காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்

ராசம் கிருட்டிணன்

மாமியார்மருமகள் சண்டையையும் அண்ணன்தங்கை பாசத்தையும் கணவனைத் திருத்தும் மனைவியின் பொறுமையையும் திரும்பத் திரும்ப எழுதுகிறவர்களாகவே பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் எண்ணிக்கொண்டிருந்த எனது பதின்பருவத்தில் சிறுகதை எழுத்தாளரும் நண்பருமான பீர்முகமது அப்பாவின் வழியாக ராம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகமானது. 1984 அல்லது 1985ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒருங்கிணைத்திருந்த புதினம் படைத்தல்என்னும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க இருந்த அவர், அதற்கான முன்னாயத்தமாக சில புதினங்களைப் படித்துக்கொண்டு இருந்தார். அவருக்குக் கிடைக்காத புதினங்கள் சிலவற்றைத் தேடியெடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் வேண்டினார். அவ்வாறு அவர் கொடுத்த பட்டியலின் வழியாகத்தான் ராம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகம் ஆனது.  பட்டியலில் இருந்த பத்து புதின எழுத்தாளர்களில் இவர் மட்டுமே பெண் எழுத்தாளராக இருந்தார். இதுவே, ‘அவருடைய புதினத்தில் அப்படி என்ன இருக்கிறது?’ என்னும் ஆர்வத்தைக் கிளற, அவருடையகூட்டுக்குஞ்சுகள்புதினத்தை நூலகத்தில் இருந்து தேடியெடுத்துப் படித்தேன். பருவ இதழ்களில் பெண் எழுத்தாளர்கள் தொடராக எழுதிக்கொண்டு இருந்த நெடுங்கதைகளில் இருத்து அப்புதினம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. சிறந்த எழுத்துகள் என அதுவரை எனக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்த படைப்புகளில் இல்லாத வாழ்க்கையையும் மக்களையும் களத்தையும் அப்புதினம் பேசியது. அதன் பின்னர் நூலகங்களில் கிடைத்த அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன்ஓரிரு சிறுகதைத் தொகுப்புகளும் பல புதினங்களும் கிடைத்தன. அவற்றின் வழியாக அறிமுகமான மாந்தர்கள், நாளும் என்னுடைய வாழ்வில் நான் சந்திக்கும் மாந்தர்களைக் கவனிக்கும்படி தூண்டினார்கள். நாளாக நாளாக அக்கதைகள் வெறும் கதைகளை மட்டுமல்ல, அரசியலையும் பேசுகின்றன என்பது புரிபடத் தொடங்கியது. அவருடைய படைப்புகளைப் பட்டியல்போட்டு தேடிப்படிக்கத் தொடங்கினேன்.

