காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு

 


மார்க்சியச் செயல்பாட்டாளரான பர்வதவர்த்தினி பெண்ணுரிமைக் களத்திலும் குழந்தைகள் உரிமைக் களத்திலும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர். நாடக நடிகர், ஆய்வாளர், உரையாளர் எனப் பன்முகங்கொண்ட அவரின் இன்னுமிரு முகங்கள் எழுத்தாளர், கவிஞர் ஆகியன. முந்தைய மூன்று முகங்களும் அவரது களச்செயற்பாட்டில் வெளிப்படுபவை. பின்னிரு முகங்களும் அவரது முகநூற்பதிவுகளின் வழியே பலருக்கும் தெரியவந்தவை.  அவர் தனது களப்பணி, செலவு (பயணம்), உரையாடல் ஆகியவற்றில் தான் பெற்ற பட்டறிவுகளை அவ்வவ்பொழுது முகநூலில் தொடர்ந்து பதிகிறார்; அவற்றின் வழியாக மற்றவர்களோடு உரையாடி தன்னையும் பிறரையும் செழுமைப்படுத்துகிறார். அத்தொடர்வினையில் குழந்தைகள் தொடர்பாக முகநூலில் அவரெழுதிய 52 பதிவுகளின் தொகுப்பேகாற்றின் நிறம் பச்சை; உப்பின் நிறம் சிவப்புஎன்னும் நூல். இவற்றுள் சில பதிவுகள் சிறுகதைக்கான களங்கள்!

இலிட்டில்சு (Littles) என்னும் அறக்கட்டளையின் வழியாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் வாழும் விளிம்புநிலைக் குழந்தைகளின் குழந்தைமையையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அவ்வூர்களில் குழந்தைகள் நடுவங்களை அமைத்துள்ளார் இந்நூலாசிரியர். அந்நடுவங்களுக்கு வருகைதரும் குழந்தைகளிடமிருந்தும் தனது வெளியூர்ச் செலவுகளின்பொழுது கண்ட குழந்தைகளிடமிருந்தும் தன் இரு குழந்தைகளிடமிருந்தும் அவர் பெற்ற பட்டறிவையும் கற்றல்களையும் பேச்சுநடையும் எழுத்துநடையும் விரவிவர எழுதப்பட்டுள்ள இப்பதிவுகள் குழந்தைகளின் அறிவார்வம், அறிவுக்கூர்மை, கரவின்மை,  பக்குவம், பாடுகள், வாதைகள் ஆகியன போன்றவற்றைப் பேசுகின்றன. 

குழந்தைகளின் மனநிலையிலிருந்து குழந்தைகளோடு உரையாடுவது ஒரு கலை. அங்ஙனம் உரையாடுவோரையே குழந்தைகள் தம் தோழராக ஏற்றுக்கொண்டு தமது அகவுலகை அச்சமின்றித் திறந்துகாட்டுகின்றனர். இயல்பிலேயே உற்சாகமும் குதூகலமும் துலங்க வளையவருபவரான நூலாசிரியர் வெகுஇயல்பாகத் தனக்கும் குழந்தைகளுக்கும் இடையே எழுந்துநிற்க வாய்ப்புள்ள தடைகளை எல்லாம் ஒரு புன்னகையில், ஒரு வினாவில், ஒரு கையசைவில் சில நொடிகளில் கடந்து அவர்களோடு நெருங்கும் நுட்பந்தெரிந்தவர். அதனால்தான், பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சி வருவதற்குள் முன்னிருக்கையிலிந்த மூன்று அகவைக் குழந்தைக்கு அவரால் தோழராகிவிட முடிகிறது; குழந்தைகளாலும் அவரோடு தோழர்களாகிவிட முடிகிறது.

