மாற்று அணி மலருமா?

அவன் ஓர் அடிமை. இளவரசியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். செய்தியை அரசன் அறிந்தான். வட்டரங்கின் நடுவில் அடிமை நிறுத்தப்பட்டான். அரசன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அரங்கின் அடுக்கு இருக்கையில் மக்கள் அமர்ந்து இருந்தார்கள். முழுவதும் மூடப்பட்ட இரண்டு பெரிய கூண்டுகள் வட்டரங்கிற்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றினுள் அவன் காதலியும் மற்றொன்றில் பலநாள்களாகப் பட்டினிகிடக்கும் சிங்கமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கூண்டுகளில் ஒன்றை அடிமை திறக்க வேண்டும் என்றும் திறக்கப்படும் பெட்டிக்குள் காதலி இருந்தால், அவளை அவன் மணந்துகொள்ளலாம் என்றும் சிங்கம் இருந்தால் அதற்கு அவன் இரையாக வேண்டும் என்றும் அரசன் அறிவித்தான். அடிமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தான். நல்லவேளையாக அதற்குள் சிங்கம் இல்லை; ஆனால் உள்ளே இருந்த கொடிய நஞ்சினையுடைய கருநாகம் ஒன்று அந்த அடிமைக் கொத்துவதற்காக சீறிக்கொண்டு வந்தது. உயிர்பிழைக்க வேண்டும் என்னும் தவித்த அடிமை மற்றொரு பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்த சிங்கம் வெளியே வந்து அவனைத் துரத்தத் தொடங்கியது.

இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே திங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்து இந்திய நாட்டைக் காப்பது என்னும் குழப்பம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்து இருக்கிறது.


ஒருபக்கம் ஊழல் சாக்கடையில் ஊறி சொரணையே அற்றுப்போன, இந்திய தேசிய காங்கிரசின் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; மறுபக்கம் இந்தியாவின் இனப்படுகொலை நாயகனான நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கும் இராசுடிரிய சுயம் சேவக்கு (ஆர்.எசு.எசு.) அமைப்பின் அரசியல் அமைப்பான பாரதிய சனதா கட்சியின் தலைமையிலான வலதுசாரிகளின் கூட்டணி. எனவே இந்திய வாக்காளர்கள், தம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள வேண்டியவர்கள் ஊழல்வாணர்களா, மதவெறியர்களான காவிபயங்கரவாணர்களா என்பதனை முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற ஊழல்களையும் அவை தொடர்பான கோப்புகள் களவு போவதையும் கண்டு மனம்நொந்து இருக்கும் சிலரோ, “நரேந்திர மோடி திறமையான ஆட்சியாளர்; கதிரொளி மின்னாற்றலால் அம்மாநிலத்தின் மின்சாரத் தேவையை நிறைவுசெய்த செயல்வீரர்; இந்தியாவிலேயே மதுவிலக்கை கடைபிடிக்கும் ஒரே மாநிலத்தின் முதல்வர்; வளர்ச்சியின் நாயகன்; எனவே அவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனக் கதைக்கிறார்கள். இவர்கள் நரேந்திர மோடியைப் பற்றி அவரது பொதுமக்கள் தொடர்பு நிறுமம் (Public Relation Company) கட்டமைக்கும் பிம்பத்தைப் பார்த்து மயங்கி இருப்பவர்கள்; கடந்த ஆண்டில் அவர் நடித்த உண்ணாநோன்பு நாடகத்தால் கிறுகிறுத்துப்போய் அவரது, குருதிக்கறை படிந்த, கைகளைப் பற்றிக் குலுக்கத் துடிப்பவர்கள். இந்த மயக்கமடைந்தவர்கள் அணியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வைத்தியநாதபுரம் இராமையர் மகன் கிருட்டிணய்யர் என்னும் வி. ஆர். கிருட்டிணய்யர் செப்டம்பர் 25ஆம் நாள் சேர்ந்திருப்பதுதான் நகைமுரணாக இருக்கிறது. அவர், “பிரதமர் தேர்தலில் மோடியை ஆதரிப்பதற்கான தேசியத் தேர்தலறிக்கையில் இணைக்கப்பட வேண்டிய எனது ஏழு கருத்துகள்” என்னும் பின்வரும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்:



1. நான் மதுவிலக்கையும் கதிரொளி மின்னாற்றல் திட்டங்களையும் ஆதரிக்கிறேன்.