அவற்றுள் சிலவற்றைப் பற்றி, அப்பொழுது பணி ஓய்வுபெற்று கம்பத்தில் வந்து குடியேறிய தமிழ்நாடு பொதுநூலக இயக்குநர் வே. தில்லைநாயகத்திடம் (வேதி) அவ்வப்பொழுது கலந்துரையாடுவேன். நூலகத்தில் கிடைக்காத சில நூல்களை அவர் தன்னுடைய நூலகத்தில் இருந்து எடுத்துக்கொடுத்தார். அவ்வாறுதான் கலைமகளில் ராம் கிருட்டிணன் எழுதிய குறிஞ்சித்தேன்தொடரின் கட்டுமத் தொகுப்பு அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அவர் ஒவ்வொரு முறை சென்னை சென்று திரும்பும்பொழுதும் ராம் கிருட்டிணனின் அண்மைப் படைப்புகளை வாங்கிவந்து கொடுத்தார்அவ்வாறுதான் ராம் கிருட்டிணனின் அல்புனைவு (Non Fiction) ஆக்கங்கள் எனக்கு அறிமுகம் ஆயினகாலந்தோறும் பெண், காலந்தோறும் பெண்மை, யாதுமாகி ஆகிய அல்புனைவு நூல்கள் சுடச்சுட வேதியிடம் இருந்து எனக்குக் கிடைத்தன. புதினங்களில் உள்ளுறையாகப் பொதியப்பட்டு இருந்த பெண்ணியச் சிந்தனைகள் இந்நூல்களில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தன. பெரியாரது பொழிவுகளைப் படித்து அறிந்திருந்த பெண்ணியக் கருத்துகளை இந்நூல்கள் சமூக அறிவியல் அடிப்படையில் வலுப்படுத்தினஇந்நிலையில் நூல் பதிப்பு, பொது நூலகங்களுக்கு நூல் வாங்குதல் தொடர்பாக ஒருநாள் வேதியுடன் கலந்துரையாடியபொழுது அவைபற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ளவரும் பத்தாண்டுகளில் தமிழ்ப்புத்தக வெளியீடுஎன்னும் நூலைக் கொடுத்தார்இந்திய தேசிய நூல் அறக்கட்டளையின் (National Book Trust, India) சார்பில் எழுத்தாளர் ஆதவன் சுந்தரம் நூல் பதிப்பு பற்றி ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு அந்நூல்அதில் எழுத்தாளர், பதிப்பாளர், நூல் விற்பனையாளர், பொது நூலக அலுவலர், படிக்குநர் என நூல் ஆக்கம் தொடங்கி நுகர்வு வரை உள்ள வழங்கற்பாதையின் ஒவ்வொரு கண்ணியிலும் இருப்பவர்கள் தம் கருத்துகளைப் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு அது. அதில் ராம் கிருட்டிணனும் வேதியும் தத்தம் நிலையில் இருந்து எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ராம் கிருட்டிணனின் கட்டுரை பொதுநூலகத் துறையில் வேதி அறிமுகம் செய்திருந்த 16பக்கங்களைக் கொண்ட ஒவ்வொரு மடிப்பிற்கும் இவ்வளவு தொகை என்னும் விலைக் கொள்கையையும் ஓராண்டில் ஒரு நூலில் 500 படிகளே பொது நூலகத்திற்கு வாங்கப்படும் என்னும் கொள்முதல் கொள்கையையும் விமர்சிப்பதாக இருந்ததுவேதியின் கட்டுரையோ, ‘பதிப்பாளருக்கு நூல் ஒரு விற்பனைப் பொருள். நூலகத்துறை அப்பொருளை வாங்கும் நிறுவனம். எனவே பொருளுக்கு ஏற்ற விலை.’ என எடுத்துரைத்தது. அந்நூலைப் படித்த பின்னர் வேதியுடன் நிகழ்த்திய உரையாடலில், அக்கருத்தரங்கில் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் அரங்கில் நடந்த அனல் பறந்த கருத்தாடல்களைப் பற்றியும்  இறுதிவரை ராம் கிருட்டிணன் தன்னுடைய கருத்தையே வலியுறுத்தி, மாற்றுக் கருத்தை ஏற்கவே இல்லை என்பதும் தெரிந்தது. இந்நிகழ்வு ராம் கிருட்டிணன் ஒரு பிடிவாதக்காரராக இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுடைய மனதில் விதைத்தது.

சில ஆண்டுகள் கழித்து, நீல. பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதியிலே புதினம் வெளிவந்தது. அப்புதினம் முழுக்க முழுக்க புனைவு என அவர் எவ்வளவுதான் கூறியிருந்தாலும் தமிழிலக்கிய உலகம் அதில் வரும் கதைமாந்தர் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளரைச் சுட்டுகின்றனர் என நம்பியது. இந்த எழுத்தாளர்தான் இந்தக் கதைமாந்தராக வருகிறார் என பட்டியல்களும் வெளியிடப்பட்டனநானும் நந்தன்ஶ்ரீதர் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் அப்புதினத்தின் கதைமாந்தர்கள் சுட்டும் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டோம்அதில் சுற்றுலாச் செல்லும் எழுத்தாளர் குழுவில் இடம்பெறும் வயதான பெண் எழுத்தாளரான கதைமாந்தர் ராசம் கிருட்டிணனையே சுட்டக்கூடும் என எண்ணினோம்ஆண்களை வெறுக்கிற பெண்ணியலாளராக, சண்டைக்காரராக அவர் இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுள் அக்கதை உருவாக்கியது. அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பும் நேசமும் அவரின் கற்பனைதானோ என்னும் ஐயத்தை இவ்விரு செய்திகளும் மனதின் ஓரத்தில் விதைத்தன. இருப்பினும் ராம் கிருட்டிணனின் புதினங்களையும் அல்புதினங்களையும் கிடைக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன்

