ஒபாமாவின் பயணத்தால் கியூபாவில் மாற்றம் ஏற்படுமா?

குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, ஏறத்தாழ கடந்த 90 ஆண்டுகளில், பதவியிலிருக்கும்பொழுதே கியூபாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியரசுத் தலைவர்ஆவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20 மார்ச் 2016) மூன்றுநாள் பயணமாக கியூபா தீவிற்கு அவர் கிளம்பியிருந்தாலும், 2014 திசம்பரிலேயே உறவாடலுக்கான முன்முயற்சிகள் தொடங்கிவிட்டன.

கியூபாவுடன் வங்கி, நிதி, பயணம், வணிகம், பொருளாதாரம் ஆகிய தொடர்புகளை மேற்கொள்ளத் தன்னால் விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தும் ஒழுங்காற்று விதிகளை, ஒபாமாவின் கியூபா பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது.

கியூபாவுடன் இதமான உறவுகளைத் தொடர வேண்டும் என்னும் ஒபாமாவின் முடிவு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தபோதிலும், உண்மையில் அமெரிக்க அரசு கியூபாவுடன் கணிசமான அளவிற்கு வணிக நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது. இதனை மிகப் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, 2000ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட, ’வணிகத் தடைகள் சீரமைப்பு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சட்டம்’, கியூபாவிற்கு உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் விற்க அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை, 5.3.பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க அரசின் புள்ளிவிவரக் கணக்கெடுப்புச் செயலகம் தெரிவிக்கிறது.

அந்த அடித்தளத்தின் மீது அண்மைக்கால முயற்சிகள், குறிப்பாகப் போக்குவரத்தில், கட்டடங்களை எழுப்புகின்றன. கடந்த ஆண்டில், ’மக்களுடன் மக்கள்’ என்னும் பெயரில் வழக்கமான சுற்றுலாவைவிட மேம்பட்ட கல்வியுலாவில் கலந்துகொண்டு கியூபாவிற்குச் சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு மடங்காக உயர்ந்து, அரை நூற்றாண்டிற்குப் பின்னர் கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமானங்களைப் பட்டியலிட்டு விரைவில் இயக்க விமான நிறுவனங்கள் ஆயத்தமாகும் அளவிற்குத் தொடந்து கொண்டிருக்கிறது.

எனவே, குடியரசுத் தலைவரின் பயண வெளிச்சத்தில், புற்றீசலாய் வரும் அமெரிக்க விருந்தினர்களுக்கு அப்பால், கியூபாவிற்கு எதிர்காலம் எதனைக் கொண்டு வரும் என்றும் வினவுவது இயற்கையே. – இந்தத் திடீர் வருகைகளை ஏற்க கியூபா ஆயத்தமாய் இருக்கிறதா? அந்நிய முதலீடுகளை அமெரிக்க நாட்டின் ஒழுங்காற்று மாற்றம் அனுமதித்தாலும் அமெரிக்க வணிகங்கள் எந்த அளவிற்கு மிகக் கடுமையான தூண்டுதல் தேவைப்படும் பொருளாதாரத்தில் முதலீடு ஆர்வம் காட்ட உள்ளன?

மேலும், தற்போதைய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஒபாமாவின் இடத்திற்கு, அடுத்து வருபவர் ஒபாமாவின் பாதையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இலத்தீன் – அமெரிக்க வணிகங்களையும் நிதியையும் கியூப வேளாண்மையையும் பகுப்பாய்பவர்கள் என்னும் வகையில் விரைந்து உருவாகும் இச்சிக்கல்களை மிக உன்னிப்பாக நாங்கள் கவனிக்கிறோம். இது வரையுள்ள நிலைமையைப் பற்றிய எங்களது கருத்துகள் பின்வருமாறு:

ஒபாமாவும் அவர் குடும்பத்தினரும் முதல்நாள் பழைய அவானாவில் உலா வந்தனர்

நடைபெறும் சீர்திருத்தங்கள்

கியூபப் பொருளாதாரத்தில் சந்தைச் சக்திகளை முக்கியப் பங்காற்ற அனுமதிக்கும் நோக்கில், கியூபா அரசாங்கம் தொடர் சீர்திருத்தங்களை அமலாக்கிய வேளையில் கியூபாவிற்குப் பயணிக்கவும் வணிகம் செய்ய தான் விதித்திருந்த தடைகள் சிலவற்றை அமெரிக்க அரசாங்கம் தளர்த்தியது.

