ஆண்மைத் திமிர்!


கடந்த ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் 23 வயதுடைய சோதி சிங் பாண்டே என்னும் மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில் ஓடும் பேருந்தில், அறுவர் கும்பலால் வல்லுறவிற்கு ஆளானார். அதனையொட்டி தில்லிவாழ் மாணவர்களும் நடுத்தரவர்க்கத்து அறிவாளிகளும் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்பொழுது பொதுமக்கள் உணர்வைத்தூண்டி பரபரப்பு ஏற்படுத்தும் வேறு செய்திகள் எதுவும் கிடைக்காததால், ஊடகங்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை உணர்வைத் தூண்டும் செய்திகளாக மாற்றின. பெரும் ஊழல்கள், பொருளாதாரக் கடும் நெருக்கடி ஆகியவற்றால் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சினத்தை, அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான வாக்குகளாக மாற்ற இன்றைய எதிர்கட்சிகள், குறிப்பாக பாரதிய சனதா, இவ்வல்லுறவுக் கொடுமையை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. இவர்கள் அனைவரையும்விட தங்களுக்கு அப்பெண்ணின் மீது அதிக அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய இக்கட்டில் இருந்த ஆட்சியாளர்கள் அப்பெண்ணை உயர்சிகிச்சைக்காக (?) திசம்பர் 26ஆம் நாள் சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். திசம்பர் 29ஆம் நாள் அப்பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோனார்.

இதற்கிடையில், 'இத்தகு வன்கொடுமையைத் தவிர்க்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்' என்றும் ‘வல்லுறவில் ஈடுபட்டவர்கள் என காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்’ என்றும் ‘அவர்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மைநீக்கம் செய்ய வேண்டும்’ என்றும் ஆளாளுக்கு நீதியரசர்களாக மாறி தீர்ப்புகளை வழங்கினார்கள்.

"பண்பாட்டு"க் காவலர்கள் சிலர், 'பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவதுதான் இத்தகு வல்லுறவுக் கொடுமைக்குக் காரணம்' என குற்றூரின் தேனீர்க்கடையில் தொடங்கி இணையவெளி வரை எங்கெங்கும் பிதற்றித் திரிந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூச்சலில், "பெண்கள், விளிம்புநிலை மக்கள், குழந்தைகள் ஆகியோரின் பிரச்சனை, அவர்களுடைய பிரிச்சனை மட்டுமன்று; அது சமூத்தின் பொதுப்பிரச்சனை" என்னும் தெளிவான புரிதலோடும் உண்மையான அக்கறையோடும் ஆக்கப்பூர்வான செயல்களில் ஈடுபட்டவர்களின் கடுமையான உழைப்பு யாருடைய கவனத்தையும் கவராமல் கரைந்துபோய்விட்டது.

அதே புதுதில்லியில் மீண்டும் ஒரு வல்லுறவு வன்கொடுமை. இந்த முறை ஐந்து வயதுக் குழந்தை ஒருத்தி பலியாகி இருக்கிறாள். காந்தி நகரில் ஏப்ரல் 15 ஆம் நாள் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடப் போன சிறுமி இரவாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. சிறுமியின் தந்தை அருகிலிருந்த காவல் நிலையத்தில் முறையிட்டு இருக்கிறார். அவர்கள் அம்முறையீட்டை பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் கழித்து அச்சிறுமியின் வீடு இருக்கும் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் அவளது அழுகுரல் கேட்டு, அங்கிருந்த அறையைத் திறந்தபொழுது, அச்சிறுமி குற்றுயிராகக் கிடந்திருக்கிறாள். அவளது உடலுக்குள் மெழுகுதிரியும் எண்ணெய்ப்புட்டி ஒன்றும் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளோடு வல்லுறவுகொண்டவர்கள் என மனோஜ்குமார், பிரதீப் குமார் என்னும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிகழ்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மகளிர், மாணவர், இளைஞர் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர் எதிரே வைக்கப்படும் இரு காந்தத் துண்டுகளின் வடக்குமுனைகளைப்போல் ஒட்ட மறுத்து எப்பொழுதும் விலகியே நிற்கும் பாரதிய சனதா கட்சியும் இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் "இத்தகு குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்" என ஒரே குரலில் கூறியிருக்கின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளை ஒட்டி இந்தியாவெங்கும் ஏற்பட்டிருக்கும் எதிர்வினைகளை நோக்கும்பொழுது நம் முன் பின்வரும் வினாகள் பேருருக்கொண்டு எழுந்து நிற்கின்றன:

1. சோதிசிங் பாண்டே வல்லுறவுக்கு உட்பட்டபொழுது தில்லியை உலுக்கிய பெரும் கூட்டத்தில் மிகப்பெரும் பகுதியினர் இப்பொழுது ஏன் காணமற் போனார்கள் ?

2. இந்தியாவின் பிறபகுதிகளில் பெண்களின் மீது வன்முறை நிகழும்பொழுது சிறு முனகலைக் கூட வெளியிடாதவர்கள் தில்லியில் அவை நிகழும்பொழுது மட்டும் இந்தியாவின் அனைத்துப் பகுதியினரின் கவனத்தையும் ஈர்க்க முனைவது ஏன்?

3. மரணதண்டனை, வேதியியல் முறையில் ஆண்மைநீக்கம் ஆகிய தண்டனைகளின் வழியாக மட்டுமே ஆண்களின் மனத்திற்குள் தோன்றும் வக்கிரத்தை அழித்து வல்லுறவைத் தடுத்துவிட முடியுமா-?

4. பெண்கள் அணியும் ஆடைகள்தான் ஆண்களை வல்லுறவுகொள்ளத் தூண்டுகின்றனவா ?

5. பெண்கள் மீதான வன்முறைக்கும் அதன் உச்சமான வல்லுறவுக் குற்றத்திற்கும் உண்மையான காரணம் எது?

சோதிசிங் பாண்டே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி வெளிவந்த பொழுது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 228 (அ)வின்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது குற்றம் என்னும் சட்ட விழிப்புணர்வு இவ்வழக்கைக் கையாண்டவர்களுக்கு இருந்ததால் அப்பெண்ணின் பெயரையோ, அவரது அடையாளத்தையோ ஊடகங்கள் வெளியிடவில்லை. அவர் மருத்துவக் கல்லூரி மாணவர் என்னும் செய்தி மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் இவர் நடுத்தர அல்லது உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்னும் படிமம் உருவாகிற்று. அக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அறுவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்னும் செய்தி வெளியிடப்பட்டது. அதனால்தான் "தன்பெண்டு, தன்பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டென" அதுவரை வாழ்ந்த உயர்நடுத்தர வர்க்கத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உதிரிகளால் தங்களது பாதுகாப்பிற்கு குந்தகம் வந்துவிட்டதோ என்னும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் போர்க்கோலம் பூண்டார்கள். ஆனால் 2013 சனவரி 5ஆம் நாள் "சண்டே மிரர்" இதழுக்கு பேட்டி அளித்த பத்ரி பாண்டே, உத்தரபிரதேசத்தின் குற்றூர் ஒன்றில் வாழ்ந்த, மகளின் படிப்பிற்காக தனது குறுநிலத்தை விற்றுவிட்ட, குறுவிவசாயியான தன் மகள்தான் தில்லியில் வல்லுறவு வன்கொடுமைக்கு உள்ளான சோதிசிங் பாண்டே எனத் தெரிவித்தார். அப்பேட்டியின் வழியாக, "தன்பெண்டுக்கும் தன்பிள்ளைக்கும்" தில்லியில் பாதுகாப்புக் குந்தகம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என அறிந்துகொண்ட உயர்நடுத்தர வர்க்கத்துத் திடீர்ப் போராளிகள் தத்தம் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். அண்மையில் நடந்த ஐந்து வயதுச் சிறுமியும் அவளோடு வல்லுறவுகொண்ட இருவரும் ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பது தொடங்கத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டதால்தான் தில்லி நகரத்து நடுத்தரவர்க்கத்துப் புரட்சிக்காரர்கள் அமைதியாகக் காணமற் போய்விட்டார்கள்.

கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை, மணிப்பூரில் இருந்து குசராத் வரை பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட எண்ணற்ற பெண்கள் நிலவுடைமையாளர்களாலும் அதிகாரப்புள்ளிகளாலும் வல்லுறவிற்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் நாள்தோறும் ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இவ்வன்கொடுமைகள் எவையும், இந்தியாவெங்கும் பரந்து வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்-குமாறு செய்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அலையை எதிர்க்கட்சிகள் உருவாக்க உதவும் வகையில், தில்லியில் நடைபெறவில்லை. அதனால்தான் தில்லியில் நடைபெறும் வன்கொடுமைக்கு எதிராக ஆர்த்தெழும் பலரும் இந்தியாவின் பிறபகுதிகளில் பெண்கள் மீது வன்முறை நிகழும்பொழுது சிறு முனகலைக் கூட வெளியிடுவது இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கோடிக் கையெழுத்து இயக்கத்தைத் தமிழகத்தில் தொடக்கிவைத்துப் பேசிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர், தன்னுடைய மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் வல்லுறவுக்கு உள்ளாகி அதனால் உருவான குழந்தையோடு, ஆதாரவற்றுத் தவிக்கும் தன் தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவரோடு வல்லுறவுகொண்டவன் மீது முதற் குற்ற அறிக்கை மட்டும் பதியப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதால், அவன் அதே ஊரில் தன் குடும்பத்தினரோடு கவலையற்று வாழ்வதாகவும் அப்பெண்ணிற்கு உதவ நினைத்த அந்த மாவட்ட கண்காணிப்பாளர் அந்தப் பெண்ணின் தாயாருக்கும் முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் பெருமிதம் பொங்க கூறினார். வல்லுறவுகொண்டவன் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து அவனுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டிய பணியில் தான் மும்முரம் காட்டவில்லை என்பதனை, எவ்வித வெட்கமும் இன்றி, பெருமிதத்தோடு கூறினார். ஐந்து வயதுச் சிறுமியின் வல்லுறவுக்கு ஆளான வழக்கில்கூட, சிறுமியைக் காணவில்லை என அப்பெண்ணின் தந்தை கொடுத்த முறையீட்டை காந்திநகர் காவல்துறையினர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனவும் சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், "சிறுமி உயிரோடு இருப்பதற்காக மகிழ்ச்சி அடையுங்கள்" என அறிவுரைகூறியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈராயிரம் ரூபாய் கையூட்டுக் கொடுத்தும் சிறுமி நலம்பெற வழிபாடு நடத்துகிறோம் எனக் கூறியும் அந்நகர் காவல்துறை தன்னுடைய பணியை முறையாகச் செய்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் மேலாக, அப்பெண்குழந்தையின் மீதான வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணின் கன்னத்தில் காவல்துறை உதவி ஆணையர் பலமுறை அறைந்து பெண்கள் மீது தன்னால் இயன்ற வன்முறையைச் செலுத்தியிருக்கிறார். அரசு இயந்திரத்தின் இந்தப் பொறுப்பின்மையும் கூருணர்வின்மையும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடங்கி நடைமுறையில் இருக்கும் பல்வேறு சட்டங்களை முறையாகப் செயற்படுத்தாமைதான் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணங்களாக இருக்கின்றன. எனவே, அரசு இயந்திரத்தை பொறுப்புடையவர்கள் நிறைந்த அமைப்பாக மாற்றினால்தான் குற்றங்களைக் குறைக்க வாய்ப்புத் தோன்றுமே தவிர ஆர்ப்பாட்டக்காரர்கள், பா.ச.க. தலைவர் சுசுமா, இ.மா.பொ.க. எச்சூரி உள்ளிட்ட பலரும் கூறுவதைப் போல கடுமையான புதுச்சட்டத்தாலும் தூக்குத்தண்டனையாலும் வேதியியல் முறையிலான ஆண்மைநீக்கத்தாலும் ஆண்களின் மனத்திற்குள் தோன்றும் வக்கிரத்தை அழித்து வல்லுறவைத் தடுத்துவிட முடியாது.