மனத்துக்கண் மாசிலரான அக்குழந்தைத் தோழர்கள் நூலாசிரியருக்கு விதவிதமாய் வாழ்க்கைப்பாடம் கற்பிக்கிறார்கள். ஒரு குழந்தை, வீட்டுப்பாடத்தை எழுதாமல் நடித்துக்காட்டுகிறார். இன்னொருவரோ அவருக்குக் கற்றுக்கொடுக்க முனைந்த தன்னார்வாளரைத் தளரவைத்து தனது வீட்டுப்பாடங்களை தன் தம்பியை எழுதப் பணித்துவிட்டு படுத்துக்கொள்கிறார். வேறொருவரோ தன்னை ஒரு செடியாக உருவாகித்து அவர் ப்ப்பூ என ஊதும்பொழுது வாயிலிருந்து வெளிவரும் காற்றும் பச்சைநிறம் எனக் கற்பனைச்சிறகை விரிக்கிறார்.  பிறிதொரு குழந்தையோ பாடம் எல்லாவற்றையும் படபடவென ஒப்பித்துவிட்டு, எழுதிக்காட்ட மறுக்கிறார்.  சாக்லெட்டு வண்ணத்தாளோடு மரத்தில் முளைக்குமா, குளத்திலிருக்கும் பொழுது ஓடி ஒளியும் மீன் கண்ணாடித் தொட்டிக்குள்ளிருக்கும்பொழுது தான் மீன் என்பதையே மறந்துவிடுகிறதா, ஆண்டுதோறும் வெயில்காலத்தில் ஏன் மீனாட்சிக்குத் திருமணம் செய்கிறார்கள் என வாய்ப்புக் கிடைக்குமிடங்களில் எல்லாம் ஆய்வுசெய்கிறார் இன்னொரு குழந்தை.

வளரிளம் பருவத்தைக்கூட எட்டாத அக்குழந்தைத்தோழர்கள் நுண்ணுணர்வு கொண்ட நனிநாகரிகளாகவும் இருக்கின்றனர். ஒருவர், நூலாசிரியரின் வீட்டு வாசலில் வந்துநிற்கும் நாய்க்கு ஒரு பெயரைச்சூட்டிவிட்டு அப்பெயர் அந்த நாய்க்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டுச் சொல்லும்படி வேண்டுகிறார். மற்றொருவரோ, தந்தையை இழந்த நன்றாகப்படிக்கும் தன் நண்பரை நடுவத்திற்கு அழைத்துவந்து அறிமுகம் செய்துவிட்டு அந்நண்பர் அப்பால் சென்றதும் அவரது திறனையும் துயரையும் அன்பாய் மொழிகிறார். 

உண்டுறைவிடப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் ஏக்கம், மலைப்பள்ளியில் படிக்கும் ஆதிவாசிக் குழந்தை பள்ளிக் காலங்கடந்து செல்லும்பொழுது அப்பள்ளி ஆசிரியர்கள் அவரைத் திட்டாததன் காரணம், விடுதியைத் திறக்காமலேயே 12ஆம் வகுப்பிற்குச் சிறப்பு வகுப்புத் தொடங்கும் பள்ளியால் உண்ணவும் உறங்கவும் இடமின்றி மாணவர் தவித்தல் என அரசு அமைப்புகளின் மறுபக்கத்தை குழந்தைகள் சிலர் பகிர்கின்றனர்.

அதிகமாய் விளையாடிக் கொஞ்சமாய்ப் படிக்கும் அந்நடுவக் குழந்தைகள்  பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தமது சிறுவாட்டுப் பணத்தையும் திரட்டிய நன்கொடையையும் இணைத்து புயலால் பாதிக்கப்பட்ட செருதூருக்குத் துயர்துடைக்கும் நிதியாக அளிக்கிறார்கள். வழக்கறிஞராக விரும்பும் குழந்தை ஒருவர், ‘மனந்தான் பேய்என மற்ற குழந்தைகளோடு வாதிட்டு அறிவுபுகட்டிக்கொண்டிருக்கிறார். பேருந்தில் குழந்தை தன் தோழர்களிடம் தாம் பெரியவரானதும் தண்ணியடிக்கவும் கூடாது, அம்மா பிள்ளகளையும் அடிக்கக் கூடாது, சாராயக்கடை நடத்துகிறவர்களைத்தான் அடித்துவிரட்ட வேண்டும் என்கிறார். தவறு செய்த குழந்தைகளிடமே அவர்களது தவறைச் சரிசெய்யும் பொறுப்பைக் கொடுக்கும்பொழுது அவர்கள் மிகச்சரியாய் அவற்றைக் கையாள்கிறார்கள். பெற்றோர் வாங்கிய கடனிற்காகக் கந்துவட்டிக்கொடுக்கும் ஆசிரியரின் வசவுகளைத் தாங்கிக்கொள்ளுகிறார் ஒரு குழந்தை. தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் உரிமை தனக்கே உள்ளது என நூலாசிரியருக்கு அறிவுறுத்துகிறார் அவர் மகன்.

