விடுதலைக் கருவிகள்


 
“உழுகிற கைக்கு நிலம் வேண்டும்
 உழவர் பிழைக்க நிலம் வேண்டும்”
என்பன போன்ற நிலவுரிமைப் பாடல்களால் குருக்கத்தி வினோபா ஆசிரமத்தின் வெளியை நிறைந்தவரை, ‘இவரு பேரு அம்மாவாசை; அம்மாசின்னு கூப்பிடுவாங்க.  எங்க போராடங்கள்ல இவருதா ஆசுதான பாடகர்’ என அறிமுகம் செய்து வைத்தார் சர்வோதயச் செயற்பாட்டாளரான கிருட்டிணம்மாள். அகவை அறுபது என மதிக்கத்தக்க மெலிந்து, உயர்ந்த, வெயிலில் உழைத்துக் கறுத்த அந்தப் பாடகர் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். “உன்னப்பத்திச் சொல்லு அம்மாசி” என்றார் கிருட்டிணம்மாள். “எம் பேரு அம்மாசி. உழவுதா நமக்குத் தொழிலு. அலுப்ப மறக்க அவுத்துவிடுற மருந்துதா பாட்டு. முதல்ல எங்வூரு பண்ணல இருந்தேன். இந்த அம்மா அங்கிருந்து என்ன மீட்டு ஒரு ஏக்கரு நெலம் தந்தாங்க. குடும்பத்தோட அந்த நெலத்துல உழச்சு, அதோட விலயக் கட்டுனேன். நெலம் எனக்குச் சொந்தமாச்சு. சொந்த நெலத்துல கடுமய உழச்சு நானா இரண்டு ஏக்கரு நெலம் வாங்குனேன். இப்ப நல்லா இருக்கேன்” என்றார். அவருக்கு பக்கத்தில்  இருந்த இன்னொருவர், “ஏங் கதயும் கிட்டத்தட்ட அம்மாசி கத மாதிரிதா. அம்மா ஒரு ஏக்கரு எங்கவீட்டு பொம்பளயாளு பேருல கொடுத்தாங்க. ஒழச்சு கடன அடச்சு, இன்னும் கொஞ்சம் நெலம் வாங்குனோம். ஆணையும் பொண்ணையும் படிக்க வச்சோம். ஒன்னு வாத்தியாரா ஆயிருச்சு. இன்னொன்னு ஏதோ ஆபிசுல வேல பாக்குது. ஆனா இரண்டும் இப்பவும் நெலத்துல வேல செய்துக. பேரப்பிள்ளை டாக்டரு ஆகணுமின்னு இப்பவே சொல்லுது. எப்படியும் அத டாக்டரு ஆக்கிரனும். அதுக்குப் பொறவும் அது நெலத்தில இறங்கி உழச்சா, இந்த நெலம் அதுக்கு. இல்லாட்டி யாரு நெலத்துல இறங்கி உழது ஒழக்கிறாங்களோ அவங்களுக்கு. மேழி புடிச்சு உழவுபோடத் தெரியாதவங்களுக்கு எதுக்கு நெலம்?” என அவர்கள் தமது கடந்த கால வாழ்க்கையை, நிகழ்கால நிலையை, வருங்காலத் திட்டத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி, தம்மை அறிமுகம் செய்துகொண்டனர். கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த அவர்கள் தம்மைப் பற்றிக் கூறிய அந்த அறிமுகத்திற்குள், அவர்கள் வாழும் பரப்பில் நிகழ்ந்திருக்கிற குமுகாய-பொருளாதார மாற்றமும் அவர்கள் பெற்றிருக்கும் அரசியற் கல்வியும் புதைந்திருந்தன.  நாங்கள் கிருட்டிணம்மாளை, ‘இது எப்படி நடந்தது?’ என்பதனைப் போலப் பார்த்தோம்.  கிருட்டிணம்மாள் சொல்லத் தொடங்கினார்.

கன்னியாகுமரியில் வினோபாவும் கிருட்டிணம்மாள் உள்ளிட்ட சர்வோதய ஊழியர்களும்
இந்திய விடுதலைக்குப் பின்னர் பொதுவுடைமையாளர்கள் தெலுங்கானாவில் நிலவுரிமைப் போராட்டம் நடத்தினார்கள். அது ஆயுதப் போராட்டமாக இருந்ததால் அவர்கள் பல அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அரச வன்முறையாலும் எதிர்வன்முறையாலும் மக்கள் அமைதி இழந்தார்.  அதனால் வினோபா அங்கிருந்த நிலப்பகிர்வுச் சிக்கலை இன்னாசெய்யாமை வழியில் தீர்க்க நினைத்தார். பூமிதானம் என்னும் நிலக்கொடை இயக்கத்தைத் தொடங்கினார். நிலம் உள்ளவர்களிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றி, அவர்களிடம் இருக்கும் நிலங்களைப் பெற்று நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது அவ்வியக்கத்தின் நோக்கம். இந்தியாவெங்கும் வினோபா சென்று பெருமளவு நிலத்தைப் பெற்றார்; நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.  அந்த இயக்கத்தை தமிழ்நாட்டில் கிருட்டிணம்மாள் கணவர் செகந்நாதன் ஒருங்கிணைத்தார். நிலக்கொடையானது, ஊர்க்கொடை, வட்டாராக்கொடை என மிகுந்த எழுச்சியோடு விரிந்துகொண்டே போனது. ஆனால், பெற்ற நிலங்களை அந்த நிலமற்றவர்கள் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. அவை நடைபெற வேண்டும் என சே.சி.குமரப்பாவைப் போன்றவர்கள் கூறினார்கள்.  வினோபாவோ அது மற்றவர்களின் வேலை எனக் கூறிவிட்டு, நிலக்கொடை இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்தார்.  கிருட்டிணம்மாளும் செகந்நாதனும் வினோபாவோடு இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தனர்; அதே வேளையில் குமரப்பாவின் கூற்றில் இருந்த நடைமுறை உண்மையையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.