2. நான் சமுதாயவுடைமையை (Socialism) உறுதிப்பாட்டால் ஆதரிக்கிறேன். சமுதாயவுடைமைப் பொருளாதாரத்தை மோடி ஆதரிக்கவில்லை என்றால், அவரை நான் எதிர்ப்பேன்.

3. நான் மதச்சார்பின்மையை ஆதரிக்கிறேன். அவர் இசுலாமியருக்கு எதிரானவராகவும் இந்திய ஒருமைப்பாடு, மதஒற்றுமை ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருந்தால் நான் அவரை ஆதரிக்க மாட்டேன்.

4. நான் நீதி, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை ஆதரிக்கிறேன். நமது சட்ட மெய்யியலானது சமுதாயவுடைமையானதாக இருக்க வேண்டும். நாம் பின்பற்றிக்கொண்டு இருக்கும் சட்ட மெய்யியலானது பிரிட்டிசினுடைய சட்டமெய்யியலில் இருந்து நிலைமாற்றம் செய்யப்பட்டது ஆகும்.

5. நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதியளிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் சமுதாய அமைப்பை ஆதரிக்கிறேன். முழுமையாகவும் செயற்றிறத்தோடும் போர்க்குணத்தோடும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மோடி ஏற்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

6. நான் இலவச சட்ட உதவியையும் நீதியையும் ஆதரிக்கிறேன். ஏழைகளுக்கான இலவசமாக சட்ட உதவிக்குரிய முழுமையான கொள்கை இருந்தால் மட்டுமே உண்மையான மக்கள்நாயகம் அமைய முடியும்.

7. இந்த தேசத்தின் மோசமான எதிரி ஊழலே ஆகும். அது இன்றைக்கு எங்கெங்கும் காணப்படுகிறது. எனவே ஊழல் ஒழிப்பிற்கான போர்க்குணமுள்ள பரப்புரை இயக்கமே மோடியின் செயற்றிறம் உடைய கொள்கையாக இருக்க வேண்டும். ஊழலின் சுவடே இல்லாமல் சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துவதே எந்தவோர் அரசாங்கத்தின் மிகவும் செயற்றிறமுடைய கொள்கையாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிட்ட கிருட்டிணய்யர், 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் இனப்படுகொலைகளை நடத்தி இந்தியாவின் இட்லராக மோடி மாறிய வரலாற்றை அறியாதவர் அல்லர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நேர்மையாளர் வேடமிட்ட மன்மோகன்சிங்கின் ஊழல் முகம் வெளிப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பு கிருட்டிணய்யரை 180 பாகை எதிர்திசையில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது. எப்பொழுதும் மதில் மேல் பூனையாக இருக்கும் “நடுநிலையாளர்கள்” பலரும் இப்பொழுது இவரது மனநிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான மதபயங்கரவாதத்தைவிட ஊழல் மிகவும் மோசமாகத் தெரிகிறது. எனவே இவர்கள் தம் கையில் இருப்பது நஞ்சு என்று தெரிந்தே அதனைக் குடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

மதபயங்கரவாதத்தின் ஆபத்தை நன்கு அறிந்த சிலரோ, மன்மோகன் நிதியமைச்சராக இருந்த நாள்களில் அவர் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதற்காக ஆடிய “பதவி விலகல்” நாடகங்களை நினைவுகூர்ந்து, “அவர் நல்லவர்தான்; அவர் சார்ந்திருக்கும் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தவர்கள்தான் மோசமானவர்கள்” எனக்கூறி, “அடுத்தமுறை இந்திய தேசிய காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றோ, ‘நல்லவர்’களோடு கூட்டுச் சேர்ந்தோ ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பா.ச.க. என்னும் நாசிசக் கட்சி (Nazism) எக்காரணத்தைக்கொண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது” என விரும்புகிறார்கள்.


இவர்களுக்கு ஊழலைவிட மதபயங்கரவாதம் ஆபத்தானதாகத் தெரிகிறது. எனவே மதச்சார்பின்மையின் மீதும் சமுதாயவுடைமையின் மீதும் நம்பிக்கை வந்திருந்த சவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிரதமர் பதவிக்கு வந்து இந்த நாட்டை ஈடேற்றம் செய்ய மாட்டார்களா என்னும் ஏக்கம் இவர்கள் பேச்சிலும் முகத்திலும் தெரிகிறது. ஆனால் பா.ச.க.வின் நாசிசத்திற்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கும் வல்லமை இத்தாலிய மகளின் தலைமையில் இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு என்னும் ஃபாசிசக் கட்சிக்கு (Fascism) உண்டு என்பதையும் ஃபாசிசத்தின் தாய்வீடு இத்தாலி என்பதையும் இவர்கள் மறக்கத் துடிக்கிறார்கள்.