சில குழந்தைகளின் துயரம் நூலாசிரியரின் துயரமாக மாறி அத்துயரைத் துடைக்க ஏதேனும் செய்ய வேண்டுமென அவரைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. மாணவனைப் பனைமட்டையைச் சீவிக்கொண்டு வரச்செய்து அம்மட்டையாலேயே அவனை அடித்து ஓடவைத்த பள்ளியைப்பற்றிக் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் ஒன்றில்

அறிந்தபொழுது நூலாசிரியரின் மனத்தில் வெகுளி பூக்கிறது. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி வளர்ந்து பொறுப்புள்ள இளைஞராய்த் தனக்கு முன்னர் வந்து நிற்கும்பொழுது  மகிழ்கிறார். குடிக்கு மருந்துக் கண்டுபிடிக்கத் துடிக்கும் குழந்தை தன் தாயையும் தம்பியையும் குடிகாரத் தந்தை மூட்டிய தீயில் இழந்தவள் என்பதை அறிந்து நொறுங்குகிறார். உப்பளங்களில் வேலைசெய்யும் வளரிளம் பெண்குழந்தைகள் அவர்களது பணியிடத்தில் கழிப்பறை இல்லாத்தால் படும் துயரை இவர் அறிந்த பின்னர் இவரது வீட்டிலிருக்கும் உப்பின் நிறம் சிவப்பாக இவருக்குத் தெரிகிறது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குழந்தை வழியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி கருகிச் செத்ததைக் கண்டதால் கனத்த மனத்தோடு நூலாசிரியர் கூறுகிறார், “இனியும் விழிக்காட்டி, திரும்ப  முதல்லேருந்து தொடங்க வேண்டியிருக்கும்”.

இங்ஙனம் குழந்தைகளின் விதவிதமான எண்ணங்களை, கற்பனைகளை, கதைகளை, துயரங்களைப் பேசும் இந்நூலை நீங்களும் படித்துப்பாருங்களேன்!!

எழுத்தாளர்: பர்வதவர்த்தினி; பதிப்பு: முதற்பதிப்பு; ஆண்டு: 2019 செப்டம்பர்; பக்கம்: 102+4; விலை: ரூ 100/-; பதிப்பகம்:  காலம் வெளியீடு, 25 மருதுபாண்டியர் 4ஆவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, சரவணா மருத்துவமனை அருகில், மதுரை 625 002.

உலகப் புத்தக நாள்





இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும்க்கும் தாம் வாழும் சூழலிலிருந்து தமது இயல்பான அறிவைப் பெறுகின்றனர்; தாம் விரும்புகிற, தமக்குத் தேவையான அறிவை பிறரிடமிருந்து பெறுகின்றனர். அவ்வாறு பெறுவதற்குப் புத்தகங்கள் பெரிதும் துணைநிற்கின்றன. இங்ஙனம் அவர்கள் பெற்ற இயல்பறிவும் புத்தக அறிவும் அவர்களை இக்காட்டுகளிலிருந்து காக்கின்றன. எனவேதான், மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  யாவுள முன்நிற் பவைஎன்கிறது குறள்.  எனவேதான், அறிவைப் பரப்புவதில் ஆற்றல்மிகு காரணியாகவும் அதனைப் பாதுகாப்பதில் திறன்மிகு கருவியாகவும் புத்தகம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறதுஎன்று கூறி ஏப்ரல் 23ஆம் நாளைஉலகப் புத்தக நாளும் காப்புரிமை நாளும்” (World Book and Copyright Day) என்று அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO).  1995ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் முதல் நவம்பர் 16ஆம் நாள் வரை ஃபிரான்சு  (France) நாட்டின் தலைநகரான பாரிசு (Paris) நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின்  28ஆவது மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  1616ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் 23ஆம் நாளில்தான் உலகப்புகழ்பெற்ற படைப்புகளை வழங்கிய இன்கா கார்சிலோசோ டி லா வேகா (Inca Garcilaso de la Vega 12.04.1539–23.04. 1616), மிகுவல் டி செர்லாண்டசு (Miguel de Cervantes 29.04.1547– 2.04.1616) என்கிற இரண்டு ஃசுபானிய (Spanish) எழுத்தாளர்களும் வில்லியம் சேசுபியர் (William Shakespeare 26.04.1564–23.04.1616) என்கிற ஆங்கிலப் பாவலரும் மரணமடைந்தனர் என்பதையும் அந்த அறிக்கை நினைவுகூர்ந்தது.


