்றங்களைக் குறைக்க வாய்ப்புத் தோன்றுமே தவிர ஆர்ப்பாட்டக்காரர்கள், பா.ச.க. தலைவர் சுசுமா, இ.மா.பொ.க. எச்சூரி உள்ளிட்ட பலரும் கூறுவதைப் போல கடுமையான புதுச்சட்டத்தாலும் தூக்குத்தண்டனையாலும் வேதியியல் முறையிலான ஆண்மைநீக்கத்தாலும் ஆண்களின் மனத்திற்குள் தோன்றும் வக்கிரத்தை அழித்து வல்லுறவைத் தடுத்துவிட முடியாது.

பெண்களுக்கு மீதான வன்கொடுமையைப் பற்றி பேசும்பொழுது எல்லாம் அதற்கு அவர்கள் உடுத்தும் ஆடைகள் காரணம் எனக் கதைப்பவர்கள், ஐந்து வயதுச் சிறுமியும் எண்பது வயது மூதாட்டியும் வல்லுறவிற்கு உள்ளாகும்பொழுது வாயே திறப்பதில்லை. பிறந்த சாதி, பெற்ற நிலவுடைமை, அடைந்த அதிகாரம் ஆகியவற்றால் திமிரெடுத்தவர்கள் நிகழ்த்தும் வன்முறைக்கு உள்ளாகும் ஊரகத்துப் பெண்கள், இந்தப் பண்பாட்டுக் காவலர்கள் போற்றும் சேலையைத்தான் உடுத்தி இருந்தார்கள்; இருக்கிறார்கள். இதனை பண்பாட்டுக் காவலர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஆக வல்லுறவுக் குற்றத்தின் வேர் வல்லுறவிற்கு உள்ளாகும் பெண்ணின் உடையில் இல்லை; அதில் ஈடுபடும் ஆணின் மனதிற்குள் புதைந்திருக்கும் "ஆண்மை" என்னும் திமிரில் பதுங்கி இருக்கிறது. அத்திமிர் அவனது மனதிற்குள் நொதித்துப் பொங்கி, உற்றுப்பார்க்கும் கண்ணின் கருமணியின் வழியாக வளிந்து பெருகி வன்முறையாக வெடிக்கிறது.

ஆண் பூப்பெய்தும் பொழுது அதனை விழாவாகக் கொண்டாடி வெளியுலகிற்கு அறிவிக்காத மக்கள், பெண் பூப்பெய்தியதும் "இதோ இப்பெண் ஆணின் நுகர்விற்கு அணியமாக இருக்கிறாள்" என அறிவித்துக் கொண்டாடும் விழாவில் தொடங்கி, வடிவுடைய பெண் திரையின் வலப்பக்கத்தில் இருந்து இடம்பக்கமாக புன்னகைத்துக்கொண்டே பார்வையாளர்களைப் பார்த்தவாறு நடந்துசெல்லும் பொழுது "தொட்டுக்கொள்ளவா? உன்னைத் தொட்டுக்கொள்ளவா?" என பின்னணியில் ஒலிக்கும் ஊறுகாய் விளம்பரம் வரை ஆணின் நுகர்பொருளாகப் பெண்ணை படிமப்படுத்தும் ஒவ்வொரு செயலும் ஆண்மைத் திமிரையும் வக்கிரத்தையும் வளர்த்தெடுக்கின்றன. இந்த ஆண்மைத் திமிரையும் வக்கிரத்தையும் அழித்தொழித்து ஆணையும் பெண்ணையும் சகமனிதர்களாக மாற்றாத வரை இவ்வன்முறை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பாலியல் தொல்லை தொடங்கி வல்லுறவு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்யும்.