மதச்சார்பின்மையற்ற, ஊழலுக்கு எதிரான கட்சிகள் எனப் பொதுவாகக் கருதப்படும் இடதுசாரிக் கட்சிகளோ ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்குப் பலம் பொருந்திய மாற்று அணியாக உருவாகவில்லை.

இந்த இக்கட்டான சூழலில், மதப்பயங்காரவாதத்தின் கொடூரமுகத்தையும் ஊழலின் கோரமுகத்தையும் அறிந்து, அவற்றைத் தவிர்க்க விழையும் பொறுப்புடைய மக்களின் நிலைமையோ, கண்கள் இரண்டையும் இழந்த கறுப்புப்பூனையை அம்மாவாசை நாளில் இருட்டு அறைக்குள் விளக்கை ஏற்றாமல் பிடிக்க முனைபவரின் நிலைமையைப் போல சிக்கலானதாக இருக்கிறது.

எனவே வரும்காலத்தில் இந்திய நாடு பயணிக்க வேண்டிய பாதை அமெரிக்கச் சார்புப் பாதையோ இந்துத்துவப் பாதையோ அல்ல; சமுதாயவுடைமை மக்கள்நாயகப் பாதையே என்னும் முடிவைத் தெளிவுபடுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக 2014 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அமைய இருக்கிறது. எனவே, இடதுசாரிகளும் தம் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுகிற விளிம்புநிலை மக்களின் கட்சிகளும் இணைந்த மாற்று அணி ஒன்று மலர வேண்டிய கட்டாயம் தோன்றி இருக்கிறது. ஒருவேளை இந்த அணி ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெறமுடியாது போகலாம். ஆனால், ஆட்சியை அமைக்கும் அணியினர் இவ்வணியினரின் ஆதரவைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தையேனும் உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும். அந்நோக்கில் மாற்று அணி ஒன்று மலருமா?...... பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆசிரியர்

வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்தில் ஆசிரியரை மதித்துப் பழகுக என்பது ஒரு பாடம். அதில் ஆசிரியரை மாணவர்கள் ஏன் மதிக்க வேண்டும் எனக் கூறும் பனுவலில் மாணவர்கள் மதிக்கத்தக்க ஆசிரியராக எப்படித் திகழ்வது என்பதனை உட்பனுவலாக அமைத்து எழுதினேன். அப்பனுவலுக்காக பின்வரும் பாடலையும் இயற்றினேன். இதில் ஓர் இலட்சிய ஆசிரியரின் தகுதிகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். அத்தகு ஆசிரியர்களாக தமிழக ஆசிரியர்கள் திகழ வாழ்த்துகள்:


பாறையை உடைத்து
சிலைகளைச் செதுக்கும் சிற்பியைப் போல
பாடங்கள் நடத்திப்
பாதைகள் காட்டி பண்படச் செய்பவர்
யார்? அவர் யார்? (2)

உள்ளம் சோர்ந்து
ஒடுங்கி விடாமல் ஊக்கம் நல்கி
உலகம் போற்றும்
உயர்வை நோக்கி உயர்த்தி விடுபவர்
யார்? அவர் யார்? (2)

நன்னெறி புகட்டி
நல்வழி காட்டி நன்மொழி பேசி
பண்பினைப் பழக்கி
பலரும் வியக்க பக்குவம் செய்பவர்
யார் அவர் யார்? (2)

அறத்தின் வடிவாய்
அகத்தைச் செதுக்கி அறிவை ஊட்டி
ஆற்றல் கூட்டி
அகிலம் புகழ ஆளுமை வளர்ப்பவர்
யார்? அவர் யார்? (2)

மாணவர்க் குள்ளே
மறைந்து கிடக்கும் திறன்களை எல்லாம்
திறம்பட வளர்த்து
திசைகள் எட்டும் தெரியச் செய்பவர்
யார்? அவர் யார்? (2) (பாறையை உடைத்து)

அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்

பின்னாடிப் போகுதா உலகம்?



பின்னாடிப் போகுதா உலகம்? - சாதிப்
பேரால பண்ணுறானே கலகம்! – நமக்கு
முன்னாடிப் பலபேர்கள் உழைத்து - வெட்டிய
முள்ளுமரம் நிற்கலாமா தழைத்து?