ஜே. சி. குமரப்பா
 இம்முயற்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, 1945ஆம் ஆண்டு முதலே பொதுவுடைமையாளர்கள் நிலவுரிமை இயக்கத்தை தஞ்சை மாவட்டத்தில் நடத்தத் தொடங்கினார்கள். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நஞ்சை நிலங்களில் பெரும்பாலானவை கோயில் நிலங்கள். அந்நிலங்கள் அனைத்தையும் மிகச் சிலரே குத்தகைக்கு எடுத்திருந்தனர். அவர்களிடம் உழவுத் தொழிலாளர்கள் பண்ணையடிமைகளாக இருந்தனர். பொதுவுடைமை இயக்கம் அந்த உழவுத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தது. சீனிவாசராவ் போன்றவர்கள் ஒவ்வொரு பட்டியாகச் சென்று, அம்மக்களோடு வாழ்ந்து அவர்களைத் திரட்டினார்கள். பண்ணை அடிமை முறையை ஒழிக்கப் பெரும்பாடுபட்டார்கள்.  விவசாயத் தொழிலாளர் இயக்கத்தை கட்டியெழுப்பினர். அதற்கு எதிராக  பண்ணையார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். ஒடுக்குமுறையும் விடுதலை வேட்கையும் மோதிக்கொண்டன. இதன் உச்சமாக 1969 திசம்பர் 25ஆம் நாள் இரவில் கீழவெண்மணியில் பண்ணையாரிடமும் அவர் அடியாள்களிடம் இருந்தும் உயிர் தப்புவதற்காக 20 பெண்களும் 19 சிறுவர்களும் 5ஆண்களும் ஒரு குடிசைக்குள் மறைந்திருந்தனர். அவர்களை அப்பண்ணையாரும் அவர் அடியாள்களும் தீயிட்டுக் கொளுத்திக் கொன்றுவிட்டனர்.

இச்செய்தியை திசம்பர் 26ஆம் நாள் வானொலியின் வழியாக காந்திகிராமம்  ஊழியரகத்தில் தங்கியிருந்த கிருட்டிணம்மாள் அறிந்தார். வெளியூர் சென்று அன்றைக்குத் திரும்புவதாக இருந்த செகந்நாதன் வந்ததும் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்தார். அவ்வேளையில் குன்றக்குடி அடிகளார் தொலைபேசியில் அழைத்து, மறுநாள் கீழவெண்மணிக்கு தான் செல்ல இருப்பதாகவும் விருப்பினால் கிருட்டிணம்மாளும் செகந்நாதனும் தன்னோடு வரலாம் எனவும் தெரிவித்தார். அவ்வாறே மறுநாள் அம்மூவரும் கீழ்வெண்மணி நோக்கிச் சென்றனர். வழியில், ‘இந்த கம்யூனிடுக பலாத்கார வழிய பின்பத்தி இப்படி 44 உயிரு போக காரணமாயிட்டாங்களே” என செகந்நாதன் பொருமிக்கொண்டே இருந்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கிருட்டிணம்மாள், ‘அங்க மக்கள மாடுமாதிரி ஆண்ட நடத்துரா. அத அந்த கம்யூனிசடுதான தடுத்து நிறுத்தி அந்த மக்களொட மக்களா கிடக்கிறா. எந்த காங்கிரசுக்காரே அதப்பண்ணுனா? சும்மா கம்யூனிடுகள கொற சொல்லிக்கிட்டு’ என வெடித்திருக்கிறார். அடிகளார் இருவரையும் சமாதானம் செய்திருக்கிறார். மூவரும் கீழவெண்மணியை அடைகிறார்கள். எரிந்து சாம்பலாய்ப் போன ராமையாவின் குடிசையின் முன்னர் கனத்த மனத்தோடு நிற்கிறார்கள்.

அன்றைய மதுரை மாவட்டம் அய்யன்கோட்டையில் உழவுத்தொழிலாளர் வீட்டில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, கசுதூரிபாய் நினைவு நிதியின் உதவியால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற கிருட்டிணம்மாளின் மனம் கொதிக்கிறது. ‘இந்த மக்களை இனி கூலிவுயர்வு கேட்பவர்களாக அன்று; நிலவுடமையாளர்களாக மாற்ற வேண்டும்’ என முடிவு செய்கிறார். அங்கிருந்து ஊருக்குத் திரும்பும்பொழுது செகந்நாதனிடமும் அடிகளாரிடமும் தனது எண்ணத்தைக் கூறுகிறார்.  அவர்களோடு கலந்துரையாடி சில திட்டங்களை வகுத்துக்கொண்டு சில நாள் கழித்து மீண்டும் கீழவெண்மணி பகுதிக்கு க.மு.நடராசன், பொன்னையா ஆகியோரைப் போன்ற சர்வோதய ஊழியர்களோடு திரும்புகிறார்.

 வெண்தோலும் திருந்திய பேச்சும் உடைய கிருட்டிணம்மாளை பார்ப்பனர் என எண்ணி அப்பகுதி மக்கள் விலகி விலகிச் சென்றிருக்கிறார்கள். கிருட்டிணம்மாளோ பல இடர்பாடுகளுக்கு இடையே பெரிதும் முயன்று அம்மக்களோடு மக்களாக ஒன்றி இருக்கிறார். தொடக்க நாளில் அந்த உழைக்கும் மக்களோடு அப்பகுதியில் இருந்த பிற மக்கள் சேர்ந்து பழகாமல் விலகிப் போவதைக் கவனித்து, “ஏ, அவங்க உங்ககிட்ட ஒட்டாமலேயே இருக்காங்க?” என கிருட்டிணம்மாள் வினவ, ‘அவங்க தமிழங்க; நாங்க திராவிடங்க’ என அம்மக்கள் விடையளித்து இருக்கிறார்கள். பொருளாதார நிலையில்  ஒரே தட்டில் இருந்தாலும் இருவரும் உழைக்கும் மக்களாக இருந்தாலும் அவர்களின் ஆழ்மனதில் கனன்றுகொண்டிருக்கும் சாதியத்தின் வேரை கிருட்டிணம்மாள் நன்கு புரிந்துகொள்கிறார்.  நிலமும் கல்வியும்தான் இம்மக்களின் விடுதலைக்கான கருவிகள் என முடிவு செய்கிறார். கீழ வெண்மணியிலும் அதனைச் சுற்றியிருக்கும் பட்டிகளிலும் முன்பருவப் பள்ளிகளைத் தொடங்கி நடத்துகிறார்.  அவர்களுக்கு நிலத்தைப் பெற்றுத்தருவதற்கான வாய்ப்பினை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். 


அருள்திரு கெய்தான் - விநேபா - செகந்நாதன்
 1971ஆம் ஆண்டில் சர்வோதய இயக்க மாநாடு ஒன்று தமிழகத்தில் கூட்டப்படுகிறது. கீழவெண்மணியைச் சேர்ந்த சுப்பிரமணியன் தலைமையில் அவ்வூர் மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு அம்மாநாட்டிற்குச் செல்கிறார் கிருட்டிணம்மாள்.  மாநாட்டு மேடையில் அவர்களை ஏற்றி, கீழவெண்மணிக் கொடூரங்களை எடுத்துரைத்து, அம்மக்கள் விடுதலை பெற அவர்களுக்கு நிலம் வேண்டும்; அதற்குப் பணம் வேண்டும். நன்கொடை கொடுங்கள் என அங்கு கூடியிருந்தவர்களைக் கோரியிருக்கிறார்.  கிடைத்த நன்கொடையைக் கொண்டு அம்மக்களில் 74 குடும்பங்களுக்கு சிறிது நிலம் வாங்கிக் கொடுத்தார். அவர்கள் அதில் உற்சாகமாக உழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்பொழுதுதான் நிலக்கொடை இயக்க அணுகுமுறையைப் பற்றி குமரப்பர் கூறிய ஆய்வுமுடிவுகள் கிருட்டிணம்மாளுக்கு நினைவிற்கு வருகின்றன. அந்நிலத்தை அம்மக்களே தக்கவைத்துக்கொள்ள, அவர்கள் பயிர் செய்வதற்குத் தேவையான பணத்தையும் இடுபொடுள்களையும் திரட்டிக் கொடுத்திருக்கிறார்.  அதன் விளைவாய், நிலம் அவர்களிடமே நீடித்து நிலைபெற்று இருக்கிறது. அவர்தம் வீட்டுப் பிள்ளைகள் தொடக்கல்வியோடு இடைநின்றுவிடாமல் உயர்நிலைப் பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை பிற ஊர்களிலும் நிகழ்த்த கிருட்டிணம்மாள் திட்டமிடுகிறார்.