எனது கல்லூரிக் கல்வி முடிந்த பின்னர், 1992ஆம் ஆண்டில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. திருநெல்வேலியில் அப்பணியை மேற்கொண்டேன். அப்பொழுது அவ்வூருக்கு வருகிற இலக்கியவாணர்களை  நேர்காணல் செய்து, அவ்விதழின் சனிக்கிழமை மலரில் வெளியிடும் வழக்கத்தைத் தொடங்கினேன்வரவேற்பையும் வசவையும் ஒரே நேரத்தில் அம்முயற்சி எனக்கு பெற்றுக்கொடுத்ததுஅப்பொழுது நெல்லை மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பொறுப்பேற்ற முனைவர் வசந்திதேவி பாடப்புத்தகங்களுக்கும் வகுப்பறைக்கும் அப்பால் இருக்கும் உலகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றாக நெல்லையில் இராமகிருட்டிண மடத்தின் கீழ் இயங்கும் சாரதா பெண்கள் கல்லூரியில் பெண்ணியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்பேராசிரியர்கள் சேசுதாசனும் கணபதிராமனும் அக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்கள்அக்கருத்தரங்கிற்கு ராம் கிருட்டிணன் வர இருப்பதாக கணபதிராமன் தெரிவித்தார்ராம் கிருட்டிணனுடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யுமாறு கணபதிராமனிடம் வேண்டினேன்அவரும் ஒப்புக்கொண்டார்

கருத்தரங்கின் முதல் நாள் மாலையில் ராம் கிருட்டிணனைக் காண விழைந்தேன். சாரதா கல்லூரி, நெல்லையின் புகழ்பெற்ற விடுதிகள், கருந்தரங்கில் பங்கேற்ற பிற சொற்பொழிவாளர்கள் தங்கிருந்த அரசினர் விருந்தினர் மாளிகை என எங்கும் அவரைக் காணவில்லை. ஒருங்கிணைப்பாளர்களான சேசுதாசனுக்கும் கணபதிராமனுக்குமே அவர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரியவில்லை.  ‘சென்னைக்கு திரும்பிவிட்டாரா?’ என கண்பதிராமனிடம் வினவினேன். ‘இல்லை. இன்றைக்கு முழுக்க கருத்தரங்கில் பார்வையாளராகத்தான் இருந்தார். நாளைக்கு மதியம்தான் அவர் பேசுகிறார். எனவே இங்குதான் எங்காவது அவர் தங்கியிருக்க வேண்டும்என்றார்தேரோடும் வீதியிலே புதினத்தினத்தில் சுற்றுலாவின்பொழுது தங்குமிடம் குறித்த அவருடைய எதிர்வினை பற்றிய பதிவுதான் அவரைப் பற்றி சண்டைக்காரர் என்னும் படிமத்தை எனக்குள் உருவாக்கி இருந்ததுபல்கலைக் கழகத்தில் யாருக்கும் அவர் எங்கு தங்கியிருக்கிறார் எனத் தெரியாததால் இரவு ஒன்பது மணிக்கு துணைவேந்தரின் இல்லத்திற்கு தொலைபேசினேன். துணைவேந்தர் பேசினார்ராம் கிருட்டிணன் அவர் வீட்டில் தாங்கியிருப்பதாகவும் காலையில் 8.30 மணிக்கு வந்தால் அரை மணிநேரம் நேர்காணலுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியும் எனவும் கூறினார்.