கார்சிலோசோ டி லா வேகா
வில்லியம் சேசுபியர்
மிகுவல் டி செர்லாண்டசு

புத்தகம் கல்விசார்ந்த அறிவைப் பரப்புவதோடு, உலகம் முழுவதுமுள்ள வெவ்வேறு பாண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகிறது. அதனால் ஒரு புத்தகமானது தன்னைப் படிக்கும் ஒருவரின் நடத்தையில் புரிதல் (Understanding), பொறுத்தல் (Tolerance), உரையாடல் (Dialogue) ஆகியவற்றின் வழியாக தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.  எனவே, புத்தகம் படித்தலையும் பரப்புதலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடுஉலகப் புத்தக நாள்அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்நாளில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் புத்தக அறிமுகக்காட்சியும் புத்தக விற்பனைக்காட்சிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இங்ஙனம்  உலகப் புத்தக நாளை ஐகஅபஅமைப்பு (UESCO) அறிவிப்பதற்கு முன்னரே ஃசுபெயின் நாட்டில், ஏப்ரல் 23ஆம் நாள் புத்தக நாளாக 1926ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. பாலசுதீனியா போர்வீரான சார்சு (George) கிறித்துவத்தைப் பின்பற்றியதால் கி.பி.303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் கொல்லப்பட்டார். எனவே, அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அந்நாளை தூய சார்சு நாளாக (Saint George Day) கிறித்துவர்கள் பலர் கடைபிடிப்பர்.  அந்நாளில் அன்பர்களும் காதலர்களும் உடன்பணியாற்றுபவர்களும் தமது அன்பின் அடையாளமாக இரோசா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.  அதனைக் கண்ட, ஃசுபெயின்  நாட்டிலுள்ள பார்சிலோனா நகரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், “‘இரோசா அன்பின் அடையாளம்; புத்தகம் அறிவின் அடையாளம்’; எனவே பெண்கள் இரோசா மலர்களையும் ஆண்கள் புத்தகங்களையும் பரிசளியுங்கள்என்று 1923ஆம் ஆண்டில் வேண்டினார். அன்பும் அறிவும் இணைக்கப்பட்டதால் அக்கருத்து பலரையும் கவர்ந்தது; புத்தகங்கள் ஒவ்வோராண்டும் பரிமாறப்பட்டன. அதன் விளைவாக 1926ஆம் ஆண்டு முதல் ஃசுபெயின் நாட்டில் அந்நாள், இரோசா நாள் என்றும் புத்தக நாள் என்றும் அழைக்கப்பட்டது.  இங்ஙனம் ஒரு வணிகரின் சிந்தனையில் தோன்றிய புத்தக நாள், இன்று உலகு தழுவிய நாளாக விரிந்திருந்திருக்கிறது.