இந்நிலையை மாற்ற வேண்டுமானால் இருபால் மாணவர்களுக்கும் முறையான பாலியற் கல்வியும் பாலின நிகர்நிலைப் பயிற்சியும் பாடத்திட்டங்களிலேயே இணைக்கப்பட வேண்டும். அவற்றை தேர்விற்காகக் கற்பிக்காமல் வாழ்க்கைத் திறனாகக் கற்பிக்க வேண்டும். பெண்களை நுகர்பொருளாகப் படிமப்படுத்தும் எந்தவொன்றையும் விமர்சனம் செய்து அதனை அகற்ற வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் தங்களுடைய ஆக்கங்களில் பெண்களை தாம் எவ்வாறு சித்தரிக்கிறோம் என்பதனை உற்றுநோக்கி திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். அரசு இயந்திரத்தின் ஒவ்வோர் உறுப்பும் கூருணர்வும் பொறுப்புணர்வும் மக்கள்பால் நேயமும் கொண்டதாக மாற வேண்டும். இவை, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சமுதாயச் சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய நெடுவழியில் இருக்கும் சில மைல்கல்கள்தான். நெடுவழி நீண்டு கிடக்கிறது. அதில் நடப்பதற்கு நாம்தான் ஆயத்தமாக வேண்டும்.

24.4.2013

திருப்புமுனை மே-2013 பக். 4 -7

சி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை





சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா.  இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை நடுவாகக்கொண்ட கள்ளர்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை, கலையை, பண்பாட்டைக் களனாகக்கொண்டு “கள்ளர்நாட்டுக் கதைகள்” என்னும் பிரிவையும் காந்தியக் கோட்பாடுகளைக் களனாகக்கொண்டு “காந்தியக் கதைகள்” என்னும் பிரிவையும் தமிழில் தொடங்கிவைத்தவர்.  மணிக்கொடி எழுத்தாளரான இவர் காந்திய வழியை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்டவர்.  மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை நிலைகளனாகக் கொண்டு புனையப்பட்ட வாடிவாசல், நினைவோடை உத்தியைக்கொண்டு புனையப்பட்ட ஜீவனாம்சம் ஆகிய இரு புதினங்களின் மூலம் தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்.  திறனாய்வுக்கென்று தொடங்கிய ‘எழுத்து’ இதழை ‘புதுக்கவிதை’யைக் காக்கும் களமாகப் போற்றி வளர்த்தவர்.  வசனகவிதையில் இருந்து புதுக்கவிதையை வேறுபடுத்திக் காட்டிய வித்தகர்.  “புதுக்குரல்” என்னும் புதுக்கவிதைத் தொகுப்பை இருமுறை பதிப்பித்தவர்.

அழகின்மையால் மணமாகாதிருக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டத்தைப் படம்பிடிக்கும் “என்று வருவானோ?” என்னும் சிறுகதையை 1961 ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் சிதம்பர சுப்பிரமணியன் எழுதினார். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தால்,
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்

பேசாத சொல்லாகி

சுவடிக்குள் நொறுங்குகிறேன்

உணராத பொருளாகி

சொல்லுக்குள் புழுங்குகிறேன்

ஆளாத பாண்டமாக

சேந்தியிலே மழுங்குகிறேன்

என்னும் கவிதையை தொடங்கி, தொடர்ந்து சி. சு. செல்லப்பா பல கவிதைகளை  எழுதினார். 

“தற்கால வாழ்க்கைச்சூழல் எனக்கு திருப்தி தரவில்லை.  எனவே என் கவிதைகள் ஏக்கம், வேதனை, தார்மீக கோபம், மனப்புழுக்கம், குமைவு கொண்டதாகவே இருக்கும் …. ஆனால், நான் நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்” என்னும் அறிவிப்போடு 21 சிறு கவிதைகளையும் மகாத்மா காந்தியை முன்னுறுத்தி ‘இன்று நீ இருந்தால்…’ என்னும் குறுங்காவியம் ஒன்றையும் பரிபாடலைப் போன்று எழுதப்பட்ட ‘மெரீனா’ என்னும் நெடுங்கவிதையையும் சங்கப்பாடல்களின் உருவம், ஒலி, வரியமைப்பு ஆகியவை சிதைவடையாமல். அவைகளை இன்றைய சொல்வழக்கில் மடைமாற்றம் செய்யும் கவிதைகள் எட்டை ‘புதுமெருகு’ என்னும் தலைப்பிலும் ‘வெளிக்குரல்’ என்னும் தலைப்பில் 27மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் சி. சு. செல்லப்பா படைத்திருக்கிறார்.   இவைகளை ஏல்லாம், “மாற்று இதயம்” என்னும் தொகுப்பு நூலாகவும் “இன்று நீ இருந்தால்…” என்னும் தனிநூலாகவும் தனது எழுத்து பிரசுரத்தின் வழியாக வெளியிட்டார்.

