பா. ச. க.வும் காங்கிரசும் பதறுவது ஏன்?

பெரியவர்கள் சிலர், தாங்கள் வலிமையானவர்கள் எனக் காட்டவதற்காகக் கட்டிய காகித மாளிகையை அவ்வழியாக ஓடிவந்த சிறுவர்கள் ஒரே தட்டில் தடதடவெனச் சரியச் செய்வதைப் போல பாரதிய சனதா கட்சியினர் கடந்த சில ஆண்டுகளாக ஊதிப் பெருக்கச் செய்துகொண்டிருந்த “மோடி அலை” என்னும் காகித மாளிகையை தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தம்மை அறியாமலேயே தட்டிச் சரித்துவிட்டனர்.



2013 திசம்பரில் மத்தியபிரதேசம், சட்டீசுகர், இராசசுதான், மிசோசரம், தில்லி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றுள் பா.ச.க. தான் ஏற்கனவே ஆண்டுகொண்டிருந்த மத்தியபிரதேசம், சட்டீசுகர் ஆகிய மாநிலங்களைத் தக்க வைத்துக்கொண்டது. கடந்த சில தேர்தல்களில் பா.ச.க., காங்கிரசு என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி ஆட்சியை ஒப்படைத்த இராசசுதான் மக்கள் இம்முறை ஆட்சியை காங்கிரசிடமிருந்து பறித்து பா.ச.க.விடம் கொடுத்துவிட்டனர். மிசோரத்தில் பா.ச.க.விற்கு வேர்களே இல்லாததால் அம்மாநிலத்தை ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த காங்கிரசு தக்க வைத்துக்கொண்டது.



காங்கிரசும் பா.ச.க.வும் தமது வலிமையை நாட்டிற்குக் காட்டுவதற்கான களமாக தில்லி சட்டமன்றத் தேர்தலை நம்பின. அத்தேர்தலில் காங்கிரசு, பா.ச.கட்சி ஆகியவற்றோடு கடந்த 2012 அக்டோபர் 2ஆம் நாள் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சியால் பா.ச.க.வின் வாக்குகள் பிரிந்து தாம் வென்றுவிடலாம் என காங்கிரசும், காங்கிரசின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையால் அதன் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்து தாம் ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என பா.ச.க.வும் தேர்தலின் பொழுது நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேர்தல் முடிவோ வேறுவிதமாக அமைந்துவிட்டது. தில்லி சட்டமன்றத்திற்கு உரிய 70 தொகுதிகளில் பா.ச.க. 32 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளையும் காங்கிரசு 8 தொகுதிகளையும் ஐக்கிய சனதாதளம் 1 தொகுதியையும் தனிவேட்பாளர் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன. ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை தில்லியில் பா.ச.க.வை கரை சேர்க்கவில்லை. பலரும் எதிர்பார்த்ததைப் போல காங்கிரசு ஆட்சியை இழந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது.



ஆட்சியமைக்க குறைந்தது 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் அதிக தொகுதியை வென்ற பா.ச.க. விற்கு ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குதிரைபேரம் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் அக்கட்சிக்கு இல்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை வேண்டிப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பா.ச.க.விற்கு இருந்தது. ஆனால், “மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்; அது எங்களது நோக்கமன்று” என ஆம் ஆத்மி கட்சியினர் அப்பொழுது கூறிவந்தனர். எனவே, தாம் ஆட்சி அமைக்க மறுத்தால் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு இச்சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். அதுவரை மோடி அலை என்னும் மாயவலையைத் தொடர்ந்து பின்னி, நாடாளுமன்றத்தையும் தில்லி சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் பிடித்துவிடலாம் என பா.ச.க. கருதியது. எனவே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்தது. பா.ச.க. எதிர்பார்த்தபடியே தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை செயலாக்கம் செய்யும் நடைமுறைகள் தொடங்கின.