பெண்களுக்கு மீதான வன்கொடுமையைப் பற்றி பேசும்பொழுது எல்லாம் அதற்கு அவர்கள் உடுத்தும் ஆடைகள் காரணம் எனக் கதைப்பவர்கள், ஐந்து வயதுச் சிறுமியும் எண்பது வயது மூதாட்டியும் வல்லுறவிற்கு உள்ளாகும்பொழுது வாயே திறப்பதில்லை. பிறந்த சாதி, பெற்ற நிலவுடைமை, அடைந்த அதிகாரம் ஆகியவற்றால் திமிரெடுத்தவர்கள் நிகழ்த்தும் வன்முறைக்கு உள்ளாகும் ஊரகத்துப் பெண்கள், இந்தப் பண்பாட்டுக் காவலர்கள் போற்றும் சேலையைத்தான் உடுத்தி இருந்தார்கள்; இருக்கிறார்கள். இதனை பண்பாட்டுக் காவலர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஆக வல்லுறவுக் குற்றத்தின் வேர் வல்லுறவிற்கு உள்ளாகும் பெண்ணின் உடையில் இல்லை; அதில் ஈடுபடும் ஆணின் மனதிற்குள் புதைந்திருக்கும் "ஆண்மை" என்னும் திமிரில் பதுங்கி இருக்கிறது. அத்திமிர் அவனது மனதிற்குள் நொதித்துப் பொங்கி, உற்றுப்பார்க்கும் கண்ணின் கருமணியின் வழியாக வளிந்து பெருகி வன்முறையாக வெடிக்கிறது.

ஆண் பூப்பெய்தும் பொழுது அதனை விழாவாகக் கொண்டாடி வெளியுலகிற்கு அறிவிக்காத மக்கள், பெண் பூப்பெய்தியதும் "இதோ இப்பெண் ஆணின் நுகர்விற்கு அணியமாக இருக்கிறாள்" என அறிவித்துக் கொண்டாடும் விழாவில் தொடங்கி, வடிவுடைய பெண் திரையின் வலப்பக்கத்தில் இருந்து இடம்பக்கமாக புன்னகைத்துக்கொண்டே பார்வையாளர்களைப் பார்த்தவாறு நடந்துசெல்லும் பொழுது "தொட்டுக்கொள்ளவா? உன்னைத் தொட்டுக்கொள்ளவா?" என பின்னணியில் ஒலிக்கும் ஊறுகாய் விளம்பரம் வரை ஆணின் நுகர்பொருளாகப் பெண்ணை படிமப்படுத்தும் ஒவ்வொரு செயலும் ஆண்மைத் திமிரையும் வக்கிரத்தையும் வளர்த்தெடுக்கின்றன. இந்த ஆண்மைத் திமிரையும் வக்கிரத்தையும் அழித்தொழித்து ஆணையும் பெண்ணையும் சகமனிதர்களாக மாற்றாத வரை இவ்வன்முறை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பாலியல் தொல்லை தொடங்கி வல்லுறவு வரை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்யும்.

இந்நிலையை மாற்ற வேண்டுமானால் இருபால் மாணவர்களுக்கும் முறையான பாலியற் கல்வியும் பாலின நிகர்நிலைப் பயிற்சியும் பாடத்திட்டங்களிலேயே இணைக்கப்பட வேண்டும். அவற்றை தேர்விற்காகக் கற்பிக்காமல் வாழ்க்கைத் திறனாகக் கற்பிக்க வேண்டும். பெண்களை நுகர்பொருளாகப் படிமப்படுத்தும் எந்தவொன்றையும் விமர்சனம் செய்து அதனை அகற்ற வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் தங்களுடைய ஆக்கங்களில் பெண்களை தாம் எவ்வாறு சித்தரிக்கிறோம் என்பதனை உற்றுநோக்கி திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். அரசு இயந்திரத்தின் ஒவ்வோர் உறுப்பும் கூருணர்வும் பொறுப்புணர்வும் மக்கள்பால் நேயமும் கொண்டதாக மாற வேண்டும். இவை, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சமுதாயச் சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய நெடுவழியில் இருக்கும் சில மைல்கல்கள்தான். நெடுவழி நீண்டு கிடக்கிறது. அதில் நடப்பதற்கு நாம்தான் ஆயத்தமாக வேண்டும்.