2008 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சீர்திருத்தங்கள் பயன்படுத்தப்படாத நிலங்களில் வேளாண்மை செய்ய தனியாட்களையும் கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதித்தன; பரந்த அளவில் சுய தொழில்களை மேற்கொள்ள இடமளித்தன; தனியார் உணவகங்களையும் தங்கு மனைகளையும் தனியார்கள் இயக்குவதற்கு ஏதுவாகத் தடைகளைத் தளர்த்தின; கியூப குடிமக்கள் வீடுகளை வாங்கவும் விற்கவும் அனுமதித்தன. மேலும், சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் சீரற்ற வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. எனினும், சில மாதங்களாக கியூப அரசாங்கம், மீண்டும் ஒருமுறை, உணவு வழங்குதலில் விரிவாக்கப்பட்ட பங்கினை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் கொள்கை மாற்றங்கள், கியூபாவின் புரட்சிகர மெய்யியலை மாற்றி விடாத அளவிற்கு இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதில் கியூபா அரசாங்கம் கவனமாக இருந்து கொண்டிருகிறது. கடந்த 15 மாதங்களில் அயல் நாட்டு அரசியல் தொடர்புகளும் பிற அணுகுமுறைகளும் மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவின் ‘ரொக்கக் கொள்முதல்’ கொள்கையால், அமெரிக்காவிலிருந்து கியூபா மேற்கொண்ட உணவுப்பொருள் கொள்முதல் பாதிப்படைந்து – 2008 ஆம் ஆண்டு முதல் 22 விழுக்காட்டிற்கும் கீழே – அடிமட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையில், பிற நாடுகள் விரிவாக்கப்பட்ட வழிகளில் கடனையும் வணிகத்திற்காக நீடிக்கப்பட்ட விதிமுறைகளையும் வழங்கி வருகின்றன. வேளாண் நுகர்பொருள்கள், பிற பொருள்கள் மீது ரொக்க முன் பணமோ, மூன்றாம் நாட்டின் நிதியோ வழங்கப்பட்ட நிலையைப் பராமரிக்குமாறு அமெரிக்காவின் அந்நியச் சொத்துகள் கட்டுப்பாட்டுக் கருவூலத்திற்குக் கட்டளையாயிருக்கிறது.

பயணவிதிகள் தளர்த்தப்பட்டதால் அதிகளவிலான அமெரிக்கர்களின்ச சுற்றுலா வருகை அதிகரித்திருக்கிறது

கியூபாவிற்கு அமெரிக்க மந்தைகள்

இதற்கிடையில் கியூபாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாவினரும் புற்றீசலாய் வரும் அமெரிக்கர்களும் கியூபாவின் சுற்றுலா உள் கட்டமைப்பை அதன் வரம்பிற்கு, ஒருவேளை அதற்கு அப்பாலும், தள்ளியிருக்கின்றனர்.
இது வெறும் தொடக்கமே. குறைந்த அளவாக எட்டு அமெரிக்க விமான நிறுவனங்கள் கியூபாவிற்கு வணிக விமானங்களை (சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்த விமானங்களுக்கு மாறாக) இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. இவ்வாண்டின் இறுதியில் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதற்கு கதவைத் திறந்துவிட வாய்ப்பிருக்கிறது.

வெடித்தெழும் கியூபா சுற்றுலாப் போக்குவரத்து ஏற்கனவே துயர நிலையிலிருக்கும் அந்நாட்டின் உணவு அமைப்பின் மீதான நெருக்கடியை அதிகரிக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா உணவகங்களில் அதிகரிக்கும் உணவுத் தேவையும் கியூபாவில் பெருமளவில் விரிவடைந்து வரும் தனியார் உணவகங்களும் உள்நாட்டில் விலையேற்றத்தை உருவாக்குகின்றன. இதனால், கியூபியர்கள் தம் குடும்பத்தினருக்குத் தேவையான உணவை வழங்குதற்கு அல்லலுறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இது, உணவு இறக்குமதியைப் பெருமளவில் சார்ந்திருக்கும் நிலைக்கு கியூபாவைத் தள்ளி, அதன் அரசாங்கத்திற்குச் செலவுடைய சிக்கலை உருவாக்கி உள்ளது. உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான மூலதனத்தைத் தேடும் இக்கட்டான நிலைக்கு வேளாண்மைத்துறை உள்ளாகியிருக்கிறது; ஆனால் மூலதனத்திற்கான உள்நாட்டு வளங்களோ மிக மிகக் குறைவாக உள்ளன. இதனால் அந்நிய முதலீட்டின் தேவைக்கான நெருக்கடி மேலோங்கியிருக்கிறது.

அமெரிக்கத் தூதரகத்தில் ஒபாமாவின் வருகைக்காகக் காத்திருக்கும் கியூபமக்கள்
 
வெளிநாட்டு டாலர்களின் தேவை

உண்மையில் கியூபா பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடு கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

கடந்த முறை நடைபெற்ற கியூபாவின் பன்னாட்டு வணிகக் கண்காட்சியில், கியூபா வெளிநாட்டு வணிக அமைச்சர் ரொட்ரிகோ மல்மியர்கா, மொத்தமாக 8.2.பில்லியன் டாலர்கள் தேவைப்படும் 326 திட்டங்களைக் கொண்ட வணிக வாய்ப்புப் பட்டியலொன்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அறிவித்தார். இப்பட்டியலில் இருந்தவை முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த 40 திட்டங்களின் தேவைக்கும் மேற்பட்டவை ஆகும். முந்தைய திட்டங்கள் அனைத்தும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன; ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டுப் பங்காளிகளுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் இருப்பதே எனக் கூறப்பட்டது.