இதற்கிடையில் அரசியல் நோக்கர்கள், ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதன் மூலம் மறுதேர்தல் என்னும் செலவைத் தவிர்க்கலாம் எனக் கருத்துக் கூறத் தொடங்கினர். வீசுவதாகக் கூறப்படும் மோடி அலையை துடைத்து எறிய விரும்பிய காங்கிரசு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகக் கூறியது. இச்சூழ்நிலை மாற்றம் ஆம் ஆத்மி கட்சியினர் மனதில் மாற்றத்தை மெல்ல மெல்ல உருவாக்கியது. தாம் ஆட்சி அமைக்க உதவும் கட்சி, தாம் விதிக்கும் 18 கட்டளைக்கு உட்பட வேண்டும் எனக் கூறி அவற்றை காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தது. பா.ச.க. அக்கட்டளைகளை ஏற்க மறுத்தது. காங்கிரசு அவற்றுள் 16 கட்டளைகள் நிர்வாகம் தொடர்பானவை; அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சி தானே நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் 2 கட்டளைகள் மட்டுமே சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியவை; அவற்றிற்கு தம் ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியினர், ஆட்சிக்காக தம் எதிரியோடும் கைகோர்த்துக்கொண்டவர்கள் என்னும் முத்திரை தம் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களிடம் கருத்துக் கேட்டல் என்னும் முறையை அறிமுகம் செய்து தில்லி வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டனர். சில நாள்களுக்குப் பின்னர் காங்கிரசு கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தமக்கு மக்கள் ஆணையிட்டுவிட்டார்கள் எனக் கூறி அமைச்சர்களின் பட்டியலை அறிவித்து அரவிந்த் கெசுரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



பா.ச.க. தான் எதிர்பாராத இந்தத் திருப்பத்தைக் கண்டு திகைத்துப்போய் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கவனமாகக் கட்டமைக்கப்பட்ட “மோடி அலை”, ஆம் ஆத்மியால் துடைத்து எறியப்பட்டதாலும் அந்நிலை அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் பாதிக்குமோ என்னும் அச்சத்தாலும் பதறித் துடிக்கிறது. அண்ணா கசாரே உண்ணாவிரத்தை அடுத்து நடந்த நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஒன்றில் அரவிந்த் கேசிரிவாலின் தூண்டுதலில் அண்ணா கசாரே காங்கிரசை எதிர்த்து பரப்புரை ஆற்றியதை நட்போடு வரவேற்ற பா.ச.க. இப்பொழுது அதே அரவிந்த் கெசிரிவாலை நம்பிக்கைத் துரோகியாகப் பார்க்கிறது. ஆம் ஆத்மிக் கட்சியினர் தில்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் எனப் பிதற்றத் தொடங்கி இருக்கிறது. அதன் பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிரொலிக்க இருக்கிறது.

அதேவேளையில் பூனை மடியில் கட்டிக்கொண்டு திருடப் போனதைப் போல, மோடி அலையை துடைக்க ஆம் ஆத்மிக் கட்சியினரை ஆதரிக்கிறமோ என்னும் அச்சம் காங்கிரசிற்கு இருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டி எடுப்போம்; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியினர் பேசத் தொடங்கி இருப்பது காங்கிரசு கட்சியினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி இருக்கிறது. எனவேதான் காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சனார்த்தனன் திவேதி, ஆம் ஆத்மி கட்சியினர் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என சில நாள்களுக்கு முன்னர் கூறி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினர் அவ்வாறு ஈடுபட்டால் சரண்சிங், சந்திரசேகர் போன்ற பெரும்புள்ளிகளையே, பஞ்ச தந்திரங்களில் ஒன்றான அடுத்துக்கெடுத்தலைப் பயன்படுத்திக், கவிழ்த்த தங்களால் அரசியல் அனுபவம் அற்ற அரவிந்த் கெசிரிவாலையும் கவிழ்த்துவிட முடியும் என காங்கிரசு நம்பிக்கொண்டு இருக்கிறது.

எனவே பா.ச.கட்சியை பதற வைத்திருக்கிற, காங்கிரசு கட்சிக்கு உதறலைக் கொடுத்திருக்கிற ஆம் ஆட்சியின் ஆட்சிக் காலம் ஒரே ஒரு நாளாகவும் இருக்கலாம் ஐந்தாண்டுகளாகவும் இருக்கலாம்; அது அவர்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையைப் பொறுத்து இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

நிலமற்ற ஏழைகளுக்கு நிலவுரிமை

வே. வேங்கடாசலபதி சிவகங்கையில் வாழும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தலித்கள், குழந்தைகள், மீனவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து வினையாற்றுபவர். அவை பற்றி கட்டுகரைகளும் பாடல்களும் இயற்றும் இவர், கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு பெயரன் முறையினர். 2010 செப்டம்பர் 19 ஆம் நாள் நிலவுரிமை பற்றி எழுதிய கட்டுரை இங்கே பதியப்படுகிறது.