வெளியூர் சென்று வாழத் தொடங்கிவிட்ட நிலவுடமையாளர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்த நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, உழவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தொடங்குகிறார். அதற்காக பல்வேறு இடங்களில் இருந்து நிதி திரட்டுகிறார். ‘இந்த அணுகுமுறை நிலக்கொடை மெய்யியலுக்கு மாறானது; நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களைத் தானாமாகப் பெற்றுத்தான் அம்மக்களுக்கு வழங்க வேண்டும்; அதுதான் காந்தியம்’ என சர்வோதய இயக்கத்தில் இருந்த சில மெய்யிய வாய்பாட்டாளர்கள் கிருட்டிணம்மாளின் முயற்சியை விமர்சிக்கின்றனர். ‘அப்படியானால் நான் காந்தியவாதி இல்லை என அறிவித்துவிடுங்கள்’ எனக் கூறிவிட்டு கிருட்டிணம்மாள் தன்னுடைய முயற்சியைத் தொடர்கிறார். பொதுவுடைமையாளர்களோ, தயிர் திரண்டு வருகிற நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல வர்க்கமுரண் கூர்மைப்பட்டு வரும் நேரத்தில் இவர் அதனை மழுங்கடிக்கிறார் என விமர்சிக்கின்றனர்; அதேவேளையில் நிலவுடைமையாளர்களால் கிருட்டிணம்மாளுக்கு இன்னலும் அச்சுறுத்தலும் வரும்பொழுதெல்லாம் அவரை பொதுவுடைமையாளர்கள் காக்கிறார்கள். 

திராவிட கழகத்தாரால் தன்மான உணர்வும் பொதுவுடைமையாளர்களால் தன்னம்பிக்கையும் இயக்கவுணர்வும் போர்க்குணமும் பெற்ற உழவுத் தொழிலாளர்கள், தம் காலில் நிற்க கிருட்டிணம்மாள் வழங்கிய நிலம் பெருந்துணையாக மாறுகிறது.  இம்மூன்று இயக்கங்களும் ஒன்றை ஒன்று விமர்சித்துக்கொண்டும் தேவைப்படும் பொழுது ஒன்றிற்கு ஒன்று உதவிக்கொண்டும் அம்மக்களின் விடுதலைக்காய் தொடர்ந்து இயங்கின; இன்றும் இயங்குகின்றன.

இந்திய தேசிய அளவிலான தனது பணிகளை முடித்துக்கொண்டு செகந்நாதன் கீழத்தஞ்சைக்குத் திரும்பி வலிவலத்தில் நிலைகொள்கிறார். அங்கே இருதய கமலநாதர் என வடமொழியாக்கம் செய்யப்பட்ட மனத்துணைநாதர் கோயிலின் நிலங்கள் அனைத்தும் வலிவலம் தேசிகரின் ஆளுகைக்குள் இருக்கின்றன. பொதுவுடையாளர்கள் கடுமையாகப் போராடி அவற்றுள் ஒரு பகுதியை மீட்டு உழவுத் தொழிலாளர்களுக்குப் பிரித்து கொடுத்திருக்கிறார்கள். செகந்நாதனும் கிருட்டிணம்மாளும் மீத நிலங்களை மீட்க தம் இன்னாசெய்யாமைப் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். போராட்டம் பல நாள்கள் நீடிக்கிறது. சர்வோதயத் தலைவர் செயப்பிரகாசு நாராயணன்  வலிவலம் வந்து நிலைமை அறிகிறார். பின்னர் சென்னை திரும்பி அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். கோயில் நிலம் தேசிகரிடமிருந்து மீட்கப்பட்டு உழவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

கிருட்டிணம்மாளும் உழவுத்தொழிலாளர்களும்
 கிருட்டிணம்மாளும் செகந்நாதனும் நிலம் வாங்கிக் கொடுப்பதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தாம் திரட்டும் நிதியை முறைப்படி மேலாண்மை செய்வதற்காக ‘உழுவரின் விடுதலைக்கு நிலம்’ (Land For Tillers' Freedom - LAFTI) என்னும் நிறுவனத்தை 1981ஆம் ஆண்டில் உருவாக்குகிறார்கள். அதன் பின்னர் அவர்களது இயக்கப் பணிகளும் மேம்பாட்டுப் பணிகளும் அந்த நிறுவனத்தின் வழியே செயற்படத் தொடங்குகின்றன. 

இதற்கிடையில் தாம் வாங்கிக்கொடுத்த நிலங்களில் சில, அவை ஆண்களின் பெயரில் இருந்ததால் அவர்கள் குடிபோதையில் இருந்தபொழுது, கைமாறிவிட்டதை கிருட்டிணம்மாள் அறிகிறார். இனி நிலங்களை ஆண்களுக்கு வழங்குவதில்லை; பெண்களுக்குத்தான் வழங்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.  தாட்கோவின் வழியாக வங்கியில் கடன்பெற்று நிலம் வாங்கி பெண்களுக்கு வழங்குகிறார். அவர்கள் முறையாகக் கடனை அடைக்க அடைக்க, மேலும் மேலும் கடன் வாங்கி மேலும் மேலும் பெண்களுக்கு வழங்குகிறார். இப்பணி தொடர்ந்து வளர்ந்து தற்பொழுது ஏறத்தாழ 15000 உழவுத்தொழிலாளர்களான பெண்கள் இன்றைய திருவாரூர், நாகபட்டினம் மாவட்டத்தில் நிலவுடைமையாளர்களாக மாறி இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் முதல் தலைமையாகக் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்று வெள்ளுடை வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்; சிறுதொழில் முனைவோராக மலர்ந்திருக்கிறார்கள். பேரப் பிள்ளைகளில் சிலர் வழக்கறிஞர்களாக, பொறியாளர்களாக, மருத்துவர்களாக குமுக-பொருளாதார நிலையில் அடுத்த படிநிலையை எட்டி இருக்கிறார்கள்.