உண்மையில், கியூபாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (2013ஆம் ஆண்டில் 2.7 % இருந்ததை) 5 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை அடைய ஒவ்வோராண்டும் 2பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கியூபாவிற்குத் தேவையாக இருக்கிறது என்று மல்மியர்கா ஏற்றுக்கொண்டார். பன்னாட்டுத் தரம் என பலராலும் கருதப்படும் நிலையை கியூபா இன்னும் எட்டவில்லை என்றாலும், அதன் அந்நிய முதலீட்டு ஒழுங்காற்று விதிகள் படிப்படியாக உருவாகி வருகின்றன.

1990களிலிருந்து கியூபா தொடர்பான சட்டச் சிக்கல்களில் ஈடுபட்டு வருபவரான அரசு வழக்குரைஞர் ஜிம் உவய்செனட், கியூபாவை ’எல்லைப்புறச் சந்தை’ (frontier market) என வர்ணித்திருக்கிறார்:
வரையறையின்படி, நீங்கள் எல்லைப்புறத்தில் இருக்கிறீர்கள். . . நியூயார்க்கிலோ மியாமியிலோ உள்ளது போன்ற முதலீடு செய்யும் விதிகளையும் பாதுகாப்பையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் நியூயார்க்கிலோ மியாமியிலோதான் முதலீடு செய்ய வேண்டும்.
மாறாக, எக்கர்மேன் சட்ட நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவரும் அதன் பன்னாட்டுச் செயல்பாடும் குழுவின் தலைவரும் கியூப-அமெரிக்க வழக்கறிஞருமான பெட்ரொ ஃபையர் பின்வரும் மாற்றங்களைக் காண்கிறார்:
வாடிக்கையாளர்கள், கியூபாவைப் பற்றிய தம்முடைய பார்வையை இப்பொழுது மாற்றி இருக்கிறார்கள். முன்னர் அவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வருந்தினார்கள். தற்பொழுது அவர்கள், பின்தங்கியிருப்பதாக வருந்துகிறார்கள்.

கோரிக்கைகளும் எதிர்வாதங்களும்

வழக்கறிஞரின் பேச்சு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறும் சிக்கல் என்னும் மற்றொரு கருத்தை எழுப்பியிருக்கிறது;
முட்கள் நிறைந்த இந்தச் சிக்கலைப் பற்றிக் கவனத்துடன் விவாதிப்பதற்கு இங்குள்ள இடம் போதாது. எனினும், அமெரிக்காவின் நீதித்துறை 1.9பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 5900க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்கு சான்றளித்திருக்கிறது என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும். பறிமுதலில் தங்களது சொத்துகளை இழந்து அமெரிக்காவின் குடிமக்களாகிவிட்ட கியூபியர்கள் தம் சொத்துகளுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் (அதன் சட்டத்தன்மை எதிர்க்கப்பட்டிருந்தபோதிலும்) வழக்குத் தொடுக்க 1996ஆம் ஆண்டின் ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தின் பிரிவுகள் அனுமதிக்கின்றன.

ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தை, ’வழக்குரைஞர்களுக்கு முழு வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டம்’ என சில வழக்குரைஞர்கள் குறிப்பிடுவதைப் போல ஒருவேளை அது ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாறாக, தடையாணையின் விளைவாக கியூபாவிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அமெரிக்கா 1 ட்ரில்லியன் டாலரை கியூபாவிற்கு வழங்க வேண்டுமெனச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் தடையாணை நீக்கப்பட்டாலும்கூட நீண்டதும் குழம்பம் நிறைந்ததுமான சட்டச் சாலை ஒன்றைக் காண வேண்டியிருக்கும் என்றே கூறலாம். ஹெலம்ஸ் – பார்டன் சட்ட ஆக்கம் தடையாணையைச் சட்டத்தில் நெறிமுறைப்படுத்தி இருப்பதால், அதனை மேம்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரின் அனுமதியைக் கோருகிறது.
வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

இதுவரை, கியூபாவுடனான உறவு, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் போட்டியில் பெரிய சிக்கலாக இருந்ததில்லை.
தற்பொழுது, கியூப-அமெரிக்கரான மார்க்கோ ரூபியா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதால், மனித உரிமையில் அக்கறையுள்ள மற்றொரு கியூப-அமெரிக்கரான டெட்குருஸ் என்னும் வேட்பாளர் எல்லாவகையான தளர்த்தல்களையும் கடுமையாக எதிர்க்கிறார். அரசியல் உறவுகளை இயல்பு நிலைப்படுத்தலை ’சோகத்தவறு’ என அவர் வர்ணித்திருக்கிறார்.
கியூபாவின் நிலையைப் பற்றி ஜான் காசியா எதுவும் பேசவில்லை; ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபொழுதே தடைகளை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கையில் அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்.