உயிரினங்களுக்கு இயற்கை அளித்துள்ள உன்னதமான பரிசுகளில் நிலம் ஒன்றாகும். உயிர் வாழ்க்கை இப்பூவுலகில் தொடருவதற்கு நிலமும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இன்னும் கண்ணுக்குப் புலப்படதா எண்ணற்ற உயிரனங்கள் நிலமகளுக்கு உறுதுணையாக உள்ளன. இயற்கையை அண்டி வாழ்ந்தாலும் இவ்வுயிரினங்கள் இயற்கையின் எதிரிகளாக இருப்பதில்லை. மனித இனம் மட்டுமே இயற்கையை வரம்பற்று சுரண்டி வாழ்கின்றது. மனித இனம் இயற்கை வளங்கைள தன் சுயதேவைகளுக்கு மிதமிஞ்சிய போக்கில் சுரண்டி அழிக்கிறது. இயற்கையின் விதிமுறைகளையும், தன்மைகளையும் அறிந்து அதற்கு தக்கவாறு மனித இனம் இயற்கையை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறிந்தோ அறியாமலோ நடக்கும் இந்தச் சுரண்டல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் போகின்றது. இந்தச் சுரண்டலைத் தாங்காமல் இயற்கையும் தனது வலுவை அவ்வப்பொழுது காட்டத் தவறுவதில்லை. ஆனால், மனித இனம் இயற்கையின் அச்சுறுத்தலையெல்லாம் சிறிதும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இவ்வாறாகிய தவறான இயல்பு வளர்ந்துருப்பெற்ற மனித இனம் தனக்குள்ளேயும் சுரண்டல் விளையாட்டுகளை ஆடுகின்றது. தன்னைவிடப் பன்மடங்கு வலுவாய்ந்த இயற்கையையே தனக்கு அடிமையாக்க எண்ணும் மனிதர்கள், தங்களுக்குள்ளேயும் அடிமைப்படுத்தி வைக்கவும், சுரண்டலுக்குள்ளாக்கவும் ஒரு தரப்பினரை உருவாக்கி வைத்துள்ளனர். வளங்களும் வாய்ப்புகளும் வளர்ச்சியும் சமமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பது நெறியாகும். இந்நெறிக்கு மாறாக சமூகத்தின் போக்கு இருக்குமேயாயின், அதைச் சீர்படுத்தி செம்மை செய்வது மனித நேயம், சமூக நீதி, சம மேம்பாடு, இயற்கைசார வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டோருக்கு முதல் பணியாகும். இயற்கைப் பொதுவளமான நிலம் சமனற்ற வகையில் உடைமையாக்கப்பெற்றும் எதிர்மறைப் பயன்பாட்டிற்கு மிகுதியாக உட்படுத்தப்பெற்றும் பல்வேறு வகையான சமூக-பொருளாதார ஏற்றதாழ்வுகள் உண்டாகி நிலைக்க அடிப்படையானதாகவும் மாற்றப்பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் நிலவுடைமையானது சமூகப் பொருளாதார தரவரிசையைத் தீர்மானிப்பதாகவும், ஓட்டு அரசியலை நிர்ணயிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த நிலவுடைமை ஒரு சாராரிடம் மிகுதியாக இருக்கும் பொழுது நிலவுரிமை மறுக்கப்பெற்று வஞ்சிக்கப்பெற்ற வர்க்கம் ஒன்று உருவாகின்றது. தங்கள் உடலுழைப்பைத் தவிர பொருளீட்ட உதவும் பெரிய அளவிலான வேறெந்தப் பொருள் வளங்களோ, சொத்துகளோ இல்லாத உழைக்கும் ஏழை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதே இவ்வர்க்கம். இவ்வாறாகிய ஏற்றதாழ்வு மிக்க சமூக-பொருளாதாரச் சூழலில் சமமான மேம்பாடு, நீடித்த மேம்மாடு என்பதெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, நிலம், நிலவுடைமை தொடர்புடைய அநீதிகளையும், சர்ச்சைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தீர ஆராய்ந்து திட்டம் வகுத்துச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. நிலமற்ற ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்காத இன்றைய சமூக அமைப்பு, பொருளாதாரத் திட்டங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே! ஓட்டு அரசியலைத் தாண்டியதொரு சாமான்ய மக்களின் அரசியல் உள்ளது. அதை வலுப்படுத்தி நடைமுறையில் செயல்படச் செய்தல் நிகழ்காலத்தின் நிர்ப்பந்தம். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை எட்டிப்பிடிக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய உத்தியாகும். இதை நோக்கி மக்களை ஈடுபடுத்தும் செயல்பாடுகளைத் தொடங்கும் தருணம் இது. வஞ்சிக்கப்பெற்ற நிலமற்ற ஏழை மக்களின் எழுச்சியும் கூட்டுச் செயல்பாடும் வன்முறையற்ற வழிகளில் ஒருமுகப்படுத்தப்பெற வேண்டும். எட்டுத் திக்கிலும் இதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட வேண்டும். விடுதலைப் போராட்டம் காலம் தொடங்கி நமது நாட்டில் நடைபெற்ற எல்லா வகையான அறப்போராட்டங்களிலும் சாமான்ய மக்களின் பங்கேற்புதான் வெற்றி இலக்கை அடைய வித்தாக அமைந்தது. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வஞ்சிக்கப்பெற்ற ஏழைகளின் எழுச்சியில் புதிய வரலாற்றின் தொடக்கம் நிகழும். சமத்துவமும், மனித நேயமும் தழைக்க வகை செய்யும் முன்னேற்றமான சமூக மாற்றமே உன்னதமான இலட்சியம். இந்த இலட்சியத்தை நோக்கிய நமது பயணம் தடைகளும் சவால்களும் மிக்கதாக இருக்கும். எனினும் பயணத்தைத் தொடங்கியே தீருவோம். இந்த இலட்சியப் பயணத்தை ஓட்டு அரசியல் சாராத பொதுநல இயக்கங்கள், தன்னார்வ சமூக செயல்பாட்டு அமைப்புகள், குடிமைச் சமுதாய அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து வழிநடத்த வேண்டும். சமூக அக்கரையுள்ள நாட்டுப்பற்றாளர்கள் இந்தப் பயணத்தில் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு போராட்ட உத்திகளை வடிவமைத்து உறுதி குறையாது போராட வேண்டும். மகாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய விநோபா பாவே, ஜயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியோர்கள் கையாண்ட வன்முறையற்ற போராட்ட உத்திகளை அங்கீகரித்து ஏற்று நமது இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்;. நிலமற்ற உழைக்கும் ஏழைமக்களின் பெருவாரியான ஆதரவும், எழுச்சியும் இந்த இலட்சியத்தை அடைய நமக்கு வலுவான ஆதாரமாக அமையும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக்கப்பட வேண்டும். உண்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அறவழியில் போராட களம் அமைக்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அழைப்பு