மறுநாள், 1992 ஆகத்து 23ஆம் நாள் காலை 8.30.மணிக்கு பாளையங்கோட்டை மகாராச நகரில் இருந்த துணைவேந்தரின் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்தினேன். ராம் கிருட்டிணனைப் பற்றி அவர் பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுக்கும் பெண்ணியலாளர் என்னும் படிமங்கள் ஒரு பக்கமும் மாந்த குலத்தின் மீது அன்பும் நேயமும் கொண்டவர், உழைக்கும் மக்களின் மீது கரிசனை உடையவர் என அவருடைய படைப்புகளைப் படித்ததால் உருவான படிமங்கள் மறுபக்கமும் எனது மனதிற்குள் ஊடாடிக்கொண்டு இருந்தன. அழைப்புமணி ஓசையைக் கேட்டு துணைவேந்தர் வந்து கதவைத் திறந்தார். வரவேற்பறையில் காத்திருக்குமாறும் ராம் கிருட்டிணன் சில மணித்துளிகளில் வந்துவிடுவார் என்றும் கூறிச் சென்றார். ஐந்து மணித்துளிக்குப் பின்னர் ராம் கிருட்டிணன் அந்த அறைக்குள் புன்னகையோடு நுழைந்தார். ‘கருத்தரங்கத்திற்கு கிளம்ப வேண்டும். தலைமுடியைச் சீவிக்கொண்டு உங்களோடு பேசலாம் இல்லையா?’ எனக் கேட்டார்.  ‘பேசலாம்எனக் கூறிவிட்டு, அன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் திருக்குறளைத் திருத்த வேண்டும் என்றும் பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்ததில் இருந்து உரையாடலைத் தொடங்கினேன்அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தலைமுடியை அவசரமாக ஒழுங்கு செய்தார். திருக்குறளை ஏன் திருத்த வேண்டும் என விளக்கத் தொடங்கினார்.  ‘ஒரு படைப்பை அதன் காலத்திலும் இடத்திலும் வைத்தல்லவா பார்க்க வேண்டும். இன்றைய பெண்ணியப் பார்வையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் தேடுவது எப்படிச் சரி?’ என வினவ, ‘அப்படியானால் திருக்குறளை ஏன் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற நூல் எனக் கூறுகிறீர்கள்? அப்படிக் கூறாதீர்கள்என்றார். பாரதிதான் பெண்விடுதலைப் பேராளி என்றும் பாரதிதாசன் கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலாஎன பெண்ணை நுகர்பொருளாகவே பார்த்தவர் என்றும் வாதிட்டார். எனக்கு அக்கருத்து உடன்பாடாக இல்லை. உரையாடல் மெல்ல மெல்ல விவாதமாக உருமாறிக்கொண்டு இருந்ததுதேசிய நூல் அறக்கட்டளையின் கருத்தரங்கம் பற்றி பேச்சு திரும்பியது. அல்புனைவு நூல் ஒவ்வொன்றின் இறுதியிலும் சான்றடைவும் சொல்லடைவும்  இடம்பெற வேண்டும் என்பன போன்ற நூலாக்க நெறிமுறைகள் பற்றிய வேதியின் கருத்துகள் பலவற்றோடு அவர் உடன்பட்டார்குறிஞ்சித்தேன் புதினத்தை கலைமகளில் தொடராக எழுதியபொழுது அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் தான் அடிக்குறிப்பாக சான்றுகளை எழுதியதையும் புதினத் தொடருக்கு சான்றடைவு கொடுக்கும் மரபு இல்லை எனக் கூறி கி.வா.சகந்நாதன் அதனை நீக்கிவிட்டதாகவும் கூறி, புனைவிலக்கியத்திற்கே சான்றடைவு கொடுக்க முடியும் என்றால் அல்புனைவிற்கு கொடுக்க முடியாதா என வினவினார். அதே வேளையில் பொது நூலகத்துறையின் விலைக் கொள்கையையும் கொள்முதல் கொள்கையையும் கடுமையாக விமர்சித்தார்