நிலமும் கல்வியும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான கருவிகளான எவ்வாறு இருக்கின்ற என்பதனை அறிய கிருட்டிணம்மாளின் நெடும் போராட்டமும் அம்மாவாசை போன்றவர்களின் வாழ்க்கையும் சில எடுத்துக்காட்டுகளே.  நாளும் ஒடுக்கப்படும் இந்த எளிய மக்களின் இந்த விடுதலைக் கருவிகளைத்தான், பலரும் பல காலம் போராட்டிப் பெற்ற அவர்தம் வாழ்க்கையைத்தான், அவர்களைக் கேட்காமலேயே பறித்து அதானிகளுக்கும் அம்பானிக்களுக்கும் ஒரே ஓர் அவசரச் சட்டத்தின் வழியாக அள்ளிக்கொடுக்க துடித்துக்கொண்டு இருக்கிறது இன்றைய காவி அரசு.    

குன்றிவிட்டதா குழந்தை இலக்கியம்?



நன்றி: http://www.azernews.az

“என் பிள்ளையிடம் பேசி அவனைக் கொஞ்சம் மாற்ற முடியுமா?” என இறுகிய முகத்தோடு அவர் வேண்டினார்.
“ஏன்? அவன் செய்கிறான்?” என வினவினார் அந்த உளவியல் ஆற்றுப்படுத்துநர்.
“எல்லாவற்றிற்கும் அடம்பிடிக்கிறான்?”
“நேற்று எதற்கு அடம்பிடித்தான்?”
“நேற்று மட்டுமில்லை, எப்பொழுதும் தொலைக்காட்சியின் தொலையியக்கியை அவனே வைத்துக்கொள்கிறான். ஒன்று மாற்றி ஒன்று என குழந்தைகளுக்கான படங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறான். மற்றவர்களை அதனைத் தொடக்கூட அனுமதிப்பதில்லை”
“அவன் குழந்தைகளுக்கான படங்களைப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“அதில் வரும் ஏதேனும் ஒரு கதைமாந்தராக தன்னை நினைத்துக்கொண்டு, அதேபோல பேசுகிறான்; சண்டை போடுகிறான்; மற்றவர்களை அடிக்கிறான்.”
“அதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“இப்படியே போனால், அவன் தொலைக்காட்சிக்கு அடிமையாகி படிக்காமல் போய்விடுவானோ என அச்சமாக இருக்கிறது; முரடனாக வளர்கிறானோ என கவலையாக இருக்கிறது.”

இந்த அச்சமும் கவலையும் இன்றைக்கு பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றன;  குறிப்பாக, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அக்குழந்தை மீது தாம் இப்பொழுது இடும் முதலீடு பின்னாளில் பெரும்பயனை தமக்குத் தரவேண்டும் எனக் கருதும் நடுத்தர பொருளாதாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு மிக அதிகமாக ஏற்பட்டு இருக்கின்றன.  அவற்றை அதிகப்படுத்தும் வகையில், அறிவியற்றொழில்நுட்பக் கொடையால் தகவற்றொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும்மாற்றத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கான அசைவுரு படத் தொடர்கள் (Animation) 24 மணிநேரமும் வெவ்வேறு தொலைக்காட்சி வழங்கல்களில் காணொலிபரப்பப்படுகின்றன. கூட்டுடலுழைப்பின் தேவையைப் பெருமளவு கோரும் வேளாண்மைத் தொழிலில் இருந்து பெரும்பாலான நடுத்தர பொருளாதாரக் குடும்பங்கள் வணிகத்திற்கும் வெள்ளுடை வேலைகளுக்கும் நகர்ந்துவிட்டதால், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. இதனால் குழந்தைகளுக்குக் கதைசொல்லும் முதியவர்களின் இருப்பு வீடுகளில் குன்றிவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு, பேருருக்கொண்டு எழுந்து பொருளாதாரச் சுமை ஆகியவற்றால் ஒற்றைக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதன் விளைவாக கதைபேசவும் கூடிவிளையாடவும் தோழர்கள் அற்ற குழந்தைகள் பலர் தொலைக்காட்சியின் அசைவுரு படத் தொடர்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். 

இச்சூழலைப் பயன்படுத்தி ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என்னும் கருத்தாக்கத்தை குழந்தைகளின் மனதில் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அறியாத வகையில் விதைப்பதற்கு ஏற்ற அசைவுரு படத்தொடர்கள் உருவாக்கப்படுகின்றன; கதைமாந்தர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள்.  தமக்கான சிறந்த முன்மாதிரிகளை தம் இல்லங்களில் இழந்துவிட்ட குழந்தைகள் அப்படத் தொடர்களில் வரும் கதைமாந்தர்களையே தம் முன்மாதிரிகளாகக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  அதன்விளைவாக அத்தொலைக்காட்சிக் கதைமாந்தர்களின் உருவங்களைக் கொண்ட வண்ணம்தீட்டும் புத்தகங்கள் சந்தையில் பெருகிக் கிடக்கின்றன. அவற்றின் நுகர்வோராக மாறிவிட்ட குழந்தைகள் முரடர்களாக மட்டுமன்று, கருத்தியல் அடிமைகளாகவும் அவர்களை அறியாமலேயே உருவாகி வருகிறார்கள்.

இச்சூழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழ் குழந்தை இலக்கியச் சூழல்.  1901ஆம் ஆண்டில் கவிமணி தேசிகவிநாயகனாரால் தொடங்கி வைக்கப்பட்ட குழந்தைப் பாடல்கள் என்னும் இலக்கியத்துறையானது இயற்கை, உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பாடும் வாய்பாட்டிற்குள் முடங்கிவிட்டது. நூல்களும் செய்தித்தாள்களும் (பொது நூலகங்களுக்கு) வழங்கல் சட்டம், 1954  (The Delivery of Books and Newspapers (Public Libraries) Act, 1954) என்னும் சட்டத்தின் கீழ் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கப்படும் நூல்களில், குழந்தை இலக்கிய நூல்களைப் பற்றிய அடைவை ‘தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை’ என ஆண்டுதோறும் வெளியிடும் அளவிற்கு இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான நூல்கள், 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் பெருக்கெடுக்கவில்லை. வெளிவரும் நூல்களிற் பல குழந்தைகளின் அகவுலகத்தை அறிந்து, அதற்கேற்ப எழுதப்பட்டவையாக இல்லை. அதன்விளைவாக அந்நூல்கள் குழந்தைகளை ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுபவைகளாக இல்லை; அவை அறிவுரைகளும் தகவல்களும் நிரம்பியவைகளாகவே இருக்கின்றன. 

தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகைகள் 1964 / 1966
குழந்தைகளுக்கான இதழ்களின் எண்ணிக்கையோ கைவிரல்களின் எண்ணிக்கை அளவிற்கு குறைந்துவிட்டது.  1950 முதல் 1980 வரை ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என ஒன்றை உருவாக்கவும் அதன் சார்பில் ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என படைப்பாளர் அடைவு வெளியிடும் அளவிற்கு பெருகியிருந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருமளவு மெலிந்துவிட்டது.  இருக்கும் படைப்பாளிகளில் பலரும் பழைய பாடல்களையும் நூல்களையும் பார்த்துப் ‘போலச் செய்பவர்’களாக இருக்கிறார்களே ஒழிய புதியன புனைபவர்களாக, குழந்தைகளின் அகவுலகத்தை அறிந்து அவருள் அரும்பிக்கொண்டிருக்கும் ஆற்றல் மலர்களுக்கு எழிலூட்டும் படைப்புகளை இயற்றுபவர்களாக இல்லை.

தமிழ்நாட்டரசின் கல்வித்துறை நடத்திய போட்டியில் முதற்பரிசை வென்ற நூல்

“குழந்தைகள் நாட்டின் வளரும் செல்வங்கள். அவர்கள் உடலால் மட்டும் வளர்பவர்களா? இல்லை; அறிவு ஆற்றலிலும் வளர்பவர்கள். ஆகவே வெறும் பாட நூல்களோடு நில்லாது, பல நூல்களையும் படிக்க வேண்டும். அதற்காகக் குழந்தை இலக்கியத்தைப் பெருக்க வேண்டும்” என்னும் நோக்கத்தோடு குழந்தை இலக்கியப் போட்டி நடத்தி அதில் முதற்பரிசு வெற்றி பெற்ற “பூச்சி வாழ்க்கை” என்னும் குழந்தைகளுக்கான அறிவியல் நூலை படங்களோடு அழகுற அச்சிட்டு 1950களில் வெளியிட்ட தமிழ்நாட்டரசின் கல்வித் துறையோ, தற்பொழுது மதிப்பெண் வேட்டைக்காரர்களாக மாணவர்களை மாற்றிக்கொண்டு இருக்கிறது.  

“குழந்தைகள் இலக்கியத்தை மேம்படுத்தல்” என்பதை தன்னுடைய ஐம்பெரும் நோக்கங்களில் ஒன்றாகக்கொண்ட, இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய தேசிய நூல் அறக்கட்டளையைப் (National Book Trust, India) போன்ற ஓரமைப்பு இதுவரை தமிழ்நாட்டரசால் உருவாக்கப்படவில்லை.  தி. சு. அவினாசிலிங்கனாரால் உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம் நெ.து.சுந்தரவடிவேலு பொதுக்கல்வித் துறை நெறியாளராக இருந்தபொழுது வெளியிட்ட ஓரிரு நூல்களைத் தவிர  குழந்தை இலக்கிய நூல்கள் எதனையும் தமிழ்நாட்டரசு வெளியிட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மழலைத் தளிர்கள் என்னும் நூல்
 இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மைசூர் நகரில் இயங்கும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவம் வழங்கிய நிதியுதவியால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் “மழலையர் பாடல் இயற்றும் செயலரங்கு” ஒன்றினை 1994 செப்டம்பர் திங்களில் ஒருங்கிணைத்து, அதில் இயற்றப்பட்ட 408 பாடல்களை 53 பிழைத்திருத்தங்களோடு “மழலைத் தளிர்கள்” என்னும் நூலை வெளியிட்டது. இந்த நூலைத் தவிர வேறு எந்த குழந்தை இலக்கிய நூலையும் தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்தப் பல்கலைக்கழகமும் வெளியிட்டதாகத் தெரிவியவில்லை.

நேரு குழந்தைகள் புத்தகாலய வரிசை நூல்களில் சில
 இந்திய தேசிய நூல் அறக்கட்டளை வெளியிடும் “நேரு குழந்தைகள் புத்தகாலயம்” வரிசை நூல்களிலோ பெரும்பாலானவை மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.   இராசம் கிருட்டிணன், வல்லிக்கண்ணன், தங்கமணி, அழ. வள்ளியப்பா, கி. ராஜநாராயணன்  ஆகியோரைப் போன்ற சிலர் எழுதிய மிகச் சில நூல்களே தமிழில் நேரடியாக எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. இதனால் அதைக் கதைமாந்தர்களின் பெயரும் நிகழிடமும் பண்பாடும் தமிழகக் குழந்தைகளின் மனதிற்கு பெருமளவு நெருக்கமாக இல்லை.

குழந்தை இலக்கியத்திற்கு முதலிடம் வழங்கி நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் அவை பெரிதும் முயன்று வெளியிடும் நூல்களை, தம்மளவில் குழந்தை இலக்கியப் படைப்பாளராக இருந்த வே. தில்லைநாயகம் பொதுநூலக இயக்குநராக இருந்த காலத்தில் வாங்கப்பட்ட அளவிற்கு, தமிழ்நாட்டரசு பொதுநூலகத் துறை பெருமளவிற்கு வாங்குவதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் எதிலும் பள்ளி நூலகர் என்னும் பணியிடமே இல்லை. அதனால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நூலகங்கள் நூல்களை அடைந்துவைக்கும் பண்டகசாலைகளாகவே இருக்கின்றன. தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் நூலகங்களே இல்லை. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களைத் தவிர பிற ஊர்களில் உள்ள பொதுநூலகங்களில் குழந்தைகள் நூலகப் பிரிவு இல்லை. இதனால் மாணவர்களிடையே குழந்தை இலக்கிய நூல்களைப் படிக்கும் பழக்கம் குன்றியிருக்கிறது; அப்பழக்கத்தைத் தூண்டிப் பெருக்கும் விருப்பமும் ஆர்வமும் அவர்தம் ஆசிரியர்களிடம் துளிர்விடவே இல்லை. 