ஆழ்ந்த் உள்ளடக்கமானது செறிவான உருவத்துடன் கலைத்தன்மை சிதையாமல் உணர்த்தப்படுவதே சிறந்த கவிதை என்றால், சி. சு. செல்லப்பாவின் கவிதைகளை சிறந்த கவிதைகள் எனக் கூறமுடியாது.  ஏனெனில், அவர் தனது கவிதைகளி உள்ளடக்கத்திற்குத் தந்த இடத்தை அதன் உருவாக்கத்திற்கும் உணர்த்தும் முறைக்கும் அவர் தரவில்லை. 

உருவம்:
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியனவற்றின் உருவங்களை வசன, புதுக்கவிதைகள் விலக்கி வைத்திருக்கின்றன. ஆனால் நாம் பேசும்பொழுது வெளிவரும் பேச்சுக்காற்றின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வசன, புதுக்கவிதைகள் ஏற்ற இறக்கமான அடியமைப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது ஓல்சன் கோட்பாடு.   இக்கோட்பாட்டை, அசபாக் கோட்பாடு என்பார் எழில்முதல்வன்.

இசை அலறும்

எரிமலை வாய்

சொல் நொறுங்கும்

கல் ரோலர்

ஜவ்வு எரிக்கும்

கொல்லுலைக் கோல்

என ஒலிபெருக்கியைப் பற்றிய கவிதையிலும் வேறு சிலவற்றிலும் அசபா அடிகளை கவனமாகப் பின்பற்றும் சி. சு.செ.

ஃபாய் ஃபாய் குளிரப்பேசி

பசப்பி விளிம்பில் இமயப் பாய்சுருட்ட வந்தோன்;

சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து

நடுக்கடலில் நின்று ஊளையிடும்

நம்பெயர் பாதிகொண்ட உதிரித்தீவோன்

முக்கூட்டாய் சேர்ந்து பகைத்தொழில் வளர்க்க

புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு

என்பது முதலான பல கவிதைகளில் பின்பற்றாது விடுகிறார். இதனால் இவரது கவிதைக்குக் கிடைத்திருக்க வேண்டிய உருவச்செப்பம் சிதைந்துவிடுகிறது.

உணர்த்தும் முறை:


எல்லா ஊரு கோயிலிலும்

எண்ண யூத்தி விளக்கெரியும்

எங்க ஊரு கோயிலில

பச்சத் தண்ணி நின்னெரியும்

என்பது தனது ஊரின் பெருமையைப் பாடிக்கொண்டே நடக்கும் ஒரு பென்ணின் நாட்டுப்புறப் பாட்டு.  இப்பாடலின் இறுதியடியில் உறைந்திருக்கும் கற்பனை, மற்ற மூன்றடிகளுக்கும் பொருள் அடர்த்தியைச் சேர்த்து கவிதையைப் பெற்றெடுக்கிறது.  அவ்வடியே கற்போர் நெஞ்சைக் கவ்விப் பிடிக்கிறது. 

இத்தகு தாக்கத்தை சி. சு. செ.வின் கவிதைகளில் காண முடியவில்லை.  ஏனெனில் அவரது படைப்புகளில் ஒரு சிறந்த கவிதைக்குரிய உணர்வோட்டம் இல்லை.  எனவேதான்,

மேல்வண்டி இறங்கு ரவியின் பொன்ஒளி

கீழ்வானடி ஏற்றும் ஒளிச்சாயை

நீலஉடல் புடவை கரைக்கட்டில்

சாயச் சிவப்பு கலந்ததுபோல்

அடிவானம் ஆரஞ்சு விளும்பு கட்டும்

நீலக்கடல் கரும்பச்சைத் தோற்றம் கொள்ளும்

எழும் அலைநுரைகள் ஊதாநிறம் பூரிக்கும்

விழும் மஞ்சள் வெய்யில் மெரினா முழுதும்

மணல் இன்னும் பழுப்புக் கருக்கும்

முகங்கள் அத்தனையும் ஸ்நோபூச்சாய் வெளுக்கும்

வான அடியில்

தொலை எழுசிறு அலை பலப்பல இழைந்து

சுழிபடு பெருஅலை எனஉரு உயர்ந்து

நுரையொடு மணல்கரை அடைய முனைந்து

உதறிய வெண்மணிப் பொடியெனத் தெறிக்கும்

என்பன போன்ற சிற்சில அடிகளைத் தவிர, பெரும்பான்மைக் கவிதைகள்,

சாம்ராஜ்ய பேராசைத் தனிமனித மன்னன்

கெய்ஸர் பெல்ஜியத்தை வீழ்த்தியது பழங்கதை;

சர்வாதிகார வெறித் தனிமனிதத் தலைவன்

ஹிட்லர் போலந்தை வீழ்த்தியது பழங்கதை

என்று உரைநடைத்தன்மை கொண்டதாகவே இருக்கின்றன.