இந்த விவாதம் நடந்துகொண்டு இருக்கும்பொழுதே துணைவேந்தர் வசந்திதேவியும் அ.மங்கையும் கருத்தரங்கிற்குச் செல்ல ஆயத்தமாகி அங்கே வந்தனர். எங்கள் பேச்சு அறுபட்டது. .மங்கையை ராம் கிருட்டிணன் அறிமுகம் செய்துவைத்தார்அதற்குள் துணைவேந்தரின் மகிழுந்து வீட்டிற்கு வெளியே இருந்து ஒலி எழுப்பியது. கடிகாரத்தைப் பார்த்தேன் 9.30 ஆகியிருந்தது. துணைவேந்தர், ‘கிளம்பலாமா?’ என்பதைப் போல ராம் கிருட்டிணனின் முகத்தைப் பார்த்தார்.  “நான் மதியம்தானே பேச வேண்டும். நீங்கள் போய் இறங்கிக்கொண்டு வண்டியை அனுப்புங்கள். நான் இவரிடம் இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்என்றார்அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள். ‘ஒரு நிமிடம் இருங்கள். வந்துவிடுகிறேன்எனக் கூறி இராம் கிருட்டிணன் வீட்டிற்கு உள்ளே எழுந்து சென்றார்நான் என்னுடைய வினாநிரலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் இரண்டு கோப்பைகளில் தேனீரோடு வந்த அவர், ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினார்தேனீரை அருந்திக்கொண்டே எங்கள் உரையாடலை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்தேசிய நூல் அறக்கட்டளை நூலும் அக்கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலும் எனக்கு எப்படித் தெரியும் என வினவினார். வேதி தெரிவித்தார் என்றதும் அவரைப் பற்றி நலம் விசாரித்தார். அவரது தொலைபேசி எண்ணையும் முகவரியையும் பெற்றுக்கொண்டார். சென்னைக்குச் சென்றதும் அவருடன் பேசுவதாகத் தெரிவித்தார். பேச்சு மீண்டும் இலக்கியம், பெண்ணியம் எனத் திரும்பியதுஆறுவகையான பெண்ணியங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். அதில் சோசலிச பெண்ணியத்தின் தேவையை எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்உரையாடல் மெல்ல மெல்ல வகுப்பறையாக மாறத் தொடங்கியதுஐயங்களுக்கு பொறுமையாகவும் புரியும்படியும் விளக்கினார். துணைவேந்தரின் மகிழுந்து திரும்பி வந்து ஒலி எழுப்பியது. நான் உரையாடலை முடித்துக்கொண்டு, என்னிடம் இருந்த கலைமகள் இதழில் இருந்து கத்தரித்து எடுத்து கட்டுமம் செய்யப்பட்டு இருந்த குறிஞ்சித்தேன் புதினத்தைக் கொடுத்து அவரின் கையொப்பத்தை இட்டுத்தரும்படி வேண்டினேன். பழைய இதழைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தார். தாள்களை இங்கும் அங்கும் புரட்டி, தடவிப் பார்த்தார். அதிலிருந்த ஓவியங்களை வரைய ஓவியர் ரெஸாக் மெனக்கெட்டதை நினைவுகூர்ந்து பாராட்டினார்.   பின்னர் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்கடிகாரம் மணி 10.30 என்றது. நான் கிளம்பினேன்மனதின் ஒரு மூலையில் இருந்த பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுப்பவர் என அவரைப் பற்றி உருவாகியிருந்த படிமங்கள் முற்றிலும் கலைந்து இருந்தன.

அலுவலகத்திற்கு வந்து நேர்காணலை நீண்ட கட்டுரையாக எழுதிக் கொடுத்தேன். துணையாசிரியர் கபிலன் அதில் பெரும்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதிக்கு, “திருக்குறளைத் திருத்த வேண்டும்எனப் பெயரிட்டு அடுத்த சனிக்கிழமை வெளிவந்த மலரில் வெளியிட்டார்அதன் ஒருபடியை ராம் கிருட்டிணனுக்கு அனுப்பி வைத்தேன்அதன் பின்னர் அவரை நேரில் சந்திக்கவே இல்லை.

அவருடைய படைப்புகளை தொடராகவும் நூலாகவும் படித்துக்கொண்டு இருந்தேன்.  2006ஆம் ஆண்டில் ஆவணப்பட இயக்குநரும் நண்பருமான கெளதம், உப்பளத் தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களை ஆவணப்படமாக எடுக்க ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார். அவரிடம் கரிப்புமணிகள் புதினத்தை அறிமுகம் செய்து, ராம் கிருட்டிணனைச் சென்று சந்தியுங்கள் எனக் கூறி என்னிடம் இருந்த அவருடைய முகவரியைக் கொடுத்தேன்ஓரிரு நாள்கள் கழித்து தொலைபேசியில் அழைத்த கெளதம் அந்த முகவரியில் ராம் கிருட்டிணன் இல்லை எனத் தெரிவித்தார்.   சில நாள்கள் கழித்து அவர் உறவினர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார், முதியோர் இல்லத்தில் இருக்கிறார், பேரூர் மருத்துவமனையில் இருக்கிறார் எனத் தகவல்கள் கிடைத்தனமுதியோர் இல்லத்தில் தங்க அவர் விரும்பவில்லை; எனவே மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.