இந்நிலையால்தான், ஓடி ஆடித் திரியவும் உவப்போடு குழந்தை இலக்கிய நூல்களைப் படித்து மகிழவும் வேண்டிய குழந்தைகள் தொலைக்காட்சியில் காணொலிபரப்பப்படும் அசைவுருபடத் தொடருக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்; தொலையியக்கியைக் கைப்பற்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அடம்பிடிப்பவர்களாக மாறுகிறார்கள்.  இந்நிலை மென்மேலும் தொடருமானால், பொறுப்புடைய இளைஞர்களாக (Responsible Youth), குழந்தைகள் உருவாகத் தேவையானவை என உலக நலவாழ்வு அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தன்னையறிதல், ஒத்துணர்தல், தகவற்றொடர்பு, பிறருடன் பழகும் திறன், படைப்பாக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்த்தல், உணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல், மனவழுத்தத்திற்கு ஈடுகொடுத்தல் என்னும் வாழ்க்கைத் திறன்கள் எவையும் இல்லாதவர்களாக அக்குழந்தைகள் எதிர்காலத்தில் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காக தமிழ்ப் படைப்பாளிகளால் தமிழகச் சூழலில் குழந்தை இலக்கியம் பெருக வேண்டிய தேவை இப்பொழுது அதிகரித்து இருக்கிறது.  அத்தகு நூல்களை ஆக்குவற்கான ஆற்றலுடைய படைப்பாளர்கள் சிலரும் நம்மிடையே வாழ்கிறார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA), கல்வி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான தேசிய அவை (NCERT), தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கல்வி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான மாநில அவை (SCERT), கல்வியியல் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய தேசிய நூல் அறக்கட்டளை (NBTI), இந்திய மொழிகள்  நடுவண் நிறுவம் (CIIL) ஆகியனவற்றைப்  போன்ற நிறுவனங்கள் குழந்தை இலக்கிய படைப்பாளர் பயிலரங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக இளம் படைப்பாளர்களை குழந்தை இலக்கியப் பணியில் ஈடுபடுத்தவும் பல்வேறு துறைகளில் புத்தம்புது குழந்தை இலக்கியங்களை உருவாக்கவும் இயலும்.  தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வி அமைச்சகம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தனது கணிப்பீட்டில் (Budget) குழந்தை இலக்கிய மேம்பாட்டிற்கென கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இவையும் இவைபோன்ற பலவும் செய்தால், குழந்தைகள் தங்களது சிறுசேமிப்புப் பணத்தைக் கொண்டு வாங்கக்கூடிய அளவிற்கு குறைந்த விலையில், சிறந்த குழந்தை இலக்கியங்கள் நிறைந்த அளவிற்கு தமிழிற் பூத்து, தமிழையும் தமிழரையும் மேம்படுத்தும்!


அம்ருதா இதழின் 2015 சூன் மடலில் வெளிவந்த கட்டுரை

நந்தவனத்திலோர் ஆண்டி



நன்றி: ஓவியர் ஜீவா
“இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . .  அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை மறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர் ஜெயகாந்தன்.  எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரது படைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும் சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டிய சபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்ல மெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப் பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அற்ற ‘அநாகரிகம்’ என்பதனால் அவரது வாழ்க்கையையும் படைப்புகளையும் சிந்தனைகளையும் அவரது மரணத்தின் பொருட்டு ஒரு பறவைப் பார்வையேனும் பார்த்து, அவற்றிலிருந்து இந்தக் குமுகம் எதனையேனும் கற்றுக்கொண்டு தன்னை உன்னதப்படுத்திக் கொள்ள இயலுமா என ஆராய்வதே அவருக்குச் செலுத்தும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என நம்பியதன் விளைவே இக்கட்டுரை. 

60'களின் தொடக்கத்தில் ஜெயகாந்தன்
கெடில நதிக்கரையில் அமைந்துள்ள கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1934-ஏப்ரல் 24ஆம் நாள் த. முருகேசனாகப் பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்று, விழுப்புரத்தில் இருந்த பொதுவுடைமைக் குமியத்தில் (கம்யூன்) வாழ்ந்த தன் மாமாவின் அரவணைப்பில் சில காலம் இருந்து, 1946 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த குமியத்தில் வளர்ந்த ஜெயகாந்தனின் முதற் சிறுகதை, கடலூர் காந்தன் என்னும் புனைப்பெயரில் 1950ஆம் ஆண்டில் செளபாக்கியம் இதழில் வெளிவந்தது. அவர் 1952ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து 1964ஆம் ஆண்டில் அவருடைய கருத்துகளையும் அவருடைய போக்குகளையும் அவருடைய சிந்தனைகளையும் பார்த்த அவர்தம் பொதுவுடைமை நண்பர்கள், அவர் வெளியே இருந்தால், நண்பராகவே இருந்து நல்லுதவி செய்ய முடியும் என்று அவருக்குச் சொன்ன ஆலோசனையின் பேரில் அவர் அந்தக் கட்சியைவிட்டு வெளியேறினார். அந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் (1950-1964) எந்தவோர் இலக்கியத்தின், இலக்கியவாணரின் தாக்கமும் இல்லாமல் அப்பொழுது அன்றாடம் காச்சியாக வாழ்ந்த ஜெயகாந்தன் தன்னைச் சுற்றியும் தன்னோடும் வாழ்ந்த அன்றாடம் காச்சிகளின் வாழ்க்கையை, இருக்க கை அகல இடமும் உடுக்க கிழியாத உடையும் உண்ண போதிய உணவும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவற்றின் சிடுக்குகளை எந்த வண்ணப்பூச்சுமின்றி தனது படைப்புகளாக வார்த்தெடுத்தார்.

 
நன்றி: ஒளிப்படக்கலைஞர் கவாஸ்கர்
அரசகுலத்தவரும் நிலவுடைமையாளரும் மேட்டுக்குடியினரும் செல்வந்தர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தமிழிலக்கியப் படைப்புவெளிக்குள் புதுமைப்பித்தனின் எழுத்துகள் வழியாக உள்நுழைந்து, விந்தனின் எழுத்துகளில் வளர்ந்த விளிம்புநிலை மாந்தர்களான நடைபாதையில் வாழ்வோர், பாலியல் தொழிலாளிகள், இழுவண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், உடலுழைப்புத் தொழிலாளிகள், உளநோயாளிகள், தொழுநோயாளிகள் ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் குறும்புதினங்களிலும் புதினங்களிலும் குருதியும் சதையுமாக வாழ்ந்தார்கள்.  அவர்களது வாழ்க்கையின் இன்பமும் துன்பமும், நெகிழ்வும் நெருக்கடியும், உயர்வும் தாழ்வும், மேன்மையும் கீழ்மையும் அப்படைப்புகளின் பாடுபொருளாக அமைந்தன. அப்படைப்புகள் தம்மைப் படிப்பவர்களின் மனதைப் பிசைந்து, சிந்தையைப் பிறாண்டி, குற்றவுணர்வைத் தூண்டி, தூக்கத்தைக் கெடுத்தன; ‘நம்முடைய ஆசைகளையும் பேராசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக  நாம் நாளும் சந்திக்கிற இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை நம்மை அறியாமலேயே நாம் சுரண்டுகிறமா?’ என அவர்களை அகத்தாய்வு செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தின.   