24.4.2013

திருப்புமுனை மே-2013 பக். 4 -7

சி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை





சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா.  இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை நடுவாகக்கொண்ட கள்ளர்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை, கலையை, பண்பாட்டைக் களனாகக்கொண்டு “கள்ளர்நாட்டுக் கதைகள்” என்னும் பிரிவையும் காந்தியக் கோட்பாடுகளைக் களனாகக்கொண்டு “காந்தியக் கதைகள்” என்னும் பிரிவையும் தமிழில் தொடங்கிவைத்தவர்.  மணிக்கொடி எழுத்தாளரான இவர் காந்திய வழியை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்டவர்.  மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை நிலைகளனாகக் கொண்டு புனையப்பட்ட வாடிவாசல், நினைவோடை உத்தியைக்கொண்டு புனையப்பட்ட ஜீவனாம்சம் ஆகிய இரு புதினங்களின் மூலம் தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்.  திறனாய்வுக்கென்று தொடங்கிய ‘எழுத்து’ இதழை ‘புதுக்கவிதை’யைக் காக்கும் களமாகப் போற்றி வளர்த்தவர்.  வசனகவிதையில் இருந்து புதுக்கவிதையை வேறுபடுத்திக் காட்டிய வித்தகர்.  “புதுக்குரல்” என்னும் புதுக்கவிதைத் தொகுப்பை இருமுறை பதிப்பித்தவர்.

அழகின்மையால் மணமாகாதிருக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டத்தைப் படம்பிடிக்கும் “என்று வருவானோ?” என்னும் சிறுகதையை 1961 ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் சிதம்பர சுப்பிரமணியன் எழுதினார். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தால்,
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்

பேசாத சொல்லாகி

சுவடிக்குள் நொறுங்குகிறேன்

உணராத பொருளாகி

சொல்லுக்குள் புழுங்குகிறேன்

ஆளாத பாண்டமாக

சேந்தியிலே மழுங்குகிறேன்

என்னும் கவிதையை தொடங்கி, தொடர்ந்து சி. சு. செல்லப்பா பல கவிதைகளை  எழுதினார். 

“தற்கால வாழ்க்கைச்சூழல் எனக்கு திருப்தி தரவில்லை.  எனவே என் கவிதைகள் ஏக்கம், வேதனை, தார்மீக கோபம், மனப்புழுக்கம், குமைவு கொண்டதாகவே இருக்கும் …. ஆனால், நான் நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்” என்னும் அறிவிப்போடு 21 சிறு கவிதைகளையும் மகாத்மா காந்தியை முன்னுறுத்தி ‘இன்று நீ இருந்தால்…’ என்னும் குறுங்காவியம் ஒன்றையும் பரிபாடலைப் போன்று எழுதப்பட்ட ‘மெரீனா’ என்னும் நெடுங்கவிதையையும் சங்கப்பாடல்களின் உருவம், ஒலி, வரியமைப்பு ஆகியவை சிதைவடையாமல். அவைகளை இன்றைய சொல்வழக்கில் மடைமாற்றம் செய்யும் கவிதைகள் எட்டை ‘புதுமெருகு’ என்னும் தலைப்பிலும் ‘வெளிக்குரல்’ என்னும் தலைப்பில் 27மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் சி. சு. செல்லப்பா படைத்திருக்கிறார்.   இவைகளை ஏல்லாம், “மாற்று இதயம்” என்னும் தொகுப்பு நூலாகவும் “இன்று நீ இருந்தால்…” என்னும் தனிநூலாகவும் தனது எழுத்து பிரசுரத்தின் வழியாக வெளியிட்டார்.

ஆழ்ந்த் உள்ளடக்கமானது செறிவான உருவத்துடன் கலைத்தன்மை சிதையாமல் உணர்த்தப்படுவதே சிறந்த கவிதை என்றால், சி. சு. செல்லப்பாவின் கவிதைகளை சிறந்த கவிதைகள் எனக் கூறமுடியாது.  ஏனெனில், அவர் தனது கவிதைகளி உள்ளடக்கத்திற்குத் தந்த இடத்தை அதன் உருவாக்கத்திற்கும் உணர்த்தும் முறைக்கும் அவர் தரவில்லை. 