நேற்று காலை 8.30 மணிக்கு அலுவலகத்திற்கு பேருந்திற்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி "பீப்" என ஒலித்தது. வலது கையிலிருந்த பையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, சட்டைப்பையில் இருந்து கைபேசியை எடுத்துப்பார்த்தேன். +61 எனத் தொடங்கும் எண் திரையில் மின்னியது. வெளிநாட்டு அழைப்பு எனத் தெரிந்தது. பேருந்தின் குலுக்கலில் யார்மீதும் மோதிவிடவோ, விழுந்துவிடவோ வகையில் நின்றுகொண்டு அழைப்பை ஏற்று கைபேசியைக் காதிற்குக் கொண்டுபோனேன்.

"வணக்கம்! அரி" “வணக்கம்! நீங்கள் அரிஅரிவேலன் தானே?” “ஆமாம்” “சில நிமிடங்கள் பேசலாமா?” “ம்ம்ம்…” அப்பொழுது பேருந்திற்குள் அலறிக்கொண்டிருந்த குத்துப்பாட்டின் ஒலியையும் மீறி ஓட்டுநர் ஒலிப்பானை அழுத்த, எதிர்முனையில் இருப்பவர் என்ன சொன்னார் என்பதே காதில் விழவில்லை. "பேருந்தில் இருக்கிறேன். பத்து நிமிடம் கழித்து கூப்பிடுகிறீர்களா?" என்றேன். "சரி ஐயா, அழைக்கிறேன்" என்றார் எதிர்முனையில் இருந்தவர்.