 
நன்றி: ஓவியர் ஜமால்
1965ஆம் ஆண்டிற்கு சற்று முன்னோ பின்னோ, ‘பிடிசோறு’ என்னும் ஜெயகாந்தனின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைப் படித்த அந்நாளைய ஆனந்த விகடனின் துணையாசிரியரான இதயம் பேசுகிறது மணியன் ஆனந்த விகடனில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஜெயகாந்தனை அழைத்தார்.    அவ்வழைப்பைத் தொடர்ந்து அவர் எழுதிய பல சிறுகதைகள் அவ்விதழில் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன.  மெல்ல மெல்ல, கொள்கை சார்ந்த சிற்றிதழ்களில் இருந்து வணிகம் சார்ந்த இதழ்களை நோக்கி அவரது படைப்புகள் நகர்ந்தன. அப்படைப்புகளில் விளிம்புநிலை மாந்தர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; அல்லது மிகக் குறைவாகவே இடம் கிடைத்தன. மாறாக, அந்த இதழ்களின் வாடிக்கையாளர்களாக இருந்த நடுத்தட்டு மக்கள், ஜெயகாந்தனது படைப்புலக மாந்தர்களாக மாறினர். அன்றாடம் காய்ச்சியாக இருந்து அன்றாடம் காய்ச்சிகளைப் பற்றி எழுதிய ஜெயகாந்தன், நடுத்தட்டு மாந்தராக மாறி நடுத்தட்டு மாந்தர்களைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  குமுகாயப் பொறுப்புடைய ஓர் எழுத்தாளர் தான் வாழும் குமுகாயத்தின் ஒரு கூறான நடுத்தட்டு மாந்தர்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் அதன் காரணிகளையும் அச்சிக்கல்களை அவிழ்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து தானறிந்த முடிவுகளை தனது படைப்புகளின் வழியாக வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், ஜெயகாந்தன் இக்காலகட்டப் படைப்புகளில் அந்தப் பணியை ஆற்றவில்லை; மாறாக நடுத்தட்டு மக்களின் தனிமனித வாழ்க்கைநெறிப் பிறழ்வுகளை, உள்ளப் பிறழ்வுகளை, பாலுறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தபொழுது, “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின் மீது எனக்கிருக்கும் பிடிப்பு – பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்’ என 1966ஆம் ஆண்டில் சுயதரிசனம் நூலின் முன்னுரையில் வாதிட்டார்.  ஆக 1965ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் அறிந்திருந்த, பிடிப்பும் பரிவும் கொண்டிருந்த வாழ்க்கைகள் அதற்குப் பின்னர் அவர் அறியாத பிடிப்பும் பரிவும் கொள்ளாத, கொள்ள முடியாத வாழ்க்கைகளாக மாறிவிட்டன.

 
நன்றி: டெகல்கா இணைய இதழ்
அவரது இந்த நிலைமாற்றத்தால் அவருக்குள் ஏற்பட்ட குணமாற்றம் அவரது படைப்புகளின் வழியாக பொங்கித் வழியத் தொடங்கின. முன்னர் தான் நாளும் சந்தித்த மாந்தர்களை தனது படைப்புகளில் உலவவிட்ட ஜெயகாந்தன், இக்கால கட்டத்திலோ, தால்த்தாய் எழுதிய அன்னகரீனாவின் தாக்கத்தில் ‘பாரிஸூக்கு போ’ புதினத்தின் மாந்தர்களான சாரங்கன் – லலிதா – மகாலிங்கம் ஆகியோருக்கு இடையிலான உறவையும் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனின் கருத்துகளைகொண்டு சாரங்கன் என்னும் கதைமந்தனையும் துர்கனேவ் எழுதிய புதினம் ஒன்றின் கதைத்தலைவி எழுதும் கடிதத்தின் தாக்கத்தில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைத்தலைவி எழுதும் கடிதத்தையும் டென்னஸி வில்லியம்ஸின் தாக்கத்தில் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்னும் குறும்புதினத்தின் கட்டமைப்பையும் படைப்பவராக மாறிப்போனார்.  ஆனால், ‘அவற்றின் தாக்கத்தால்தான் இவற்றைப் படைத்தேன்’ என அவரே நேர்மையாக எடுத்துரைத்தார்; வேறு பல எழுத்தாளர்களைப் போல அவற்றை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.  

 
இவ்வாறு, 1960ஆம் ஆண்டுகளிலிருந்து மெல்ல மெல்ல அவரது குரல் மாறத் தொடங்கியது. பதின்மூன்று வயதிலேயே பொதுவுடைமை குமுமியத்தில் தன் மாமாவோடு சேர்ந்து வாழக் கிடைத்த வாய்ப்பால் பொதுவுடைமையாளர்கள் பலரோடு பழகும் வாய்ப்பையும் அவர்கள் தமக்குள் நடத்திய அறிவாடல்களையும் கேட்கும் வாய்ப்பை ஜெயகாந்தன் பெற்றார்.  இந்திய விடுதலைவுணர்வு பெருநெருப்பாய் எங்கெங்கும் பரவியிருந்த வேளையில், ‘இந்திய தேசத்திலிருந்து தென்னிந்தியாவைப் பிரித்து, பிரிட்டிசாரின் நேரடிப் பார்வையில் திராவிட நாடாக அது இயங்க வேண்டும்; இல்லையென்றால் பார்ப்பனியம் ஆட்சியே ஏற்படும்’ என ஈ.வெ.இராமசாமி பெரியார் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், ‘இந்திய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரமும் சைவத் தமிழ்க் காப்பியமான பெரியபுராணமும் மூடநம்பிகையை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கின்றன. எனவே அவற்றை எரிக்க வேண்டும்’ எனக் கூறி இயக்கம் நடத்திக்கொண்டு இருந்தார்.  அக்கருத்துகளை பரப்புரை செய்யும் படைப்புகள் பலவற்றை சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக எழுத்தாளர்களும் புலவர்களும் உருவாக்கினர்.  அப்படைப்புகளை தி. க. சிவசங்கரன் போன்ற பொதுவுடைமை இயக்கத் திறனாய்வாளர்கள் நச்சிலக்கியம் எனக்கூறி விமர்சித்தனர்.  ப. ஜீவானந்தம் போன்றவர்கள் கம்பராமயாணத்தில் பொதுவுடைமைக் கூறுகளைத் தேடியெடுத்து மேடைகளில் முழங்கத் தொடங்கினர். எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கம்பனை மில்டனோடு ஒப்பிட்டு எழுதினர். ப. ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் சுப்பிரமணிய பாரதியாரை உலக கவி எனவும் அவர் குறிப்பிடும் ஆரிய நாடே தாம் காண விரும்பும் பொதுவுடைமை உலகம் எனவும் பேசியும் எழுதியும் வந்தார்கள். தனது இளமைக் காலத்தில் இக்கருத்துச் சூழலில் வளர்ந்த, சிந்திக்கப் பழகிய ஜெயகாந்தனின் ஆழ்மனதில் திராவிட இயக்கம் ஒரு நச்சியக்கம் எனவும் திராவிட இயக்கப் படைப்புகள் நச்சுப்படைப்புகள் எனவும் திராவிட இயக்கக் கொள்கைகள் நச்சுக்கொள்கைகள் எனவும் பதிந்துவிட்டன.  எனவே,  அக்கால கட்டத்தில் வீறோடு இருந்த திராவிடக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கை அவருக்கு வறட்டு கொள்கையாகவும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை அவருக்கு இனவெறுப்புக் கொள்கையாகவும் விரைந்து வளர்ந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழடையாள மீட்டுருவாக்கம் அவருக்கு பழமை போற்றலாகவும் தென்பட்டன.  அடுக்குத் தொடர்களாலான ஒப்பனை மிகுந்த அவர்களது மேடைப் பேச்சுகள் அவருக்கு எரிச்சல் மூட்டின. எனவே, அந்த இயக்கங்களின் எதிர்ப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட ஜெயகாந்தன், அவற்றின் கொள்கைகளை திறனாய்ந்து தனது மாற்றுக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த(?) முயலவில்லை.  மாறாக,  அவர்களது விமர்சனத்திற்கு உள்ளான பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக மாறிப்போனார்.  வேதாந்த பார்ப்பனியத்தின் புதிய தூதராக தன்னைத் தானே நியமித்துக்கொண்டார்; வறட்டு வேதாந்தத்தை தனது படைப்புகளில் பரப்புரை செய்யத் தொடங்கினார்.   

