ஊக்கம் தரும் பா!



அற்ப நினைவுகள் இல்லா - ஓர்
ஐந்தாறு தோழர்கள் போதும்
பற்பல வித்தைகள் செய்வேன் - அவர்
பண்புத் துணையுடன் நானே!

சமூகச் சீரழிவுகளைக் காணும் பொழுதும் அவற்றை மாற்ற முனைந்து தோல்வியைத் தழுவிச் சோர்வடையும் பொழுதும் எனக்கு "ஊக்கம் தரும் பா" இது. இதனை நான் உத்தமபாளையம் ஃகாசி கருத்தராவுத்தர் கவுதியா கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்த பொழுது அக்கல்லூரியின் நூலகத்தில் இருந்த கவிதை நூலொன்றிற் படித்தேன். அப்பாடல் அப்படியே மனதிற் பதிந்துவிட்டது. அப்பாடலை எழுதியவர் தன் இறுதிக்காலம் வரை சிங்க நோக்கராகவே வாழ்ந்து மறைந்த தன்மானத் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் சாலை இளந்திரையனார் ஆவார்.

நீண்ட நாளாக எனது நினைவுக் குளத்தில் மிதக்காத இக்கவிதைத் தாமரை, நேற்று சற்று நான் மனம் தளர்ந்திருந்த வேளையில் மீண்டும் எனது மனக் குளத்திற் பூத்து ஊக்கம் தந்தது. பூத்த ஊக்கமே அந்தப் பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.

செம்மையாய்ச் செயல்படப் பழகுக!

1
வேலை யாதென விளங்கிக் கொள்வதும்;
வேண்டும் பொருள்களைத் திரட்டிக் கொள்வதும்;
நுண்ணிய வற்றையும் நுட்பமாய் நோக்கலும்;
அனைத்துக் கூறிலும் அக்கறை செலுத்தலும்;
நடக்கும் வேலை சரியாய் முறையாய்
நடக்கிற தாவென உறுதிப் படுத்தலும்;
அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்
ஆற்றப் படுதலும்; வினையது முடிந்ததும்
வினைபுரி இடத்தை தூய்மை செய்தலும்;
முடிந்த செயல்களை மீண்டும் நோக்கி
வேண்டும் மாற்றம் செய்தலும்
செம்மையாய் வேலையைச் செய்திட உதவுமே.
2
பொறுமை காத்தல்; விடாது முயலுதல்;
கடமையே கண்ணென கவனமாய் உழைத்தல்
ஆகிய பண்பினால் அடையலாம் செம்மையே!
3
சோம்பல்; மறதி; கவன மின்மை
ஆகிய மூன்றும் அடியறக் களைந்து
விடா முயற்சி; கடமை உணர்வு
பொறுமை ஆகிய மூன்றும் கொண்டால்
ஆற்றும் பணியில் அமைந்திடும் செம்மையே!
4
தணிக்கைப் பட்டியல்; கால அட்டவணை;
ஒப்பிட்டு ஆய்தல்; மீளவும் ஆய்தல்;
திட்டம் திருத்தல் ஆகிய வற்றால்
புரிந்திடும் பணியில் புலப்படும் செம்மையே!

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...