உருவம்:
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியனவற்றின் உருவங்களை வசன, புதுக்கவிதைகள் விலக்கி வைத்திருக்கின்றன. ஆனால் நாம் பேசும்பொழுது வெளிவரும் பேச்சுக்காற்றின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வசன, புதுக்கவிதைகள் ஏற்ற இறக்கமான அடியமைப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது ஓல்சன் கோட்பாடு.   இக்கோட்பாட்டை, அசபாக் கோட்பாடு என்பார் எழில்முதல்வன்.

இசை அலறும்

எரிமலை வாய்

சொல் நொறுங்கும்

கல் ரோலர்

ஜவ்வு எரிக்கும்

கொல்லுலைக் கோல்

என ஒலிபெருக்கியைப் பற்றிய கவிதையிலும் வேறு சிலவற்றிலும் அசபா அடிகளை கவனமாகப் பின்பற்றும் சி. சு.செ.

ஃபாய் ஃபாய் குளிரப்பேசி

பசப்பி விளிம்பில் இமயப் பாய்சுருட்ட வந்தோன்;

சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து

நடுக்கடலில் நின்று ஊளையிடும்

நம்பெயர் பாதிகொண்ட உதிரித்தீவோன்

முக்கூட்டாய் சேர்ந்து பகைத்தொழில் வளர்க்க

புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு

என்பது முதலான பல கவிதைகளில் பின்பற்றாது விடுகிறார். இதனால் இவரது கவிதைக்குக் கிடைத்திருக்க வேண்டிய உருவச்செப்பம் சிதைந்துவிடுகிறது.

உணர்த்தும் முறை:


எல்லா ஊரு கோயிலிலும்

எண்ண யூத்தி விளக்கெரியும்

எங்க ஊரு கோயிலில

பச்சத் தண்ணி நின்னெரியும்

என்பது தனது ஊரின் பெருமையைப் பாடிக்கொண்டே நடக்கும் ஒரு பென்ணின் நாட்டுப்புறப் பாட்டு.  இப்பாடலின் இறுதியடியில் உறைந்திருக்கும் கற்பனை, மற்ற மூன்றடிகளுக்கும் பொருள் அடர்த்தியைச் சேர்த்து கவிதையைப் பெற்றெடுக்கிறது.  அவ்வடியே கற்போர் நெஞ்சைக் கவ்விப் பிடிக்கிறது. 

இத்தகு தாக்கத்தை சி. சு. செ.வின் கவிதைகளில் காண முடியவில்லை.  ஏனெனில் அவரது படைப்புகளில் ஒரு சிறந்த கவிதைக்குரிய உணர்வோட்டம் இல்லை.  எனவேதான்,

மேல்வண்டி இறங்கு ரவியின் பொன்ஒளி

கீழ்வானடி ஏற்றும் ஒளிச்சாயை

நீலஉடல் புடவை கரைக்கட்டில்

சாயச் சிவப்பு கலந்ததுபோல்

அடிவானம் ஆரஞ்சு விளும்பு கட்டும்

நீலக்கடல் கரும்பச்சைத் தோற்றம் கொள்ளும்

எழும் அலைநுரைகள் ஊதாநிறம் பூரிக்கும்

விழும் மஞ்சள் வெய்யில் மெரினா முழுதும்

மணல் இன்னும் பழுப்புக் கருக்கும்

முகங்கள் அத்தனையும் ஸ்நோபூச்சாய் வெளுக்கும்

வான அடியில்

தொலை எழுசிறு அலை பலப்பல இழைந்து

சுழிபடு பெருஅலை எனஉரு உயர்ந்து

நுரையொடு மணல்கரை அடைய முனைந்து

உதறிய வெண்மணிப் பொடியெனத் தெறிக்கும்

என்பன போன்ற சிற்சில அடிகளைத் தவிர, பெரும்பான்மைக் கவிதைகள்,

சாம்ராஜ்ய பேராசைத் தனிமனித மன்னன்

கெய்ஸர் பெல்ஜியத்தை வீழ்த்தியது பழங்கதை;

சர்வாதிகார வெறித் தனிமனிதத் தலைவன்

ஹிட்லர் போலந்தை வீழ்த்தியது பழங்கதை

என்று உரைநடைத்தன்மை கொண்டதாகவே இருக்கின்றன.