“பிறப்பால எல்லோரும் ஒண்ணு! - வேலைப்
பிரிவுதான் வெவ்வேறு கண்ணு” - என
அறத்தாலே எழுந்து நின்னு – வள்ளுவர்
அறைந்ததிலே போடுறானே மண்ணு! (பின்னாடி)

சாதிமதக் கேடெல்லாம் களைந்து -அருட்
சோதியில எல்லோரும் கலந்து - நந்
நீதிவழி வாழவேணும் இணைந்து – என்னும்
நெறியையெலாம் கொல்லுறானே தொலைந்து!

“நால்வர்ணப் பிரிவினைகள் புரட்டு – அதை
ஞாயம்செயும் சாத்திரங்கள் திருட்டு” – என
நாள்தோறும் சொன்னாரே பெரியார் – அந்த
ஞாயத்தை மிதிக்கிறானே சிறியன் (பின்னாடி)

“உழைக்கின்ற எல்லோரும் ஒன்று – நம்முள்
உயர்வில்லை தாழ்வில்லை” என்று – ஒன்றாய்
இணைத்தனரே தோழர்கள் நன்று – அதனை
எரியூட்டப் பார்க்குறானே இன்று

“தீண்டாமை ஒழிப்பெங்கள் உரிமை – நமக்குள்
தேவையடா என்றென்றும் ஒருமை” – என்றாரே
நீண்டாய்ந்த பீமாராவ்! அருமை!! – அதை
நெருப்பிலட முனைகிறானே எருமை (பின்னாடி)

எல்லாரும் வாருங்கள் எழுந்து – ‘சாதி
எமக்கில்லை என்றுரைப்போம்’ இணைந்து – ஞாய
நல்லேரால் மனங்களைநாம் உழுது – அன்பு
நற்பயிரை வளர்த்திடுவோம் மலர்ந்து