ஆனால், ஏப்ரல் 23ஆம் நாளை இங்கிலாந்தும் அயர்லாந்தும் புத்தக நாளாகக் கடைபிடிக்கப்பதில்லை. அந்நாள், தூய சார்சு நாளாகவும் ஈசுடர் விடுமுறைக் காலத்தில் அமைந்திருப்பதுமே அதற்குக் காரணம். மாறாக, 1998ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமை அங்கு புத்தக நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.  1998 மார்ச்சு 5ஆம் நாள் இலண்டன் நகரிலுள்ள குலோப்பு அரங்கில் (Globe Theatre) இங்கிலாந்துஅயர்லாந்தின் புத்தக நாளை அந்நாட்டின் அந்நாளைய தலைமையமைச்சர் தோனிபிளேயர் அறிவித்தார். அப்பொழுது இங்கிலாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுண்டும் அயர்லாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் 1.50 ஈரோவும் வழங்கப்பட்டன. அவர்கள் அப்பணத்தைக்கொண்டு தாம் விருப்பும் புத்தகங்களைக் கடையில் வாங்கிக்கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. எனினும் உலகமே கடைபிடிக்கும் புத்தக நாளைப் புறக்கணிக்க விரும்பாதஇரீடிங் ஏசென்சி’ (Reading Agency) என்னும் இங்கிலாந்திலுள்ள அல்லரசு அமைப்பு ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23ஆம் நாளின் இரவைபுத்தக இரவுஎனக் கடைபிடிக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவரிடையே அப்பழக்கத்தை உருவாக்குவதே அந்த அமைப்பின் நோக்கம். எனவே, அந்நாளில் இங்கிலாந்து முழுக்க வெவ்வேறு நிறுவனங்களின் வழியாக சிறைச்சாலைகள், நூலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காப்பகங்கள், புகலிடங்கள் என வெவ்வேறு இடங்களில் புத்தகங்கள் அவ்வமைப்பால் வழங்கப்படுகின்றன. மேலும் ஆர்வம்மிக்கவர்கள் தங்களது சொந்தப் புத்தகங்களை தாங்கள் வாழும் பகுதியிலுள்ள பலருக்கும் வழங்குகிறார்கள்.  

இங்ஙனம் உலகப் புத்தக நாள் உலகெங்கும் வாழும் புத்தக ஆர்வலர்களால் பெருவிருப்போடு கடைபிடிப்பதைக் கண்ட ஐகஅபஅமைப்பு, உலகப் புத்தகத் தலைநகர் என்னும் கருத்தை 2001ஆம் ஆண்டில் உருவாக்கியது. அதன்படி ஒவ்வோராண்டும் ஒரு நகரம் உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் அந்த ஓராண்டு முழுவதும் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுகின்றனஅவ்வகையில் இதுவரை  மாட்ரிடு (2001), அலெக்சாண்ட்ரியா (2002), புதுடெல்லி (2003), அன்வர்சு (2004), மாண்ட்ரீல் (2005), உடூரின் (2006), போகோடா (2007), ஆம்சுடெர்டாம் (2008), பெய்ரூட்டு (2009), பியூசோசு ஏர்சு (2011), ஈரவன் (2012), பாங்காக்கு (2013), போர்ட் அர்கோர்ட்டு (2014), இன்சியான் (2015), இராக்லாக்கு (2016), கந்யாக்ரீ (2017),  ஏதென்ஸ் (2018), சார்சா (2019) ஆகிய நகரங்களில் பன்னாட்டு பதிப்பாளர்கள் சங்கம் (International Publishers Association), பன்னாட்டு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions), பன்னாட்டு புத்தக விற்பனையாளர் கூட்டமைப்பு (International Booksellers Federation) ஆகியவற்றோடு இணைந்து உலகப் புத்தகத் தலைநகர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டிற்கான தலைநகர் கோலாலம்பூர் ஆகும். திபிலிசி (சார்சியா) 2021ஆம் ஆண்டிற்கான புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டிருக்கிறது; 2022ஆம் ஆண்டில் புத்தகத் தலைநகராக விளங்க விரும்புவோரிடமிருந்து இப்பொழுது வேட்புகள் பெறப்படுகின்றன.




எனவே, உலகெங்கும் போற்றப்படும் புத்தகங்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கின்றன; எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன.  தலைமுறை தலைமுறையாக அறிவோட்டத்தை நிகழ்த்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளுக்கிடையே புரிதலை உருவாக்குகின்றன. எனவே,  படிங்கள் . . . எப்பொழுதும் நீங்கள் தனிமையை உணரமாட்டீர்கள்!


நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...