உள்ளடக்கம்:


செறிவான உருவமும் சிறந்த உணர்த்துமுறையும் உள்ள கவிதை உயர்ந்த உள்ளடக்கம் கொண்டதாக இல்லாவிடில், அதனால் இச்சமூகத்திற்கு எப்பயனுமில்லை.  அதனால்தான் இடைக்காலப் பாடல்கள் பல படிப்பாரற்றுக் கிடக்கின்றன.  ஆனால் சி.சு.செ.வின் கவிதைகளோ செறிவான உருவமும் சிறந்த உணர்த்தும் முறையும் கொண்டவையாக இல்லாவிடினும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்டவைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,

சுப்பா சாஸ்திரிகள்

அகத்தில் பிறந்து

குப்பா சாஸ்திரிகள்

அகத்தில் வளர்ந்து

லவணம் என்றால்

தெரியாதா எனக்கு

நன்றாக இருக்கு!வ்- என

பரிமாறினாள் இலையில்

மகிஷத்தின் சாணத்தை!

என்னும் “சர்வஞானி” என்னும் கவிதையில்  வறட்டுப் பெருமை பேசும் போலி அறிஞர்களின் உயர்வுமனப்பான்மையை எள்ளி நகையாடுகிறார். 

பசிக்கு அழுது, வலிக்கு முனங்கி, காதலுக்கு ஏங்கி, பொருளுக்கு தவித்து, உணர்ச்சிக்குத் துடித்து இப்பொழுது மரத்துப்போன தனது இதயத்திற்கு மாற்று இதயம் வேண்டி கவிதையைத் தொடங்கிம் சி. சு. செ. அப்படிக் கிடைக்கும் இதயம் அரசியல்வாதி, மதவாதி, விஞ்ஞானி, குழந்தை, வாலிபன், நடுவயது, கிழடுகள் ஆகியோரின் இதயம் வேண்டாமென்று அதற்கானக் காரணங்களை அடுக்கி கவிதையின் முதற்பாகத்தை முடிக்கிறார். 

ஓ டாக்டர்! சமீபத்தில் இதயம் மாற்றினீர்களே!

வெற்றிகரமான ஆபிரேஷனாமே, சொல்கிறார்களே,

ரத்தத்தில் பாசிடிவ் நெகடிவ் கண்டுபிடிப்பீர்களே

மூல இதயத்துக்கும்

மாற்று இதயத்துக்கும்

என்ன வித்யாசம் அறிந்தீர்கள் நீங்கள்?

என்னும் வினாவோடு இரண்டாம் பாகத்தைத் தொடங்கி, அடுக்கடுக்கான வினாகளால் மனித இயல்பை விமர்சனம் செய்துவிட்டு,

ஓ டாக்டர்! மன்னிக்கவும்

மாற்று இதயம் வேண்டாம் எனக்கு

எவன் உணர்ச்சியும் தேவையில்லை எனக்கு

என் இதயம் பாடம் கற்றிருக்கு

அதுதன் வழியே போய் ஒடுங்கட்டும்

ஓ டாக்டர்! உங்களுக்குத் தொந்திரவு தந்தேனோ

மன்னிக்கவும்!

என்னும் பின்குறிப்போடு இதயம் மாறினாலும் மனமும் குணமும் மாறாத மனித இயல்பை, அதன் அவலத்தைச் சாடி முடிக்கிறார்.

ஆக, சி. சு. செ.வின் கவிதைகள் உருவம், உணர்த்தும்முறை ஆகிய இரண்டு கூறுகளில் ஊனப்பட்டு இருப்பினும் இன்றைய வாழ்க்கையின் மீது எழும் விமர்சனப்பாங்கான உள்ளடக்கத்தால் சிறப்புறுகின்றன. 

23.4.1990

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...