குடியரசுக் கட்சியின் பிற வேட்பாளர்களிலிருந்து வேறுபட்டு, டொனால்டு ட்ரம்ப் கியூபாவுடான அரசியல் உறவுகளை ஆதரிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம், “கியூபாவுடன் நல்லுறவு என்னும் கருத்தியல் அருமையானது; ஆனால் நாம் இன்னும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

பெரினி சான்ட்ரஸ், கியூபா மீதான தடையாணையை நீக்க அழைப்பு விடுத்திருந்த ஹிலாரி கிளிண்டனைப் போல, கியூபாவுடனான உறவை இயல்பு நிலைப்படுத்தலை ஆதரிக்கிறார். அவர், தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தடையாணையை நாடாளுமன்றம் நீக்கி விட்டாலும் குடியரசுத் தலைவருக்குள்ள செயலாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி வணிக, பயணத் தடைகளை மேலும் தளர்த்துவேன் என்கிறார்.

வளர்ச்சிக்கு அடித்தளமிடுதல்

அமெரிக்கா தான் விதித்த தடைகளைத் தளர்த்தியது, பிற நாடுகளுடனான வணிகம் ஆகியன போன்ற சந்தை அணுகுமுறை சீர்திருத்தங்களின் விளைவாக, வலிமையான பொருளாதார விரிவாக்கத்திற்கான நல்ல நிலையை கியூபா இன்று அடைந்திருக்கிறது.

கியூபா அரசாங்கம், தனது அரசியல் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டப் போகிறதா அல்லது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் கொள்கைகளின் தேவையை ஆதரிக்கவோ தடை செய்யவோ போகிறதா என்பதே இப்பொழுது எழுகின்ற வினா.

கியூபா அரசாங்கம் அதனுடைய பொருளாதாரத்தையும் உருவாகும் அமெரிக்காவுடனான உறவுகளையும் போலவே மெதுவாக நகர வலிமையான உறுதி பூண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
அமெரிக்கா தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் விகிதத்திற்கு ஏற்பவே கியூபாவில் எங்ஙனம் மாற்றங்கள் உருவாகும் என்பதனை கியூபா அரசாங்கம் முடிவெடுத்து நகரும்.


ஏறத்தாழ 90ஆண்டுகளுக்குப் பின்னர் "ஏர்ஃபோர்சு ஒன்" விமானம் கியூபாவில் தரையிறங்குகிறது

கட்டுரையாளர் குறிப்பு - வில்லியம் ஏ. மெசினா,வேளாண்மைப் பொருளியலாளர், உணவு வேளாண்மை அறிவியல் நிறுவனம்,ஃபளோரிடா பல்கலைக்கழகம்,- பிரைன் சென்ட்ரியூ,இயக்குநர், இலத்தீன் அமெரிக்க வணிகச் சூழலியல் திட்டம்,
ஃபளோரிடா பல்கலைக்கழகம்.
நன்றி: த கான்வர்சேஷன்.காம் https://theconversation.com/as-obama-makes-historic-visit-is-cuba-ready-for-change-56399

மின்னம்பலம் மின்னிதழுக்காக மொழிபெயர்த்தது.
http://sin2.enmail.com/k/2016/03/27/1459036824

சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!







சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!--தாவீது இரத்தோரி

சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள் நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை 60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில், நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் வெப்பப் பெருங்கடலுக்கு நன்றி. சில பில்லியன் ஆண்டுகளேயான பூமியில் நுண்ணறிவு உயிரிகள் பரிணமிக்க முடியுமானால், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது சூரியக் குடும்பத்தில் எங்கேனும் குறைந்த அளவாக மிக எளிய உயிரிகள் ஏதேனும் ஏன் இருக்க முடியவில்லை?

ஆனால், தற்போதைய வானியற்பியல் ஆய்விதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, மிக அண்மையில் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர், பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டிருந்தபோதுதான், சனிக்கோளின் பெரும்பான்மையான நிலவுகள் தோன்றின எனக் கூறுகிறது. இது, நிலவுகளின் வயதுபற்றிய பொதுவான நமது புரிதலுக்கு வெல்விளி இடவும் புதிய பல வினாக்களை எழுப்பவும் செய்கிறது. இதை எப்படி நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அங்கே உயிரினங்கள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா?

சனிக்கோளில் புரட்சி
நமது சூரியக் குடும்பத்திலுள்ள பெருங்கோள்களின் பெரிய நிலவுகள் அனைத்தும் ஏறத்தாழ ஒவ்வொரு கோளையையும் சுற்றியுள்ள வளிமேகம், தூசு ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்தன என நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்தது. எனவே, அவற்றின் வயதும் அவை சுற்றிச்சுழலும் கோளின் வயதும், 4.5 பில்லியன் ஆண்டுகள் (சூரியக் குடும்பத்தின் வயது- ஒன்றாக இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. எனினும், அந்தக் கோள்களால்- வெளிவட்டப்பாதையிலுள்ள நுண்கோள்கள், வால் விண்மீன்கள் உள்வட்டப்பாதையில் மோதல்களால் உருவான பெருந்துண்டுக் கூலங்கள் போன்றவற்றைப்போல-பின்னாளில் ஈர்க்கப்பட்ட சிறிய நிலவுகளையும் கொண்டிருக்கின்றன.