பத்து நிமிடம் கழித்து கைபேசி அழைத்தது. நான் அலுவலகத்தின் வாசலில் இருந்தேன். எடுத்து பார்த்தால் அதே எண்.

“வணக்கம். அரி பேசுகிறேன்.” “வணக்கம். நான் செல்வராஜ். ஆஸ்திரேலியா வானொலியில் இருந்து பேசுகிறேன். இது இந்திய நாட்டில் அகில இந்திய வானொலியைப் போல ஆஸ்திரேலிய வானொலி. இதன் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நான். இந்த வானொலியில் தமிழகத்தின் அரசியல் நிலையைப் பற்றிய கருத்தை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்களிடம் பேட்டிகண்டு ஒலிபரப்புவோம். ஞாநி, சிகாமணி போன்றவர்கள் அவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார்கள். இம்முறை நீங்கள் கருத்துக் கூற முடியுமா?”

'பார்ரா, உன்னோட புகழ் ஆஸ்திரேலியா வரைக்கும் பரவி இருக்கிறது' என்று கிண்டல் செய்தது மனம் ஒரு பக்கம். மறுபக்கம் 'வேறு யாரே என நினைத்துக்கொண்டு நம்மிடம் பேசுகிறார்' என எண்ணியவாறே, “என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எனது எண் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?” என வினவினேன்.

“நண்பர் கொடுத்தார். அவர் உங்களுடைய எழுத்துகளைப் படித்திருக்கிறார். அதனால்தான் அழைத்தேன்” “அப்படியா?” “ஆமாம். முகநூலில் படித்திருப்பார்போல” “சரி. இப்பொழுது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ “இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பற்றி இரண்டு அல்லது மூன்று கேள்விகளை நான் கேட்கிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். அதிலிருந்து சில துணைக்கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கும் பதில் சொல்லுங்கள். அவற்றை நான் பதிவுசெய்துகொள்கிறேன்.” “நான் இப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறேன். அதனால் உடனடியாகப் பதிவு செய்ய இயலாதே!” “இப்பொழுது கேள்விகளை முடிவுசெய்துகொள்வோம். உங்களது அலுவலக நேரம் முடிந்ததும் பதிவுசெய்துகொள்வோம்” “சரி. உங்களின் வினாகளைக் கூறுங்கள்”

அவர் மூன்று வினாகளைக் கூறினார். மூன்று மணிநேரம் கழித்து அழைத்து எனது துலங்கள்களை பதிவு செய்துகொள்வதாகக் கூறினார். இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன்.

சரியாக பிற்பகல் ஒரு மணி. கைபேசி தும்மியது. “நண்பரே! பதிவுசெய்துகொள்ளலாமா?” “பதிவு செய்துகொள்ளலாம்”

அவர் வினாகளையும் துணை வினாகளையும் வினவினார். நான் எனது கருத்துகளைக் கூறினேன். ஏழு மணிகளுக்குள் அச்செவ்வி முடிந்தது. அது ஒலிபரப்பானதும் அதன் இணைய உரலியை அனுப்பவாதக் கூறினார். கூறியதைப் போலவே அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத்தான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்; கேட்டு உங்களின் கருத்துகளைக் கூறுங்கள்.

அந்த நண்பர் ஆஸ்திரேலியாவில் இருந்து பேசியதும் மொழிக்கலப்பின்றி தமிழைப் பேசியதும் “ழ”கரத்தை பிழையின்றி ஒலித்ததும் அவர் ஈழத்தமிழராக இருப்பாரே என எண்ண வைத்தது. வினவினேன். “இல்லை. ஈழத்திற்கு அருகில் இருக்கிற இந்திய நாட்டின் கன்னியாகுமரிப் பகுதியில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவன்’ என்றார். கடல்கடந்து சென்று அயலகத்தில் தமிழ்ப் பணியாற்றுகிற, தாயகத் தமிழகத்தின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கிற அந்நண்பர் திருமிகு செல்வராஜ் வாழ்க!

அவரிடம், என்னை யாரென்றே தெரியாமல் அரசியல் கருத்துக்குரைக்கும் இதழாளர் என அறிமுகம் செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அவருக்கு “நன்றி” கூற வேண்டும் 

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/307650/t/Would-Jeyalalitha-be-next-PM-of-India/in/language

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...