கடந்த செப்டம்பர் திங்களில் மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அண்மையில் வெளிவந்த அவரதுகாலம்என்னும் நூலை வாங்கினேன்பல நாள்கள் கழித்து ஓரிரவில் அதனைப் படித்து முடித்தேன்கண்ணிவிலகாத சங்கிலியைப் போல ஒன்றையடுத்து ஒன்று என சீராகச்செல்லும் ராம் கிருட்டிணனின் எழுத்துநடை அந்த நூலில் இல்லை; துண்டுதுண்டான நினைவுச் சிதறலாக அந்நூல் இருந்தது. இருப்பினும் அவருக்கே உரிய நறுக்குத் தெறித்தாற் போன்ற கருத்துவெடிப்புகளும் அன்பும் நேசமும் அதில் விரவிக்கிடந்தனஅவற்றை அசைபோட்டவாறே படுக்கைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் இணையத்தைத் திறந்தபொழுது ராம் கிருட்டிணன் மறைந்தார் என்னும் செய்திதான் கண்ணில் முதலிற்பட்டது.  “காலத்தின் முடிச்சு யாராலும் அவிழ்க்க முடியாதது. கடிகார முள் சுற்றுவதுபோல், காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்என அந்நூலின் நிறைவில் அவர் குறிப்பிட்டதுதான் நினைவில் மிதந்தது

(2014 திசம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

விருது வேண்டுமா விருது!

2014 நவம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை

சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்பொழுது நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அலுவலர் ஒருவர் அதில் கையொப்பமிட்டு இருந்தார்.  அச்சிடப்பட்டு இருந்த அக்கடிதம், அந்நிறுவனம் இச்சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் அளப்பரிய பணிகளைப் பாராட்டி மூன்று திங்களுக்குப் பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் விருது வழங்க இருப்பதை பெருமகிழ்வோடு அறிவித்தது. மேலும் அக்கடிதம் கிடைத்ததும் குறிப்பிட்ட தொலைபேசி எண் ஒன்றில் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசும்படி அது தெரிவித்தது.  ‘நிலமற்ற ஏழையரின் நிலவுரிமைக்காக வடஇந்தியாவில் போரடிக்கொண்டு இருக்கும் காந்திய இயக்கம் ஒன்றின் பயிற்சி நடுவமான அந்நிறுவனத்தின் எந்த அளப்பரிய பணியை இந்த தமிழலுவலர் அறிந்தார்? எப்படி அறிந்தார்?’ என அறியும் ஆவல் உந்த, கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை அழுத்தினேன்.  மறுமுனையில் அந்த தமிழலுவலரின் குரல் ஒலிக்க உரையாடல் தொடங்கியது.

ஐயா, உங்க கையொப்பத்தோட ஒரு கடிதம் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்குது.”
நீங்க அந்த நிறுவனத்தோட பொறுப்பாளரா?”
ஆமா
உங்க நிறுவனத்துக்கு விருது கொடுக்க முடிவுசெஞ்சிருக்கோம். மூணு மாதம் கழிச்சு சென்னயில நடக்கிற விழாவில இந்த விருத கொடுப்போம். விழா பாரிமுனையில இருக்கிற ஏ.சி. அரங்கத்துள நடக்கும். அதுல ஒரு பெரிய இசை அமைப்பாளரோட இன்னிசைக் கச்சேரி இருக்கு. தமிழ்நாட்டோட பல பகுதியில இருக்கிற உங்கள மாதிரி பெரியவங்க நிறயப் பேரு வருவாங்க. அப்ப நீங்க விருது வாங்கினா உங்களோட புகழும் உங்க நிறுவனத்தோட புகழும் தமிழகம் முழுக்கப் பரவும். இல்லீங்களா?” தமிழலுவலர் விற்பனைப் பிரதிநிதிக்கே உரிய திறனோடுவிருது வலையை வீசத்தொடங்கினார்.

அவரது இலக்கு என்ன என்பதை அறியும் ஆவல் என்னுள் ஊற்றெடுக்க, “இது நீங்க தனியாளா கொடுக்கிற விருதா, இல்லை  எந்த அமைப்பாவது கொடுக்குதா?” என தூண்டிற் புழுவொன்றைத் தூக்கிப்போட்டேன்.

இல்லஇல்ல... பதிவுபெற்ற அமைப்பு ஒண்ணுதான் இந்த விருத தருது. அதுக்கு நான்  தலைவரா இருக்கேன். அன்னைக்கு உங்கள மாதிரி 300 பேருக்கு விருது கொடுக்கப்போறோம்நீங்க மதுர இல்லையா? அப்ப காலைல வைகைல கிளம்பி வந்தா விருது வாங்கிட்டு விழா முடிஞ்சு பாண்டியன்ல ஊருக்குத் திரும்பிரலாம்உங்க வேல கெடக்கூடாது பாருங்க. அதுனாலதான் இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று என அந்தத் தூண்டிற் புழுவைப் பிடித்து எனக்கு திருப்பிப் போட்டார். “அப்படியா!” என்றேன். இந்த மீன் சீக்கிரம் சிக்கிவிடும் என நினைத்தார் போலும். உரையாடலைத் தொடர்ந்தார்.