ஆனால், தற்போதைய புதிய ஆய்வு, சனிக்கோளின் முதன்மை நிலவுகளிலும் பல இளமையானவை என ஊகித்துரைக்கிறது. சனிக்கோளினுடைய முதன்மை நிலவுகளின் ஓத உறவுகளை உற்றுநோக்கிய ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். தெதைசு, டையோன், ரியா போன்ற இடைநிலையளவுள்ள நிலவுகள் மில்லியன்கணக்கான ஆண்டுகள் இருந்திருந்தால், தற்போதுள்ளதைவிட மிக அதிகமான அளவில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் வட்டப்பாதையில் தம் செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கண்டறிந்தனர்.

மேலும், இன்செலடசினல் தனக்கு அருகிலுள்ளவற்றுடன் கொண்டுள்ள ஓத ஊடாடுகையின் வழியாகப்பெறும் விசையின் விகிதம் (அதன் சுழல்வட்டப்பாதையின் மாற்றங்களிலிருந்து கணக்கிடப்படுகிறது; புகைத்திரள்கள் உமிழும் விசையிலிருந்து அளவிடப்படுகிறது), இந்தச் சூழல் நெடுங்காலமாக இவ்வாறு இருந்திருக்க இயலாது என ஊகித்துரைக்கிறது. எனவே, சனிக்கோளினுடைய இப்பகுதி நிலவுக் குடும்பத்தின் வயது அதிகளவாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்பால் இருக்காது என ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர்.

அவர்களின் முடிவு சரியாக இருந்தால்-அவர்களது மாதிரிகளின்மீது அறிவியலறிஞர்கள் பலருக்கு ஐயம் இருந்தபோதிலும்–அது குறிப்பிடத்தக்க முடிவாகும். அதன் பொருள், சனிக்கோளுக்கு இதற்கு முந்தைய தலைமுறை நிலவுகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்; அவை, கடுமையான மோதல்களால் அழிந்து அவற்றின் சிதைவுகளிலிருந்து மிமாசு, இன்செலடசினல், தெதைசு, டையோன், ரியா ஆகிய தற்போதைய நிலவுகள் தோன்றியிருக்க வேண்டும். வியாழன், யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களைச் சுற்றியுள்ள வளையங்களைவிட சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் அதிகம் கண்ணைக் கவருவதாக இருப்பதற்காக காரணத்தை விளக்கவும் இது உதவுகிறது. ஏனென்றால், ஒப்பீட்டளவில் அண்மையில் நிகழந்த பேரழிவு வழங்கிய பனிக்கட்டிச் சிதைவுகளிலிருந்து அவை உருவாகியிருக்க வேண்டும். டைட்டானும் அதற்கு வெளியே அண்மையிலுள்ள பிறவும் மேற்சொன்ன நிலவுக்கும் பில்லியன் ஆண்டுகள் முந்தியவையாக இருக்கக்கூடும் என்பதனால் அவை, அந்தப் பேரழிவு நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

நாம் இந்தக் கருதுகோளை சோதிப்போமா? தற்போது, ஆய்வக மாதிரிகள் எதுவும் இல்லாதநிலையில், தொலைவிலுள்ள நிலவுகளின் வயதை நிர்ணயிப்பதற்கான சுதந்திரமான வழியெதனையும் அறிவியல் கொண்டிருக்கவில்லை. எனவே, அவற்றின் மேற்பரப்புகளின்மீது விளைந்துள்ள பள்ளங்களின் அடர்த்தியை மட்டுமே நாம் மதிப்பிட முடியும். நிலவுகளின் மேற்பரப்பின்மீது சிதைவுகள் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த கால நீட்சியின் உச்ச அளவே பள்ளத்தின் உச்ச அளவான அடர்த்தி ஆகும். இம்முறையில் ஒவ்வொரு கோளினுடைய நிலவுகளின் மேற்பரப்போடு தொடர்புடைய வயதை மதிப்பிடும் வாய்ப்பை உருவாக்குகிறது.

சனிக்கோளில், இன்செலடசினல் சில பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது ஓதவிசை முறிவுகளாலும், பனிக்கட்டி வெடிப்புகளாலும் மீள்பரப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. மிமாசிலும் ரியாவிலும் (வலுவான ஓத வெப்பம் இல்லாததால்) பள்ளங்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. ஆனால், இன்செலடசினலின் மீள்பரப்பாக்கத்தின் விளைவாக அந்த நிலவு எங்ஙனம் உருவானது என்பதை அதன் பள்ளங்களால் கூற இயலவில்லை. ஒவ்வொரு நிலவிலும் அதிகளவு பள்ளங்கள் அடர்ந்த மேற்பரப்பு, அதன் வயது குறைந்த அளவே எனக் காட்டுகிறது. ஆனால், அத்தாக்கம் ஏற்பட்ட விகிதத்தின் அளவு நமக்குத் தெரியாது என்பதே இதிலுள்ள சிக்கல். எனவே, இவற்றின் வயதை எண்களால் அளவிட்டுக் கூற முடியாது.

