ஆகஸ்ட் 6

கிரோசிமா நகரைச் சூழ்ந்த அணுமேகம்

சமூக முகத்தின் பருக்களான
நான்களின் சேர்க்கையால்
பிண்ட மனிதர்களையே பெற்றுப்போடும்
கிரோசிமாவில்
வெடித்த குண்டில் பிறந்த நான்
இறுமாப்பில்லை
எதிர்வரும் அழிவின் எச்சரிக்கை
இயற்கைக் காம்பஸ் கிழித்த
எட்டாவது வட்டத்தின் வழியே
சூரியப்புள்ளியைச் சுற்றிவருகிற
நெப்டியூன்  கிரகத்தை நிரடிப் பார்க்கும்
அறிவியற் கையின் அழுகிய விரல்
செத்துப் பிறந்த
சோக நினைவின் சின்னம்
பூமியின் சுழற்சியில் பிறந்து மறையும்
நாற்றூசியில்லை
சுவஸ்திக் கொடியால்
கழுகும் கரடியும் சிங்கமும்
நரிகளாய் மாறிய நாளின்
நினைவுச் சின்னம்.
நான்
மஞ்சள் சப்பானியர்களின்
மரணத்தை மட்டுமே குறிக்கும் குறியீடில்லை
கல்பாக்கத்தில் காலூன்றி
கூடங்குளத்தில் குதித்திருக்கும்
கொலைக்களங்களின் முகவரி

(1989 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உரைவீச்சு)

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...