வந்த செய்தியும் வராத செய்தியும்

இந்தியாவின் மீது
இன்னபிற நாடுகள் பின்பற்றிய
தீண்டாமை தீர்ந்துபோனதென
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
பெருமிதம் மிளிரப் பேச
எங்களின் ஆலோசனைகளை எல்லாம்
அரசு ஏற்றுக்கொண்டதால்
இந்தப் பிரேரணையை நாங்கள்
ஆதரிக்கிறோம் என
எதிக்கட்சியின் மூத்த தலைவர்
இதமாய்க் கூற
எதிர்காலத்தில் உந்துகள் கூட
அணுசக்தியில்தான் இங்குமென
பகுத்தறிவுக் கட்சியைச் சேர்ந்தவர்
அரூடம் மொழிய
குரல்வாக்கெடுப்பின் வழியாக
எதிர்க்கட்சிகள் கொடுத்த
எல்லாத் திருத்தங்களோடும்
அணுவிபத்திற்கான இழப்பீட்டுப் பிரேரணை
மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாய்
அவைத்தலைவர்
செயற்கைப் புன்னகையோடு செப்பினார்
இது
வந்த செய்தி

வராத செய்தி
இராணுவ இசை முழங்க
இந்திய அமைச்சர்கள்
வரிசையில் நின்று
வாழ்த்துப்பாட
அதிகாரிகள்
அடக்கவொடுக்கமாய் நிற்க
அரசு முறைப் பயணமாக
இந்தியாவிற்கு வரவிருக்கிற
அமெரிக்க அதிபரை வரவேற்க
இந்தியாவின் சி.இ.ஓ.
மன்மோகன் சிங்
மலர்ச் செண்டுகளை அல்ல
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
அண்மையிற் கூட்டப்பட்ட
தங்களின் ஊதியம்
கட்டுபடியாகதே என
"உச்சுக்" கொட்டியதை
குரல் வாக்காய்க் கருதி
உருவாக்கப்பட்ட
எதிர்கால இந்தியர்களின்
மண்டையோட்டுக் கொத்தைக்
கொடுக்க இருக்கிறார்.
இது
வராத செய்தி

முதிர்ச்சி

உடலின் முதிர்ச்சி முதுமை
அறிவின் முதிர்ச்சி புலமை
அன்பின் முதிர்ச்சி காதல்
மனதின் முதிர்ச்சி ஞானம்
எதன் முதிர்ச்சி நாம்?

விடுதலையின் கதை!

தொடங்கிய இடத்திற்கே
திரும்பியிருக்கிறோம்
அவர்கள்
மீண்டும்
வணிகம் செய்ய வந்திருக்கிறார்கள்
இவர்கள்
மீண்டும்
கடன் வாங்கிக் கொண்டுக்கிறார்கள்
நம்மில் பலர்
அவர்களுக்கு
ஆள்பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்
அவர்கள் மேற்பார்வையில்
இவர்கள் நம்மை ஆள்கிறார்கள்
ஆளும் உரிமையையும்
விரைவில் இவர்களிடமிருந்து
அவர்கள் வாங்கிவிடுவார்கள்
அப்புறம் என்ன?
அப்பாவி மக்கள்
அடி தாங்க மாட்டாமல்
வெடித்தெழுவார்கள்
இவர்களில் சிலர்
அவர்களுக்காக
அப்பாவிகளை வதைப்பார்கள்
இன்னும் சிலர்
நெஞ்சு பொறுக்குதில்லையே
எனப் பாடல் புனைவார்கள்
இன்னும் சிலர்
அடிவாங்கிகள்
வெல்லப் போகிறார்கள் என்றதும்
அடிவாங்கிகளுக்கு
பஞ்சு மிட்டாய்க் கனவுகளை விற்பார்கள்
பாற்கடல் கடைந்து அமிழ்தம் வருகையில்
நஞ்சை
அடிவாங்கிகளுக்குக் கொடுத்துவிட்டு
அமிழ்தத்தை
அவர்கள் குடிப்பார்கள்
அன்றைக்கும்
என்னைப் போல் ஓராள்
விடுதலையின் கதையை எழுதுவார்
உங்களைப் போல் சிலர்
அதனைப் படித்துவிட்டு
“நல்லாயிருக்கு!”
“பிடிச்சிருக்கு!”
“மோசம்”
“வேற வேலையில்லை”
என அவரவர்க்குத் தோன்றியதைக் கூறிவிட்டு
அவரவர் வேலையைப் பார்ப்பார்கள்
நம்மைப் போலவே
யாராவது ஒருவர் சொல்வார்
“நம்மாலா என்ன பண்ணமுடியும்?”
இன்னொடுவர் சொல்வார்
“மாற்றம் மட்டுமே மாறாதது
எனவே இதுவும் மாறும்”
அடுத்தொருவர் சொல்வர்
“இதுவும் கடந்து போகும்
எங்கள் குருவின் காலைக் கழுவி
நீரைக் குடியுங்கள்”
எல்லாவற்றையும்
கேட்டு, பார்த்து மகிழ்வார்கள் பலர்
தொலைக்காட்சியின் முன்பு
ஆனால்
சிலர்…
மிகச் சிலர்…
கனவுகள் மிதக்காத கண்களோடு வந்து
காலத்தின் குரல்வளைப் பிடித்து நெரிப்பார்கள்
அப்பொழுதுதான்
விடுதலை விடுதலை பெறும்

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...