பெரும் விளைவுகள்
ஆய்வாளர்களின் கூற்று சரியாக இருந்தால், சனிக்கோளில் மிக அண்மையில் பேரழிவு நிலவழிவு (மீளுருவாதலும்) என்னும் பேரழிவு நிகழ்ந்திருக்க வேண்டும். இதன்விளைவாக, பிற மீபெரும் கோள்களான வியாழன் யூரேனசு ஆகியவற்றின் பெரிய நிலவுகள் உண்மையில் அந்தக் கோள்களின் அளவுக்கு வயதானவையா என்னும் வினா தோன்றுகிறது. நம்முடைய நிலவின் தோற்றம் 4 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் ஏற்பட்ட ஒருவகையான பெரும் தாக்கத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவு உறுதி.
இன்செலடசினலின் வயது உண்மையில் 100மில்லியன் ஆண்டுகளே என்றால், இவைபோன்ற இடங்களில் நுண்ணுயிரிகளைக் காணமுடியும் எனக் கூறிக்கொண்டிருக்கும் விண்ணுயிரியலாளர்களுக்கு இதுவோர் அடியாக இருக்கக்கூடும். இதன் பனிக்கட்டிப் படுகைகளுக்கு அடியில் வெப்பக்கடல் இருப்பதைப்போல, இது உயிரினங்கள் வசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால், இன்செலடசு மிக இளையதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்குப் போதுமான காலம் தேவையாக இருந்திருக்குமோ?
இதை இன்னும் ஆய்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். பூமியில் 4.1 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர்–அது மிகமிக இளமையாக இருந்தபோது-சிலவகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்செலடசுவின் வயதை கிரிட்டேசியசு ஊழி என நிர்ணயித்தால், ஏற்கனவே அதன் உயிரிகளை கண்டறிந்திருக்க வேண்டும். அதன்பின்னர், இன்னும் அதிகளவில் அகிலம் முழுக்க உயிரினங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

நல்வாய்ப்பாக, இதற்கான விடையை அறிய நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டில், இன்செலடசுவில் இருக்கும் பெருங்கடலுக்கும் அதன் முதன்மையான பாறைகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக அங்குள்ள நுண்ணியிரிகளுக்கு போதுமான ஆற்றல் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த எதிர்வினைகளிலிருந்து வெளிப்பட்ட ஹைட்ரஜன் மூலக்கூறுகளை அந்தக் கோளின் புகைத்திரைகளுக்குள் கண்டறியமுடியும் என்றும் ஆய்வகச் சோதனைகள் ஊகித்துரைக்கின்றன. அந்நிலவின் பயணத்தை 2015, அக்டோபர் மாதத்தில் காசினி (Cassini) ஆய்ந்து பார்த்து அறிந்தவற்றுள் சிலவே இவை. முடிவுகள் விரைவில் வெளிவரக்கூடும்.

தமிழில் அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு-தாவீது இரத்தோரி-கோள் புவியியல் பேராசிரியர், திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

https://theconversation.com/saturns-moons-may-be-younger-than-the-dinosaurs-so-could-life-really-exist-there-56860

https://minnambalam.com/k/2016/04/08/1460073602

த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்

 
த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்-பால் லாஸ்மர்


த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர், இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விதழ் வெளிவந்ததைப் போன்ற அதே நேர்த்தியோடும், தாகத்தோடும் வெளியேறுகிறது.

ஒரு டிராம் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலிருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரப் பயணிகள் அவசரமாக முந்திக்கொண்டு பின்வாங்கும் காட்சியை வலுவான ஒளிப்படமாக, தனது இறுதி முதற்பக்கத்தில் வெளியிட்டு, அதை மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. அவ்வாரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாதத்தின் கடுமையான மனநிலையை அந்த ஒளிப்படம் கச்சிதமாகப் பிரதிபலித்தது. மற்ற இதழ்கள் நிகழ்விடத்தில் காயம்பட்ட பயங்கரவாதத்தின் சந்தேகத்தை படம்பிடித்துவிட்டுச் சென்றுவிட்டன. த இண்டிபெண்டன்ட்டின் தேர்வோ, உலக நிகழ்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விளைவைப் பற்றிய அதன் அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இறுதி இதழ், முக்கியமான பொதுநலம்சார்ந்த தனிநிலைக் கட்டுரைகள் பலவற்றையும் வழக்கமான முந்தையநாள் செய்திகளையும் நன்கு வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் மாநாட்டில் ஜெர்மி கார்பின் ஆற்றிய உரையானது, இதழின் அரசியல்பிரிவுத் துணையாசிரியர் நைசல் மோரிசிடமிருந்து “உழைப்பாளரின் புரட்சியை மோசமான தேர்தல் கண்டிருக்கமுடியும்” என்னும் அரசியல் ஊகத்துக்கு நேரெதிரான கூற்றோடு சேர்ந்து வந்திருந்தால் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கும்.