ஆமாங்க ஐயாஉங்க முழுவுருவப் புகைப்படத்த மறக்காம அனுப்பி வைச்சுருங்க. அத விருதுக் கேடயத்துல சிலை மாதிரி நிறுத்தி வைக்கனும். அப்புறம் சென்னயில 300 பேருக்கு விருது. ஏசி அரங்கு. இன்னிசைக் கச்சேரி. இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். அதுனால நீங்க உங்க பங்களிப்பா ஒரு மூவாயிரம் ரூபாயும் அந்த புகைப்படத்தோட அனுப்பி வைச்சிங்கன்னா நல்லாயிருக்கும்.”
முதல்ல நிறுவனத்துக்கு விருதுன்னு சொன்னிங்க. இப்ப எனக்கு விருதுன்னு சொல்லிறீங்க
உங்களுக்குன்னா என்னா, உங்க நிறுவனத்துக்குன்னா என்னா. எல்லாம் ஒண்ணுதான.”
எங்க நிறுவனத்த உங்களுக்கு எப்படித் தெரியும்?”
டெலிபோன் டைரக்டரில பாத்தேன்

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. உரையாடலைத் துண்டித்தேன்சில திங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பல அலுவலங்களில் அந்த தமிழலுவலரிடம் வாங்கிய விருதுக் கேடயங்கள் காட்சி அளித்தன.

அதன் பின்னர், இதுபோன்றவிருதுகள் பற்றி பலரிடம் உசாவியபொழுது, அவற்றுள் பலவற்றின் பின்னணிக் கதைகள் இதனைப்போலவே இருந்தனஇவ்வாறுவிருது விற்றல்நிகழ்வின் நோக்கங்களாக விருது வழங்கும் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதும் அதன் நிறுவனருக்கு புகழொளி கூட்டுவதாகவுமே இருக்கின்றன. தகுதியற்று இவர்கள் விற்கும் விருதுகளை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் அதுநாள் வரை கண்டுகொள்ளப்படாத தகுதியுடையோர் சிலரும் இந்த விருதுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்

புகழ்பெறாதவர்கள் புகழ்பெறும் நோக்கத்தோடு புகழில்லாதவர்களுக்கு விற்கும் விருதுகள் ஒருபுறம் என்றால் புகழ்பெற்றவர்கள் புகழ்பெற்ற நிறுவனத்தின் வழியாக புகழ்பெற்றவர்களுக்கு வழங்கும் விருதுகள் மற்றொரு வகை. இந்தபுகழ் விருதுகளின் நோக்கங்கள் வழங்குபவரைப் பொருத்து மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.   தன்னை தானே விளம்பரம் செய்துகொள்ளும் வித்தையைக் கற்ற ஒருவர் கொடுக்கும் விருதின் நோக்கம் தன்னை மேலும் விளம்பரம் செய்துகொள்வதாக இருக்கிறது.   பரம்பரைச் செல்வந்தர்கள் சிலரும் திடீர் செல்வந்தர்கள் பலரும் தகுதியுடைய சிலருக்கு தத்தம் நிறுவனங்களின் வழியோ, தாம் புரவலராக இருக்கும் நிறுவனங்கள் வழியோவிருதுகளை வழங்கி தம் மீது வீசப்படும் அல்லது வீசப்படக் காத்திருக்கும் விமர்சனக் கணைகளை மறைக்க அல்லது மறக்கவைக்க முனைகிறார்கள்முற்போக்குப் பார்வை, அறநோக்கு வாழ்க்கை என தம் படைப்புகளின் வழியே உரத்து முழங்கிய தகுதியுடைய சிலர், இந்த தகுதியற்றவர்களிடம் விருதுகள் பெறும்பொழுது, தம்நிலையில் இருந்து அவலவீரர்களாக வீழ்ந்துவிடுகிறார்கள்.