காக்கைச் சிறகினிலே, செப்டம்பர் 2013 பக்.31

காணமற்போகும் பொதுநிலங்கள்

பகுதி 1: பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

வெளியூரில் வேலை பார்க்கும் ஒருவர் ஓராண்டு கழித்து தனது ஊருக்குத் திரும்பினால் அங்குள்ள பொதுநிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்பார். அனைவருக்கும் பொதுவான அந்நிலங்கள் முழுமையகவோ, பகுதியாகவோ பணம், அரசியல், ஆள் ஆகிய பலங்களை உடையவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். களம், மேய்ச்சல் நிலம், காடு எனத் தொடங்கி ஓடை, குளம், மந்தை வரை பல்வேறு வடிவங்களில் இருக்கும் அப்பொதுநிலங்கள் அவ்வூரின் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கக் கூடியவை. அவற்றை மீட்பதற்காக அவர் முயன்றால் கிராமசபையோ, வருவாய்த்துறையோ அந்த ஆக்கிரமிப்பை சட்டப்படி அங்கீகரித்துவிட்டதாகக் கூறி சில ஆவணங்கள் காட்டப்படும். இத்தகு ஆக்கிரமிப்புகளையும் அதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களையும் சட்டத்திற்குப் புறம்பானவை, செல்லாதவை என்கிறது 2011 சனவரி 28 ஆம் நாள் செயபால் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்சூவும் கியான் சுதா மிசுராவும் வழங்கிய தீர்ப்பு.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டம் சாகீர் ரோகர் என்னும் சிற்றூரில் உள்ள பொதுநிலமான குளத்தை மூடி 6. 8 கெக்டேர் பரப்பளவில் செயபால் சிங் என்பவர் 2003ஆம் ஆண்டில் வீடொன்றைக் கட்டி இருக்கிறார். அந்த குளமானது கால்நடைகள் குடிப்பதற்காக மழைநீரைச் சேமிப்பதற்காகப் பயன்பட்டு வந்திருக்கிறது. செயபால் சிங், அந்நிலத்தை தன் முன்னோர்களும் அனுபவித்து வந்ததால் அந்நிலம் தனக்கே உரியது என உரிமைகொண்டாடி இருக்கிறார். அவரது ஆள் பலத்திற்கும் பணபலத்திற்கும் பணிந்த கிராமசபை அந்த அத்துமீறலைக் கண்டுகொள்ளவில்லை. சட்டத்திற்குப் புறம்பான அந்த அத்துமீறலை மறைத்து அந்நிலம் செயபாலுக்கே உரியது என உறுதிப்படுத்தும் ஆவணங்களை அரசுத் துறையில் உள்ள கீழ்மட்ட அலுவலர்கள் வழங்கி இருக்கிறார்கள். செயபால் சிங்கிற்கு எதிரியான தேவ் சிங் என்பவர் இந்த மோசடியைப் பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொணர்ந்தார். மாவட்ட ஆட்சியர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாறாக, அப்பொதுநிலத்திற்கு உரிய நிலமதிப்பை அரசுக்குச் செலுத்திவிட்டு செயபால் சிங்கே நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என ஆணை இட்டார். 2007ஆம் ஆண்டில் தேவ் சிங் ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார். ஆணையர் பொதுநில ஆக்கிரமிப்பை உறுதிசெய்து மாவட்ட ஆட்சியரின் ஆணையை நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து, செயபால் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2010 ஆம் ஆண்டில் அந்நீதிமன்றம் அம்மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. பின்னர் செயபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அம்மேல்முறையீட்டை உசாவிய உச்சமன்ற நீதியரசர்கள் வழங்கிய தமது தீர்ப்பில், அரசு அலுவலர்களும் கிராமசபையும் செயபால் சிங்கோடு சேர்ந்து சதிசெய்து ஊர்ப் பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினர். மேலும் அந்நிலத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்துத் தள்ளும்படி முந்தைய இரண்டு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி ஆணையிட்டனர். நிலமற்ற தொழிலாளர்களுக்கோ அல்லது பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கோ பழங்குடியினருக்கோ குத்தகைக்கு விடப்பட்ட பொதுநிலத்தில் அல்லது சிற்றூரினருக்காக பள்ளி அல்லது மருத்துவமனை என்பன போன்றவை உள்ள பொதுநிலத்தில் மட்டுமே சுற்றுச்சுவர் கட்ட அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். அதேபோல தனியாருக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கிராமசபைகள் தமது நிலத்தை விற்க மாநில அரசால் வழங்கப்பட்ட அரசு ஆணைகள் அனைத்தும் செல்லாதவை என அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளாக, நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான குளங்கள் பேராசைக்காரகளால் மண்ணால் மூடப்பட்டு உள்ளன; அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சிற்றூர் குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையும் சில வணிகர்களுக்கு கிராம சபையாலோ அரசு அலுவலர்களாலோ மிக்குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டு வருகின்றன என்றெல்லாம் நீதியரசர்கள் அத்தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைச் செயலாளர்களும் தம் மாநிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுநிலங்களைப் பற்றிய அறிக்கையை அவ்வாண்டின் மே திங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர். தலைமைச் செயலாளர்கள் திரட்டப்பட்ட தகவல்களை வழக்கம்போல குறிப்பிட்ட நாளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பர். ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுநிலங்கள் அனைத்தும் இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மீட்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் பொதுநிலங்கள் களவு போய்க்கொண்டே இருக்கின்றன. தேசிய மாதிரி அளவெடுப்பு அமைப்பின் (National Sample Survey Organisation) கணக்கின்படி இந்தியா நாட்டின் மொத்தப் பரப்பளவில் 15 விழுக்காடாக உள்ள பொதுநிலம் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் 1.9 விழுக்காடு என்னும் விகிதத்தில் குறைந்துகொண்டே வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 2010 ஆம் ஆண்டுவரை 834,000 கெக்டேர் பரப்பளவு பொதுநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவிக்கிறது.

இந்நிலங்களில் மிகக்குறைந்த அளவு இடங்களையே இடம்பெயர்ந்து வாழும் ஏழைகள், வீடற்றோர் உள்ளிட்ட விளிம்புநிலையினர் தமது இருத்தலுக்காக ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற ஆணை இடும்பொழுதும் பொதுநிலங்களை அரசு முறையாகக் காக்கிறது என்னும் தோற்றத்தை உருவாக்க அரசு விழையும்பொழுதும் இந்த விளிம்புநிலையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களே அரசு இயந்திரத்தால் கைப்பற்றப்படுகின்றன. மற்ற ஆக்கிரமிப்பாளர்களின் கையில் இருக்கும் பொதுநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்நிலையில் அந்தந்த ஊரின் பொறுப்புடைய மக்கள்தான் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகு முயற்சியில் ஈடுபடும்பொழுது ஆள்பலம், அரசியல்பலம், பணபலம் ஆகியவற்றின துணையை உடைய ஆக்கிரமிப்பாளர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்தான். ஆனால், யாரேனும் பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

திருப்புமுனை. செப்டம்பர் 2013

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...