கருத்துகள்மீதான த இண்டிபெண்டன்டின் வறட்டுத்தனமற்ற அணுகுமுறை அதை எப்போதும் உயிர்ப்புடையதாகவும், வேறுபட்டதாகவும் ஆக்கிவிடுகிறது. அதன், தன் எதிரிகளைப் போன்றதன்று; அது ஒரு கருத்தைத் தழுவுவதற்குமுன்னர், நன்கு சிந்திக்கப்பட்டதாகவும், அடிக்கடி வெல்விளிக்கு உட்பட்டதாகவும் இருக்கும், அதனுடைய நிலைப்பாடு என்னவென்பதை உங்களால் ஒருபோதும் அறியமுடியாது. தனது விளக்க உரையாளர்களின் ஆதரவுப் பிரச்சாரத்தாலும் தவறான வழிநடத்தலாலும் நடைபெறும், எடுத்துக்காட்டாக கார்டியன், இதழ்களைவிட காரிபியன் நிகழ்வை (Corbyn phenomenon) இந்த இதழ் மிகவும் ஏற்றுக்கொள்கிறது. ‘தெருவில்’ எப்போதும் சிறப்பாக உள்ள த இண்டி, கார்பியன்கால மனப்பாங்கைப் பிடித்துவிட்டது.

“உண்மையைச் சொல்வது மிகவும் கடினம்” என்பதை தான் கண்டுகொண்டதாகக் கூறிய அலாஸ்டியர் காம்ப்பெல்லின் இரண்டு பக்க நேர்காணலின் தலைப்பைப் பார்த்ததும் இது, ஏப்ரல் முதல்நாள் செய்தித்தாள்தானா என நான் சரிபார்த்துக் கொண்டதை, நான் கட்டாயம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். பிளேர் காலத்தில் நிகழ்ந்த பேரழிவுக்குப்பின்னர் நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள தொடர்ந்து சுத்தமாக மறுத்துவந்த காம்ப்பெல், ஒரு பெரிய நேர்காணலை வழங்கியிருப்பது வித்தியாசமான தேர்வாகும். இருந்தபோதிலும் அது குறிப்பிடத்தக்கதே.

‘காட்டுவிலங்கு’களைப் போன்று பேசுபவர் என்னும் முத்திரைகொண்ட பிளேர், த இண்டிபெண்டன்டுக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை ‘ஏனென்றால் முர்டோக்கரும், டாக்கருமே இதன் உண்மையான செலுத்துநர்கள்’ என காம்ப்பெல் கூறுகிறார்.

பாட்ரிக் குக்கூபெர் வழங்கிய ‘பாக்தாத்தில் என்ன நடக்கிறது?’ என்னும் குழப்பமான செய்திகளால் எனது மன அமைதி திரும்பவந்தது. எப்போதும் வாசிக்கத்தக்க செய்திகளை வழங்கும் குக்கூபெர்ன், மிகச்சிறந்த பிரிட்டிஷ் வெளிநாட்டுச் செய்தியாளர் ஆவார். அவர் இண்டிபெண்டன்டின் புதிய இணைய இதழோடு இணைந்திருப்பது நல்வாய்ப்பாகும். மூன்றாவது பக்கத்தில், இண்டிபெண்டன்ட் இதழின் நிறுவுகை ஆசிரிய ஆன்ட்ரூஸ் விட்மன் ஸ்மித், “கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அச்சுப்பதிப்பை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும் தொழில்நுட்பம், எங்களை நாங்களே நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றலை வழங்கியிருக்கிறது” என அவ்விதழுக்கான அச்சுப்பதிப்புக்கான அபாயகரமான பிரச்னையை சுருக்கமாகத் தொகுத்துரைத்து இருக்கிறார்.

அழகின் கூறு

செய்தித்தாளைத் திருப்பும்போது, அச்சுப்பதிப்பின் அழிவில் தற்போதைய இணையத் தலைமுறை எதை இழக்கிறது என்னும் சிந்தனை என்னைத் தாக்கியது. இதுவே இறுதி அச்சுப்பதிப்பு என்பதனால், இது வலிமையான ஒளிப்படங்களும், வியப்பூட்டும் அச்சுக்கலையும் கொண்டதாக அழகிய கைத்திறனோடு நேர்த்தியாகவும், தூய்மையாகவும் வடிவமைக்கப்பட்டு அழகுணர்வில் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அதன் நிறுவனர்கள் ஆணையிட்டனர்.

எரிக் கில்லின் அச்சுக்கலை வளர்ந்துவந்திருந்த, இணையத்துக்கு முந்தைய தலைமுறையைச்சேர்ந்த நான், அச்சு வரைகலையின் தூய்மையான அழகையும் வெள்ளைத்தாளோடு உள்ள உறவின் நெருக்கத்தையும் அறிவதற்காக வாய்ப்பு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடைத்திருந்தால் வியப்படைவேன்.