தனியார் விற்கும் அல்லது வழங்கும் இத்தகு விருதுகளின் கதை இதுவென்றால்,  இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஇலக்கியக் கழகம்’ (சாகித்திய அகாதெமி) 1955ஆம் ஆண்டு முதல், இடையில் ஐந்தாண்டுகள் நீங்கலாக, ஒவ்வோராண்டும் விருது வழங்குகிறது. அவ்விருதை வழங்கத் தொடங்கிய நாளில் இருந்தே தொடங்கிய முணுமுணுப்புகள் மெல்ல மெல்ல வளர்ந்து, கவிஞர் தமிழ்நாடன், “சாகித்திய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள்என்னும் சிற்றேடு  ஒன்றினை எழுதும் அளவிற்கு வளர்ந்ததுதகுதியுடையவர்களுக்கு காலம் கடந்து வழங்கப்பட்டது, தகுதியுடையவரின் தகுதியற்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது என இவ்விருது பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.   தமிழ்மொழியின் ஞானபீட விருது என்று புகழப்பட்ட தமிழ் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது வெகு சிலருக்கே வழங்கப்பட்டு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. அவ்விருது வழங்கப்பட்ட பொழுது பல கண்டனங்களும் கருத்தாடல்களும் முகிழ்த்தனதமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவதற்கு உரிய தகுதிகளைவிட, அரசியல் தகுதிகள் அதிகம் தேவைப்படுவதாக பேச்சுகள் நிலவுகின்றனஇருப்பினும் படைப்பாளர்களுக்கு விருதுகொடுத்துப் பாராட்டுவதற்குத் தகுதியுடையனவாக இந்த அமைப்புகள் இருக்கின்றன என இலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறதுஎனவேதான், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவ்வமைப்புகள் ஓவ்வோராண்டும் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அறிவித்ததும் அத்தேர்வு பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நிகழ்கின்றனபாராட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால்விளம்பர விருதுகள் பற்றி இதுபோன்ற கருத்துரைகளோ, கண்டனங்களோ பொதுவெளியில் உரைக்கப்படுவது இல்லைஇதனால் இத்தகு விருதுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு இருக்கிறது.  விருது வழங்கியவர்கள் தம்மை தமிழ்க்காவலராகக் கருதிக்கொள்கிறார்கள். தகுதியுடைய தமிழறிஞர்கள் சிலர் இவர்களுக்குத் துணையாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்தகுதியுடைய படைப்பாளரை ஏற்று, பாராட்டி, புகழந்து, கொண்டாடி ஊக்குவிக்க தகுதியுடையவர்கள் தவறும்வரை இந்த அவலங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.  

இவைகளுக்கு அப்பால்கலை - இலக்கிய மேம்பாட்டில் உண்மையான அக்கறையும் படைப்பாளிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதில் தன்னலமற்ற விருப்பமும் உடைய அமைப்புகள் சில இல்லாமற் போய்விடவில்லைஅந்த அமைப்புகள் நல்லறிஞர்கள் உதவியோடு விருதிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராட்டுகின்றன. அதனால் அவ்வமைப்புகள் தம்முடைய நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றனஅதனால் அவை அறிவிக்கும் விருதுகளுக்கு மதிப்பும் அதனைப் பெறுபவர்களுக்குப் பெருமிதமும் ஏற்படுகின்றன.   இத்தகு அமைப்புகளின் எண்ணிக்கை பெருகுவதும் அவற்றின் தரம் ஆண்டிற்கு ஆண்டு உயர்வதும் இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.  


விருது பெறுவதற்கான தகுதி தனக்கு இருந்தும், தகுதியுடைய அமைப்பு விருதுகொடுக்க முன்வந்தும் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த சான்றோர்கள் சிலரும் தமிழிலக்கிய உலகில் இருந்தனர்இருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பாக இருத்தல் கூடும். மணிக்கொடி எழுத்தாளர் குழாத்தைச் சேர்ந்தவரும் எழுத்து இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அத்தகவையர்களில் குறிப்பிடத்தக்கவர்.  தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே அவருக்கு விருதுகொடுக்க முன்வந்தன;  ஆனால் அவரோ அவ்விருதினை மறுத்தார். அம்மறுப்பின் வழியாக அவ்விருதிற்கும் அவ்வமைப்பிற்கும் பெருமை சேர்ந்தது.  அத்தகு சான்றோரும் தகமைசால் அமைப்பும் பெருக்கும் வரைவிருது வேண்டுமா விருதுஎன்னும் வணிக்குரல் இலக்கியத் தெருவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அதனை, “எனக்கு ஒன்றும் அவருக்கு ஒன்றும் கொடுஎனக் கேட்டு வாங்குபவர்கள் வலம்வந்துகொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் அவர்களை இனங்கண்டு ஒதுக்கப் பழக வேண்டும்!


கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...