உள்ளடக்கம்:


செறிவான உருவமும் சிறந்த உணர்த்துமுறையும் உள்ள கவிதை உயர்ந்த உள்ளடக்கம் கொண்டதாக இல்லாவிடில், அதனால் இச்சமூகத்திற்கு எப்பயனுமில்லை.  அதனால்தான் இடைக்காலப் பாடல்கள் பல படிப்பாரற்றுக் கிடக்கின்றன.  ஆனால் சி.சு.செ.வின் கவிதைகளோ செறிவான உருவமும் சிறந்த உணர்த்தும் முறையும் கொண்டவையாக இல்லாவிடினும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்டவைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,

சுப்பா சாஸ்திரிகள்

அகத்தில் பிறந்து

குப்பா சாஸ்திரிகள்

அகத்தில் வளர்ந்து

லவணம் என்றால்

தெரியாதா எனக்கு

நன்றாக இருக்கு!வ்- என

பரிமாறினாள் இலையில்

மகிஷத்தின் சாணத்தை!

என்னும் “சர்வஞானி” என்னும் கவிதையில்  வறட்டுப் பெருமை பேசும் போலி அறிஞர்களின் உயர்வுமனப்பான்மையை எள்ளி நகையாடுகிறார். 

பசிக்கு அழுது, வலிக்கு முனங்கி, காதலுக்கு ஏங்கி, பொருளுக்கு தவித்து, உணர்ச்சிக்குத் துடித்து இப்பொழுது மரத்துப்போன தனது இதயத்திற்கு மாற்று இதயம் வேண்டி கவிதையைத் தொடங்கிம் சி. சு. செ. அப்படிக் கிடைக்கும் இதயம் அரசியல்வாதி, மதவாதி, விஞ்ஞானி, குழந்தை, வாலிபன், நடுவயது, கிழடுகள் ஆகியோரின் இதயம் வேண்டாமென்று அதற்கானக் காரணங்களை அடுக்கி கவிதையின் முதற்பாகத்தை முடிக்கிறார். 

ஓ டாக்டர்! சமீபத்தில் இதயம் மாற்றினீர்களே!

வெற்றிகரமான ஆபிரேஷனாமே, சொல்கிறார்களே,

ரத்தத்தில் பாசிடிவ் நெகடிவ் கண்டுபிடிப்பீர்களே

மூல இதயத்துக்கும்

மாற்று இதயத்துக்கும்

என்ன வித்யாசம் அறிந்தீர்கள் நீங்கள்?

என்னும் வினாவோடு இரண்டாம் பாகத்தைத் தொடங்கி, அடுக்கடுக்கான வினாகளால் மனித இயல்பை விமர்சனம் செய்துவிட்டு,

ஓ டாக்டர்! மன்னிக்கவும்

மாற்று இதயம் வேண்டாம் எனக்கு

எவன் உணர்ச்சியும் தேவையில்லை எனக்கு

என் இதயம் பாடம் கற்றிருக்கு

அதுதன் வழியே போய் ஒடுங்கட்டும்

ஓ டாக்டர்! உங்களுக்குத் தொந்திரவு தந்தேனோ

மன்னிக்கவும்!

என்னும் பின்குறிப்போடு இதயம் மாறினாலும் மனமும் குணமும் மாறாத மனித இயல்பை, அதன் அவலத்தைச் சாடி முடிக்கிறார்.

ஆக, சி. சு. செ.வின் கவிதைகள் உருவம், உணர்த்தும்முறை ஆகிய இரண்டு கூறுகளில் ஊனப்பட்டு இருப்பினும் இன்றைய வாழ்க்கையின் மீது எழும் விமர்சனப்பாங்கான உள்ளடக்கத்தால் சிறப்புறுகின்றன. 

23.4.1990

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...