1998ம் ஆண்டின் கோடைக்காலத்தில், த இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியர் சைமன் கெல்னர், அவ்விதழில் புலனாய்வு இதழாளராகப் பணியாற்ற வருமாறு, எனக்கு விடுத்த தொலைபேசி அழைப்பிலிருந்து அவ்விதழுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளின் இதழாளனாகவும், தொலைக்காட்சித் தயாரிப்பாளனாகவும் இருந்த எனக்கு, அந்த அழைப்பு, நாள்தோறும் தீப்பிடித்தாற் போன்ற வேலைக்கான ஞானக்குளியலாக இருந்தது. முதல்நாளில் ஒரு மணி நேரத்தில் 1000 சொற்களை விரைந்து எழுதியிருந்தது; எழுதினேன். அடுத்த மூன்று ஆண்டுகள், நான் புலானாய்வையும், பிறவற்றையும் பற்றி எழுதினேன். அது கடுமையான குத்து. ஆனால் ஊழலையும், மெத்தனத்தையும் எங்கள் வலிமையையும் மீறி, மடிமீதேறி விளையாடும் செல்லநாயைப் போலன்றி காவல்நாயாக கடித்துக் குதறினோம்.

2001ம் ஆண்டில் என் குடும்பத்தோடு இலண்டனிலிருந்து வெளியேறுவதற்காக நான் பதவி விலகினேன். ஆனால், பல மாதங்களுக்குப் பின்னர், 9/11 நிகழ்வையடுத்து அப்போதைய துணை ஆசிரியர் மைக்கேல் வில்லியம்சால் த இண்டிபெண்டன்ட் இதழில் ஞாயிற்றுக்கிழமைகளில் உதவுவதற்காக அழைக்கப்பட்டேன். இரு இதழ்களிலும் நான் பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினேன். நிதிப் பற்றாக்குறையுடைய ஞாயிற்றுக்கிழமை பதிப்புடனான எனது ஒப்பந்தம் 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஒப்பந்தத்தை நான் நிறைவுசெய்யும்போது அதற்காக எழுதியதைவிட அதிகமாக அதற்கு தாள் வழங்குவதன்வழியாக சம்பாதித்திருக்கலாம். நானும், எனது கல்விப் பணியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த விரும்பினேன்.

வளர்ந்த இதழியல்
த இண்டிபெண்டன்ட் இதழ்கள் இனிமையும், எளிய வேலையும் கொண்டவையன்று. பணத்திற்கு அப்பால் அதற்கேயுரிய பலவீனங்களையும் அது கொண்டிருந்தது. நான் பணியாற்றிய காலத்தில், தொலைநோக்குடைய தலைமைத்துவம், அறிவுச்சால்பு அல்லது கார்டியன் இதழுக்கு ஆலன் ரஸ்பிரிட்ஜர் வழங்கியதைப் போன்ற பொது உருவம் ஆகியவற்றை அவ்விதழ் கொண்டிருக்கவில்லை. மிக அண்மைக்காலம் வரை செய்தி ஒலிபரப்பிலோ, வேறெங்குமோ இண்டிபெண்டன்ட் ஆசிரியரின் கூற்றை மிக அரிதாகவே கேட்டிருப்பீர்கள். சிலவேளைகளில், குடும்ப அல்லது சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் வேலையமர்த்தங்கள் நிகழ்ந்ததாகத் தோன்றியதால், நல்ல தகுதியுடைய பணியாளர்கள் மிகவும் விரக்தியடைந்தார்கள்.

த இண்டிபெண்டன்ட் தன் வாசகர்களை மதிப்போடு நடத்தியது. அவர்களை நுண்ணறிவுடைய, பக்குவப்பட்ட தனது விவாதங்களாலும், வாதங்களாலும் மட்டுமே ஈர்க்கமுடியும் எனக் கருதியது. இவ்வணுகுமுறை, தன் வாசகர்களின் மோசமான தப்பெண்ணங்களுக்கு வெற்றுத்தீனி போடுகிற அதனுடைய போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. த இண்டிபெண்டன்ட் வாசகர்கள் எதை விரும்பினார்களோ துல்லியமாக அதையே த இண்டிபெண்டன்ட்டும் விரும்பியது. இம்மரபை அதன் வலைத்தள வரைவும் பின்பற்றும் என நம்புவோம்.

வரலாற்றுணர்வும், சகிப்புத்தன்மையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் முன்னெப்போதைக் காட்டிலும் இக்காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால், இவை தற்போதைய பல இதழ்களில் இவை இல்லை என்பது கவலையளிக்கிறது.

https://theconversation.com/the-independents-final-edition-summed-up-all-that-is-powerful-about-newsprint-56874

தமிழில்: அரிஅரவேலன்

கட்டுரையாளர் குறிப்பு- பால் லாஸ்மர்,இதழியல் முதுநிலை விரிவுரையாளர், சசெக்சு பல்கலைக்கழகம்.

https://minnambalam.com/k/2016/04/07/1459987203

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...