இதன் விளைவாக, பொருளாதார (வர்க்க) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் பொதுவுடைமை பேராளிகளின் காலடியில் வளர்ந்த ஜெயகாந்தன்  சாதிய (வர்ண) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் திராவிட இயக்கப் போராளிகளை நச்சுகள் எனத் திட்டி, அவர்களது சிந்தனையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’  என மனம்பேதலித்தவரைப் போல பேசுகிற நிலைக்கு ஆளானார்.  

நன்றி அம்ருதா
திராவிட இயக்கத்தின் களப்பணிகளை அறிந்து, அவற்றின் விளைவுகளை ஆய்ந்து விமர்சனம் செய்வதற்கு மாறாக, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை ‘படித்த மேல்வர்க்கத்து முதலியார்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் நடந்த  சண்டை’ எனப் புறந் தள்ளினார்.  தனக்கென ஒரு சிறப்புப் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு தான் விரும்பினால் ‘ஜெயகாந்தன் பிள்ளை’ என வைத்துக்கொள்வேன் எனக் கூறினார்.  கல்பனா இதழுக்காக மு. கருணாநிதியைப் பேட்டி எடுத்தபொழுது, கருணாநிதி தம் தந்தை பெயரை முத்துவேலர் என சாதிய அடையாளமற்றுக் கூறியபொழுது, இடைமறித்து, ‘முத்துவேல் பிள்ளை’ எனக் கூறுங்கள் என்றார். பரந்துபட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடிகொண்டிருக்கிறது என்பதனை எடுத்துரைக்கும் நோக்கத்தோடு தன்னால் படைக்கப்பட்டவன்தான் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ புதினத்தின் கதைத்தலைவனான ஹென்றி எனவும்  போரில் வீடிழிந்து பிழைப்பிழந்து பர்மாவிலிருந்து ஓடி வந்த சபாபதி பிள்ளையாலும் அவர்தம் நண்பருக்கு மனைவியாலும் வழியில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைக்கு, அவனால் தன் தகப்பன் என நினைக்கப்பட்ட சபாபதிப் பிள்ளை அவன் தகப்பன் இல்லை; தாய் என நினைக்கப்பட்டவள் அவன் தாய் அல்லள்; அவர்கள் இருவரும் கணவன், மனைவியும் அல்லர்; அவன் பெற்றோர் எந்த நாட்டவர் எந்த இனத்தவர் என்பது யாருக்கும் தெரியாது; அன்பும் அபிமானமும் ஒன்றுபட்ட சூழ்நிலையில் வாழ்ந்த, அந்நியத்தன்மை அற்ற ஞாலமாந்தன் (யுனிவர்சல் மேன்) எனவும் கூறிவிட்டு, அவனை ‘ஹென்றி பிள்ளை’  என மாற்றினார்.  ஆக ஜெயகாந்தன் விரும்பிய உலகத்தில் வாழும் வாய்ப்புபெறும் எவரும், அவர் ஞாலமாந்தரே ஆனாலும், சாதியற்று இருக்க முடியாது என்றார். அவ்வாறு அவர் கூறியதற்கு, அவரிடமிருந்த திராவிட இயக்க ஒவ்வாமையைத் தாண்டி, மாந்தர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிற, வர்ணங்களுக்கு அப்பால் வாழ்பவர்களை மாந்தர்களாகக் கூடக் கருதாத ‘இந்து இசம்’ அவரது பார்வையில் “ஒரு மதமன்று; ஒரு பண்பாடு; ஒரு வாழ்க்கை முறை” என இருந்ததும் காரணமாக இருக்கலாம்.  எனவேதான், அரசியல் செல்வாக்கோடு இருந்த இந்து மடத் தலைவர் ஒருவரை, ஒரு கொலை வழக்கில் உசாவலுக்காக காவல் துறையினர் கைது செய்தபொழுது வெகுநாளாக திறக்காதிருந்த தனது பேனாவைத் திறந்து குறும்புதினம் (?) ஒன்றை எழுதி, ‘ஒரு நம்பிக்கை – ஒரு ஆழமான நம்பிக்கை – வீழ்த்தப்படும்போது தன்னால் சந்தோஷப்பட முடியாது’ என்றார்.  இங்ஙனம் சாதி, மத வளையத்திற்குள் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் சென்று நின்றதற்கு அவருடைய திராவிட இயக்க ஒவ்வாமை நோய் மட்டும்தான் காரணமா அல்லது அவரின் ஆழ்மனத்திற்குள் கெல்லியெடுக்கப்படாமல் புதைந்துகிடந்த இடைநிலைச் சாதியச் சிந்தனையின் எச்சமும் காரணமா என்பதை உளப்பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும்.  ஒருவேளை அவ்வாய்வின் முடிவு, இன்றைய நிலையில் மேலெழுந்து வருகிற சாதி சார்ந்த கூக்குரல்களில் இன்றைய எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் வகிபாகத்தை அளவிட்டு அறிய உதவக்கூடும்.

நிறைவாக, ஜெயகாந்தனின் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது படைப்புகளின் வழியே அவரது சிந்தனைப்போக்கை நோக்குகையில்,  இந்திய விடுதலைக்கும் பொருளாதாரச் சமத்துவதற்கும் சலியாது போரிட்ட அந்நாளைய பொதுவுடைமைப் போராளிகளின் கண்பார்வையில் வளர்ந்து தான் பெற்ற ஞானத்தோண்டியை, திராவிட இயக்க ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட்டு தன் வாழ்நாள் முழுக்க கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டியாகவே அவர் தோற்றம் தருகிறார்.

 (அம்ருதா இதழில் - மே 2015 - வெளிவந்த கட்டுரை)

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...